Quantcast
Channel: கபீரின் கனிமொழிகள்
Viewing all 59 articles
Browse latest View live

உள்ளவர் சிவாலயம் செய்வர்

$
0
0
மந்திரி ஒருவர் தலைமையில் திருமணம் நடைப்பெற்றது. மதுவரசா என்னும் அந்தணரின் பெண்ணுக்கும், ஹரளய்யா என்னும் தாழ்குலத்தவர் மகனுக்கும் திருமணம். அவர்கள் இருவரும், மந்திரியார் நடத்தி வந்த “அனுபவ மண்டப”த்தின் உறுப்பினர்கள். அது சிவனடியார்களுக்கான அமைப்பு. அவர்கள் சிவசரணர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

அங்கே ஜாதி வேற்றுமைகள் இல்லை. யாவரும் தமக்கென ஒரு தொழில் செய்து பிழைக்கவேண்டும் ஜங்கமர்கள் எனப்படும் ஊரூராய் யாத்திரை செய்யும் சிவனடியார்கள் நலன் பேண வேண்டும். இறைவன் முன்பு யாவரும் ஒன்று என்னும் கொள்கையை ஏற்கும் எவரும் அதில் இணைந்து பணியாற்றலாம்.

இன்றைய நிலையாயிருந்தால் அதற்கு கிடைத்திருக்கும் முக்கியத்துவமும் விளம்பரமும் வேறு. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன் அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால் மந்திரியோ அறிவிற் சிறந்தவர் மிக உயர்ந்த சிவனடியார். மன்னரின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். போதாதற்கு அனுபவ மண்டபத்தின் செலவுகள் எதுவும் அரசாங்கத்தை எதிர்பார்த்தது அல்ல. அடியார்களின் உழைப்பில் வளர்ந்தது அது. ஆகையால் அது வரை எதிர்ப்புகளில் அதிக வலுவிருக்கவில்லை.

அந்த அமைப்பின் சட்டதிட்டங்கள்படி அந்தத் திருமணம் முழுவதுமாக ஏற்புடையதானது. ஆனால் வெளியே இருப்பவர்களுக்கு -முதன் முறையாக ஜாதிவிட்டு ஜாதி- திருமணம் நடந்த பொழுது அது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டியதொன்று என்று பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதில் மந்திரியாரின் எதிரிகளுக்கு பெரும்பங்கு இருந்தது. பலத்த வாத பிரதிவாதங்களுக்குப் பின் அரசன் மந்திரிக்கு அனுபவ மண்டபத்தைக் கலைத்துவிட்டு அரசாங்க அலுவல்களில் கவனம் செலுத்துமாறு ஆணயிட்டான்.

பதவிக்காக அலைபவரா மந்திரி? பதவியைத் துறந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து சிவசரணர்கள் துன்புறுத்தப்பட்டதும் கொல்லப்பட்டதும் பிஜாலா மன்னனின் ஆட்சிக்கு ஒரு பெரும் களங்கமாகும்.

மனம் உடைந்த மந்திரியார் 'கூடல சங்கம தேவா' நீயேத் துணை யென்று சிவனடியார்களோடு இணைந்து தன் கடைசி காலத்தை கழித்தார்.

கிருஷ்ணா நதியுடன் மலப்பிரபா நதி கூடுமிடம் கூடல சங்கமம்.

(படம் நன்றி : விக்கி பீடியா)

அந்த புரட்சிகரமான மந்திரியின் பெயர் கிராந்தி பஸவேசுவரா ! கி.பி.1132- 1196 (கிராந்தி என்றால் புரட்சி என்று பொருள்)

12ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கர்நாடக மாநிலத்தில் சாளுக்கியர்கள்ஆட்சியில் பிஜாலா என்பது ஒரு குறுநில அரசு. அதன் தலைநகர் கல்யாண். அந்த சமஸ்தானத்தில் ஒரு மிகப்பெரும் ஆன்மீக ரீதியான சமூகப் புரட்சியை உண்டு பண்ணியவர் பஸவேசுவரர். மேற்குலத்தில் பிறந்திருப்பினும் தன் மனதுக்கு ஒவ்வாமல் போன வழி முறைகளைத் துறந்து பதினாறு வயதிலேயே சிவனடியார்கள் குழுமத்தில் சேர்ந்து குரு சங்கமேசுவரரின் உபதேசம் பெற்றவர். கூடல சங்கமத்தில் பலவருடங்கள் அவர்களுடனே இருந்து ஆன்மீக சாதனை செய்தவர். சிவனே எல்லாமுமாய்க் கண்டவர்.

அரச வாழ்வைத் துறந்து எவ்வகை நிதியமும் இல்லா சிவனடியாருடன் வாழ்வைக் கழித்த பஸவேசுவரர், கபீர்தாஸரின் ஒரு ஈரடியை நினைவூட்டுகிறார்.

राम जपत दरिद्रि भला, टूटी घर की छान ।
कंचन मन्दिर जारि दे, जहा न सतगुरु ज्ञान


வறியவனின் இராமசெபம் நன்று, வசிப்பது(ம்) அவன் ஓட்டைக் குடிசையிலே

எரித்தல் தகுமே பொன்மாளிகையும், தம்குரு மொழி செபிக்காது கழித்திடினே


பொன்மாளிகை ஆயினும் எரித்து விடு என்று மிகவும் கடூரமாக சொல்லியிருக்கிறாரே என்று தோன்றலாம்.

ஒரு மாணவன் எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளாது தப்பும் தவறுமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு வந்தால் அவன் ஆசிரியர் அவனை எப்படி கண்டிப்பார் ?.

“உன் ’நோட்’டை குப்பையில போட்டுக் கொளுத்து

சில ஆசிரியர்கள் வெளித்தோற்றத்திற்கு கண்டிப்பு மிக்கவர்களாகத் தோன்றினாலும் உள்ளே அன்பு தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

உண்மையை எவ்வளவு எடுத்துக் கூறினும் புரிந்து கொள்ளாத மனிதர் போக்கை கண்ட மன உளைச்சலில் கபீர்தாஸ் பொன் மாளிகையானாலும் எரித்து விடுஎன்று சொல்லியிருப்பதாக கொள்ளலாம். அன்புக்குக் குறைவில்லை, உளைச்சலின் வெளிப்பாடு.

குருவின் தொடர்பு அல்லது அருள் இல்லாத இடம் பொன்மாளிகையாக இருந்தாலென்ன கோவிலாக இருந்தாலென்ன, அது பயனற்றதே. இதே கருத்தை திருநாவுக்கரசரும் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.



சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்
அல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்த அழுகு தொழு நோயராய்
ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக்கரந்தார்க் அன்பராகில்
அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே

செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரனிடம் நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் உண்டு. அவற்றை வண்டோகை, மனோகை, பிங்களிகை, பதுமை, சங்கை, வேசங்கை,காளை, மகாகாளை, சர்வரத்னம் என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.(http://sivanarul-sivamayam.blogspot.com/).

அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை சங்கநிதி பதுமநிதி என்னும் என்னும் பெருநிதிகள். பல கோடிக்கணக்கான பொன் மதிப்புப்பெற்றவை. அவைகள் கிடைக்கப்பெற்றாலும் மகாதேவருக்கு அவர் அடியவர் இல்லையென்றால் எமக்கு அது தேவையில்லை. அதைவிட இறந்த பசுத்தோலை உரித்துத் தின்னும் புலையரோ அல்லது தொழுநோய் பீடித்தவரானாலும் அவர்களுக்கு சிவனிடத்தில் அன்பு இருந்தால் அவர்களே எமது கடவுள் என்று திருத்தமாகக் கூறுகிறார் அப்பர் பெருமான்.

(கபீருடைய ஈரடிக்கு பொருத்தமான தமிழ் அருளாளர் பாடல் ஒன்றை சிந்தித்துக் கொண்டிருந்தபோது மேற்கண்டப் பாடல் மின்னஞ்சலில் ரத்னமாலைக் குழுமக் கட்டுரை ஒன்றில் வந்த போ்து அவனருள் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்ற வியப்பு ஏற்படுகிறது )

அப்பர் சுவாமிகள் மற்றும் கபீரின் வாக்கை வாழ்ந்து காட்டியவர் பஸவேசுவரர். அடியார்களின் மகிமையை வாழ்நாளெல்லாம் போற்றி வளர்த்தவர். அவருடைய மிகப்பிரபலமானப் பாடல் ஒன்று "உள்ளவரு ஷிவாலயவ மாடுவரு" .

உள்ளவர்கள் சிவாலயம் செய்வார்கள்
என்னால் செய்ய முடிவதும் என்னே- ஏழைநான்


என்னுடைய கால்களே தூண்கள்

தேகமே கருவறை

சிரமே பொற்கலசமாகும் (ஐயா)


கூடல சங்கம தேவா கேளய்யா

ஸ்தாவரத்திற்கு அழிவுண்டு

ஜங்கமத்திற்கு அழிவில்லை !

(ஜங்கமம் என்பது ஒரு இடத்தில் நில்லாது சிவக்ஷேத்திரம் செல்லும் அடியார்களை குறிப்பது )

என்னுடைய உடலே உனக்கு ஆலயம் என்று சொல்லியிருப்பது உள்ளம் பெருங்கோவில் ஊனடம்பு ஆலயம் என்கிற திருமூலர் பாடலையும் நினைவூட்டுகிறது.

இறைவனுக்கு மனிதர்களின் பகட்டுத் தேவையில்லை. வைரமுடியோ, பொன்னால் வேய்ந்த ஓடுடைய கூரையோ கேட்கவில்லை. அவன் வேண்டுவதெல்லாம் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. அதனால் தானே மனதால் மிகவும் உழைத்து நீண்ட நாட்கள் கட்டிய பூசலாரின் திருக்கோவிலுக்கு முதலிடம் கொடுத்து தொண்டை மன்னன் கட்டிய கோவில் குடமுழுக்குக்கு வேறு ஒரு நாள் குறிக்குமாறு சொன்னான்.

நின்றவூர்ப் பூசல் அன்பன்
நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து
நாளைநாம் புகுவோம் ;நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில் கொண்டருளப் போந்தார்

ஆம் பூசாலார் தம் உள்ளுக்குள்ளே சிவாலயம் செய்தார். உள்-அவரு சிவாலயவ மாடிதரு.(செய்தார்)என்று பசவேசுவரர் பாடலை சற்று மாற்றிப்பாடினாலும் வெகு பொருத்தமே.

கடவுளின் பக்தியில் தோய்ந்த மகான்கள் சொல்லும் யாவும் சத்தியமாய் நின்றுவிடுகின்றன.

பசவேசுவரைப் பற்றி மேலே தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.


மூப்பெனும் நாய், காலனாம் வேடன்

$
0
0
அரச போகத்தைத் துறந்து உண்மையைத் தேடி புறப்பட்டார் சித்தார்த்தர். பல கடுமையானத் தவமுறைகளை முயற்சி செய்து உடலும் உள்ளமும் சோர்ந்து போயிருந்த நிலையில் வழியில் பாடிக் கொண்டே சென்ற பெண்மணி ஒருவரின் பாடல்வரிகள் அவருக்கு முக்கியப் படிப்பினையை தந்ததாகக் கூறுவர்.

”இசை வேண்டின் யாழில் அதி இறுக்கமானக் கம்பிகளும் கூடாது, இறுக்கமில்லாக் கம்பிகளும் உதவாது. அளவோடு இறுக்கிய கம்பிகளே நயமான இசைத் தரும் கருவியாகும்”

அது மனித உடலுக்கும் பொருந்துவதாகக் கருதி தன் வழிமுறைகளை மாற்றி கொண்டாராம். அரச வாழ்க்கை அவருக்கு இறுக்கமில்லா கம்பியின் நிலை. அது ஞானத்திற்கு இசைவாகாது. பின்னர் உக்கிரமான உடலை வருத்திக் கொள்ளும் தவம். இதுவும் ஞானத் தேடலில் உதவாது. திருமூலர் சொல்வது போல் உபாயமாக உடலைப் பேண வேண்டும். உண்பது உறங்குவது பேசுவது போன்றவற்றில் மிதமானப் போக்கை கைகொண்டால் உடல் நல்ல வழியில் இருக்கும்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே
(திருமந்திரம்)


கபீர் இதே கருத்தை ஒரு இசை சாதனத்தை உவமையாக வைத்துச் சொல்கிறார். உடல் தான் கருவி. ஆன்மா அதை இசைப்பவன். கருவியின் நரம்புகள் சரியான முறையில் பராமரிக்கப் படாவிட்டால் கருவியின் பயன் என்ன ? அதை இசைப்பவனாகிய ஆன்மா அதை விட்டு போய்விட்டால் பாவம் அந்த உடலால் பிறருக்கு பயன் தான் என்ன ?

कबीर जंत्र न बाजई, टूट गये सब तार ।
जंत्र बिचारा क्या करै, चला बजावन हार ॥

கருவியும் இசைக்காது கபீரா, அறுந்துள நரம்புகள் யாவுமே
கருவியும் பாவம் என்செயும், இசைப்பவன் போன பின்னே

அருணகிரியாரும் அந்த பயனற்ற நிலைக்கானக் காரணத்தை விரிவாகவே விளக்குகிறார்.

இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி


[ரத்தமும் சீழும், மூளை, எலும்பு, உள்ளே இருக்கும் மாமிசம், பசிய
குடல், நரம்புகள், இவைகளைக் கொண்டு ஆக்கப்பட்டு
அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன
வீடாகிய உடலில் நுழைவு பெற்று, ]


இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ... டிடமாயா


[அதில் இருந்துகொண்டு இன்பகரமாகப் பேசும்
சூதான மொழிகள் அதிகமாகி கிளைத்து எழுகின்ற
பொருளாசை என்கின்ற பறவை பிறர் தெளிவாக எடுத்துச்
சொன்னாலும் தெளியாமல் மேலும் மேலும் பறப்பதாயிருக்க]
,

பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப்

[உலக மாயை மிகுந்து, உண்டாகின்ற வாதம், சுரம், பித்தம் இவைகளின்
வேதனைகளோடு பல வகையான வாயுக்களும் அதிகரித்து,இருக்கின்ற
உடல்வலிமையும் சில தினங்களுக்குள் ஒடுங்கி, தடி மேல் ]


பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
குலத்தெ னும்படி கூனிய டங்கிப்
பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ....சடமாமோ

[கை ஊன்றுவதாகி, பல நாட்கள் செல்ல குரங்குக்
கூட்டத்தவன் என்று சொல்லும் படியாக உடல் கூனி, சத்துக்கள்
அடங்கி, மரணம் வந்திடும் சமயத்தில் பயப்படுவதான
இந்த உடலால்ஏதேனும் பயன் உண்டோ? ]

{விளக்கவுரை நன்றி kaumaram.org }

பிறந்த கணத்திலிருந்து நம்மை மரணம் துரத்திக் கொண்டிருக்கிறது. காலன் என்னும் வேடனுக்கு நம்மை பலமிழக்கச் செய்யும் தந்திரம் மிக நன்றாகவேத் தெரியும். வேடனொருவன் தன்னுடைய நாயை ஏவிவிட்டு முயலை பலமிழக்க செய்வது போல் இரவு பகல் எனும் நாய்கள் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. வேடன் பிடியில் எப்போது வேண்டுமானாலும் சிக்கிக் கொள்ளலாம். அவன் நாய்கள் துரத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கவும் நிற்கலாம். சோர்ந்து போய் கடைசியில் அவன் காலடியிலே தானே விழவேண்டும் !! அப்படி ஒரு உதாரணத்தை கபீர் நமக்கு சொல்லிக்காட்டுகிறார்.

முதுமை விரட்டுது நாயைப் போலே, இளமையாம் முயலோடுது நித்தமே
எமனெனும் வேடனும் எதிரே, இடையில் நீ நாடும் சுகமும் மித்தையே

அந்த வேடத்தினிடத்தில் ஒரு நல்ல குணம் உண்டு. இடைவிடாது இறைவனை எண்ணிக்கொண்டு ஓடினால் அவனே நாய்களின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றிவிடுவான். இரவு பகலற்ற ஒரு வெளியில் கொண்டுபோய் சேர்த்துவிடுவான். அங்கே நாய்களின் பயம் கிடையாது. கணக்கணமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய அவசியமும் இல்லை. அது மார்க்கண்டேயர் காலத்தில் அவனுக்கு இடப்பட்டக் கட்டளை.

பதத்தெழு மந்திர(ம்) அஞ்செழுத்(து) ஓதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி(ர்) உண்ண, வெகுண்(டு)அடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே


பஞ்சாட்சர மந்திரத்தை மிகுந்த விருப்பத்தோடு செபிக்கின்ற பெருமையுடைய சிறுவனின் இன்னுயிரைக் காப்பதற்காக மிகுந்த சினத்தோடு எழுந்து, கண்களினின்று இரத்தம் சொரியும் வகையில் எமனை உதைத்துத் தள்ளியப் பெருமை உடையவன். திருக்கடவூரில் உறைபவன். அந்த உத்தமன் திருக்கழலை தொழுவோம் என நாவுக்கரசர் போற்றுகிறார்.

நிலையாமையை நினைவில் நிறுத்தி மரணபயம் வெல்வதற்கு மணிகண்டன் தாளே கதி.

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைவான்

$
0
0
பக்குவமுற்ற சீடனை குருவே வந்து ஆட்கொள்கிறார் என்ற பொதுவான நம்பிக்கை ஆன்மீகத்தில் வலுவாகவே உண்டு. ஒரு சிலருக்கு இது எதிர்பாராதவிதமாக நடைபெறுவதுண்டு என்றும் பலருக்கு ஆண்டாண்டு காலமாய் தேடியப் பின்னரே வாய்க்கிறது என்றும் அறிகிறோம். எதிர்பாராத விதத்தில் நடைபெறும் போது அதை பிந்தைய சென்மங்களில் செய்த முயற்சியின் தொடர்ச்சி என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது.

எப்படியாயினும் சீடன் பக்குவமுற வேண்டும்.

மேல்தோல் பச்சையாய் இருக்கும் வரை காய். அதில் சற்றே மஞ்சள் காணத் துவங்கும் போது கனியாகிக் கொண்டிருக்கிறது என்கிற குறிப்பு தெரிகிறது. அதைப் பறித்து அரிசி டப்பாவுக்குள்ளோ அல்லது வைக்கோற்புல் கூடைக்குள்ளோ வைத்துப் பழுக்க வைப்பர். இதை மூட்டம் போடுவது என்று சொல்லக் கேள்வி. அதை நல்ல முறையில் செய்வதற்கும் அந்தத் துறையில் தேர்ச்சி இருக்க வேன்டும். குரு ஒருவருக்கே சீடன் கனிந்து கொண்டிருக்கும் பக்குவத்தை முறையாக புரிந்து கொள்ள முடியும்.

பத்திரகிரியார் பாடல் ஒன்று :

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல் லாமறிந்து
குருவையறிந் தேநினைந்து கும்பிடுவது எக்காலம் ?

( தெரிவை terivai : (page 2036) (யாழ். அக.) 4. Appearance, visibility; தோற்றம். (W.) 5. That which is known or ascertained; அறியப்பட்டது )

இதில்காய் கனிந்து கொண்டிருக்கும் நிலையை குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல் ’எல்லாமறிந்த அந்த குரு என்னை அடையும் நாள் எப்போதோ’ என்ற காத்திருக்கும் மன அடக்கத்தையும் காட்டுகிறது.

நல்ல சீடர்களாக அறியப்பட்டவரின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அப்பேற்பட்டப் பக்குவம் என்பது என்ன என்பதை ஓரளவு கண்டு கொள்ளலாம்.

அப்படி ஒரு நல்ல சீடர் சுப்பிரமணியன் என்னும் தமிழ் புலவர். உ.வே. சாமிநாதையர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்ற தமிழறிஞர்களால் சங்ககால இலக்கியங்களுக்கு நிகரான தமிழ் பாடல்கள் படைக்க வல்லவர் என்று பாராட்டப் பெற்றவர்.

அவரைத் தேடி இரண்டு புத்தகங்கள் அவரது மாமனார் வழியே வந்தடைந்தது. குருவின் திருவுள்ளம் யார் மூலம் செயல்படும் என்பதை யாரும் அறியார். பிற்காலத்தில் தன் மகளை விட்டு விட்டு மனையைத் துறந்து பிட்சாடனம் போவதற்கான வழியை அவரே திறந்து விட்டார்.

அருணாசல ஸ்துதி பஞ்சகம்மற்றும் நான் யார்என்ற தலைப்புடைய புத்தகங்களே அவை. சுப்பிரமணியன் போய் முருகனார் என்ற சீடர் கிடைப்பதற்கு வழி செய்தன.

ஸ்ரீ ரமண பகவானின் மிகப்பிரியமான பக்தருள் ஒருவர் முருகனார். சீடன் என்பதன் இலக்கணத்தை அறிய வேண்டுமென்றால் அது முருகனாரின் வாழ்க்கையை அறிவதே எனலாம்.

சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார் சுப்பிரமணியன். பகவானைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த போதெல்லாம் உடனே ஆஸ்ரமத்திற்கு வந்துவிடுவார். ஆனால் திரும்பிப் போகும் போது தேனில் விழுந்த வண்டைப் போல சிக்கித் தவிப்பார்.

கிளம்பிச் சென்றவர் சற்று நேரத்தில் திரும்பி வந்து நிற்பார். இதைக் கண்ட பகவான் யாரையாவது அவர் கூடவே அனுப்பி ரயில்வே ஸ்டேஷனில் விட்டு வரும்படி செய்வார். அப்படி அனுப்பியும் சில நேரங்களில் ஆஸ்ரமத்திற்கு திரும்புவதுண்டு .

இரயில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் தன்னை மறந்த நிலையில் பிளாட்பாரத்தில் மேலும் கீழும் உலவிக் கொண்டு இருப்பார். அவரது நிலை பரிதாபமாக இருக்கும். அதன் பின்னர் ரயில் ஏற்றிவிட்டு கிளம்பும் வரை கூட இருந்து வழியனுப்புவதை சில நண்பர்கள் வழக்கப்படுத்திக் கொண்டனர்.

அப்பேற்பட்ட மனநிலை வாய்க்காத வரையில், நம்மை ஆன்மீக சாதகர்கள் என்று சொல்லிக் கொள்ளவோ அல்லது குரு அருள் இல்லையே என்று ஏங்கவோக் கூட தகுதியுள்ளவர்களா என்ற கேள்வி மனதில் எழுகிறது.

ஸ்ரீ முருகனார் பகவான் தரிசனத்திற்கு வருவதே ஒரு வினோதம். பகவானைப் பார்த்தமாத்திரத்தில் அவர் உள்ளம் நெகிழ்ந்து உடல் ஒடுங்கி நடை தளர்ந்து விடும். அவரது பார்வை பகவானைத் தவிர வேறெதையும் பார்க்காது. இந்த நெகிழ்வுடன் பகவானைப் பணிந்துவிட்டு ஹாலில் ஒரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு பகவானைப் பார்த்த வண்ணம் இருப்பார். அவரது குருபக்தி காலத்தைக் கடந்து நிற்கிறது.

இங்கே கபீர்தாசரின் அனுபவத்தை முருகனாரில் காண்கிறோம்.

गुरु मूरति गति चन्द्रमा, सेवक नैन चकोर ।
आठ पहर निरखत रहे, गुरु मूरति की और ॥


தண்நிலவாம் குருவுருவம் சீடனுக்கு, சகோரமாய் கண்கள் தொடருது
எண்சாமம் நினைவின்றி போகுது, எல்லாம் குருவுருவில் மறந்து

எட்டு ஜாமம் போவது அறியாமல் வேறெந்த சிந்தனையுமின்றி அமர்ந்திருக்க வேண்டுமானால் அது, குரு சீடனுள் தூண்டிவிட்ட மெய்யுணர்வு அனுபவம் ஆகத்தான் இருக்க முடியும்.

அவ்வாறு அருள் நோக்கால் தம்மை மறக்க நேரிடும் சீடன், மீண்டும் மீண்டும் அதற்காக ஏங்குவதை சகோர பட்சி, நிலவின் ஒளிக்காக ஏங்குவதை ஒப்பிடுகிறார் கபீர்.

வெறும் நிலவின் ஒளியிலேயே அமிர்தத்தை உண்டு வாழ்வது சகோர பட்சி என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. பிற பறவைகள் போல புழு பூச்சிகளை உண்ணாமால், காய் கனிகளிலும் விருப்பம் கொள்ளாத பட்சி அது.

இது பூவுலக ஆகர்ஷணங்களுக்கு ஆட்படாமல் மிக உயர்ந்த ஆன்ம தத்துவத்திற்காக ஏங்கும் சீடனின் நிலையை குறிப்பிடுவதற்காக சொல்லப்படுவது. குரு அருளுக்கு பாத்திரமாவதே மிகப் பெரிய சாதனையாகும்.

இதற்கானக் காரணத்தை முருகனாரின் பாடல் ஒன்றிலேயே காணலாம். முருகனாரின் திருக்கண்ணோக்கம் (9)

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைந்தானைத் தந்நோக்கால்
நோக்குறுவார் நோக்காரா நோக்காதார் நோக்குதலால்
நோக்கரிய நோக்கானை நோக்கலுறிற் றடையாமந்
நோக்கற வேங்கடனொடு கண்ணோக்க நா(ம்) ஆடாமோ

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைந்தானை :பார்க்கும் பார்வையில் பார்ப்போனாயிருக்கும் உணர்வுருவாயிருந்து, பார்வையினூடே உள்ளத்தில் நுழைந்தானை
தந்நோக்கால் நோக்கு உறுவார் :தன்னை உணரும் மெய் அறிவினால் அன்பர்கள் காண்பார்கள்.
நோக்காரா நோக்காதார் : நிறைந்த பார்வையிலாதார் காண இயலாது.
நோக்கரிய நோக்கானை :பார்பதற்க்கரிய மெய்யறிவு உடையானைக்
நோக்கலுளில் தடையாம் :காண்பதனால் தன்னைக் காண்பதிலுள்ள தடையாயிருக்கும்
அந்நோக்கற : (அந்த நோக்கு அற) அந்த சுட்டறிவு (அகந்தை) அறவே நீங்கும்.
வேங்கடனொடு கண்ணோக்க நா(ம்) ஆடாமோ :(அத்தன்மையான) வேங்கடனை கண்டு களித்திருப்போம்.
(வேங்கடராமன் ரமணரின் இயற்பெயர்)

குருவின் அருட்பார்வை தம்மை தரிசிக்கும் அடியார்களின் விழிவழியாக ஊடுருவி சென்று, எழும்பும் அகந்தையை எழுமிடத்திலேயே அழித்து விடும் ஆற்றல் உடையது. அகந்தை அழிந்தால் எஞ்சியிருப்பது மெய்யுணர்வே. இந்த மெய்யுணர்வில் நிலைப்பட்டவர்க்கு தனக்கு அன்னியமாய் எதுவும் தோன்றாது.அப்படிப்பட்ட மெய்யுணர்விற்கு ஏதேனும் தடையிருந்தால் அதை அறவே நீக்குவதே பகவானது அருள் நோக்கு என்று கூறுகிறார்.

குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ

என்று குருவருள் பெற்ற சீடன் நிலையை பட்டினத்து அடிகள் அருட்புலம்பலில் (489) சொல்கிறார். உருவழிக்க வந்தானோஎன்பதை தன்னோக்கால் நோக்கு உறுவார்என்ற முருகனாரின் வரிகளால் உண்மை என்று அறியலாம். மெய்யுணர்வை அடைந்த நிலையில் புற உருவின் நினைவை இழப்பவன் சீடன் அன்றோ !

[Thanks for photo courtesy : davidgodman.org ] Muruganar seated on the Verandah


அவ்வாறு அவர் அடைந்த அனுபவத்தை ஒரு சிறிய நிகழ்வு மூலம் அறிகிறோம்.

வேறொரு ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் ஒருவர் அவர்களது குருவின் வழிமுறையை பகவான் ரமணரிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களது முறைப்படி குரு சிஷ்யர்களை தினமும் சில ஆயிரம் செபங்களைச் செய்யச் சொல்லி இறுதியில் அதை குருவிற்கு அர்ப்பணம் செய்யச் சொல்லுவாராம். தான் அதைத் தவறாமல் செய்து வருவதாகவும் ரமணாசிரமத்தின் முறை என்ன என்பதையும் தயங்கிய படியே கேட்டார்.

இதைக் கேட்ட பகவான் சிரித்துவிட்டு “ஓஹோ ! அப்படியா! பரவாயில்லையே! குருவிற்கு சிரமில்லாமலே நாமத்தை சிஷ்யர்கள் சேர்த்துக் கொடுத்து விடுகிறார்களே ! அவருக்கு நல்ல லாபம்தான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது முருகனார் வந்தார்.

பகவான் அவரிடம் விஷயத்தைச்சொல்லி “. .அப்புறம் அந்த சிஷ்யருக்கு என்ன மிஞ்சுமோ! அசலை வைத்துக் கொண்டு வட்டியைக் கொடுப்பது போல குருவிற்கு காணிக்கைத் தர வேண்டும். எப்படி இந்த ஏற்பாடு!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அதைக் கேட்ட முருகனார், “அந்த குரு தேவலையே! முதலையாவது விட்டு வைக்கிறாரே ! வட்டியைத் தானே கேட்கிறார். (பகவானைக் காட்டி) இந்த குருவோ முதலையே விழுங்கி விடுமே! பிறகு வட்டியைக் கொடுப்பதற்கு யார் மிஞ்சி இருக்கிறார்கள்? வட்டியும் முதலும் ஒரு சேர தீர்ந்துவிடும் அப்புறம் என்ன இருக்கிறது " என்று கண்ணீர் மல்க பதில் கூறினார்.

பக்தியின் ஆழத்திலிருந்து வெளியான மிக உயர்ந்த நகைச்சுவை உணர்வு!

பகவானிடமிருந்து புன்முறுவலே பதிலாயிற்று.

கண்ணாகத் தன் அருளே காட்டினான் தன்னடியேற்(கு)
அண்ணாமலை ரமணன்

( திருமதி கனகம்மாள் அருளிய நினைவில் நிறைந்தவை என்ற புத்தகத்தில் காணப்படும் விவரங்களை வைத்து எழுதப்பட்டது. இது ஒரு ரமணாசிரம வெளியீடு)

திருக்கண்ணோக்கம் , கடைக்கண்பார்வைக்கு ஞானியர்கள் ஏங்கியதும் இதனால்தானோ! முருகனையே குருவாக அடையப் பெற்ற அருணகிரிநாதரும்

கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ

[என்னைப் பார்த்து, என் மீது விருப்பம் கொண்டு, கொண்டாடத் தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வார்த்தையை அடியேனாகிய நானும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து, உனது திருக் கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ? ]

என்று திருச்செங்கோடு முருகனை நோக்கிப் பாடுகிறார். [ நன்றி :கௌமாரம்]

-------------------

முருகனார் 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 தேதி இறைவன்டி சேர்ந்தார். அவரைப்பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும்

(பல தவிர்க்க முடியாத காரணங்களால் சற்று காலதாமதமாக இந்த இடுகை வந்துள்ளது. வாசகர்கள் பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்)

அழல் எரிக்கும் முளி புல்

$
0
0
பலரும் குருவை அணுகி பலவிதமான காணிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர். சுவாமி ராமாவிடம் மட்டும் கொடுப்பதற்கு ஏதும் இருக்கவில்லை.

” ஐயா இன்று பலரும் தங்களுக்கு காணிக்கைகள் செலுத்திவிட்டனர். என்னிடம் ஏதுமில்லையே ? நான் என்ன கொடுப்பது ?” என்று குருவிடம் கேட்டார். “நீ போய் கொஞ்சம் உலர்ந்த சுள்ளிகளை பொறுக்கிக் கொண்டு வா” என்று அவரை அனுப்பி வைத்தார் அவர் குரு. அவர் அப்படியே ஒரு பெரிய கட்டு சுள்ளிகளைக் கொண்டு வந்து அவர் காலடியில் வைத்து நமஸ்கரித்தார்.

“உன்னுடைய பழைய வினைகளையெல்லாம் இந்த சுள்ளிகளைப் போல எரிந்து போகும். அவற்றால் எந்த துன்பம் வராது. நான் உன்னருகே இருந்து துன்பம் அணுகாமல் பாதுகாப்பேன்” என்று உறுதி மொழி கொடுத்தார் குரு. அது போலவே ராமா அவர்களின் ஜாதகத்தின்படி பல பண்டிதர்களால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மரணம் சம்பவிக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பினும் அவரது குரு அதை எப்படி மாற்றியமைத்தார் என்பதை அவர் வேறொரு அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

பச்சை மரத்தில் தீ பிடிக்காது. வெறும் புகைதான் மண்டும். உலக விஷயங்களில் ஆர்வம் உள்ள வரையில் நாமும் பச்சை மரம் தான். நமக்குள் ஆன்மீகக் கனலை எவ்வளவுதான் வீசி வீசி பற்ற வைக்க முயன்றாலும் புகை போல வெறும் மனக் குழப்பம் மட்டும்தான் மிஞ்சும்.

குரு அருள்கின்ற மந்திரமும் நாம செபத்தில் தீவிரப் பயிற்சியும் அந்த ஈரத்தை சிறிது சிறிதாக உலர வைக்கிறது. இந்திரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் சக்தியை இழக்கத் துவங்குகின்றன. உலர்ந்த சுள்ளியில் அதன் வடிவம் மட்டுமே எஞ்சி நிற்பது போல் சாதகனின் வினைகள் பெயரளவில் ஒட்டிக் கொண்டிருக்கும். அயராத நாம செபத்தில் உலர்ந்து நிற்கும் வினைகளை குரு அருள் முழுவதுமாக சுட்டெரித்து விடும்.

இதைக் கபீரும் உறுதி செய்கிறார்.

जबही राम हिरदै धरा, भया पाप का नाश ।
मानो जिनगी आग की, परी पुराने घास ॥


நெஞ்சில் மன்னுவன் இராமன்,பாவம் எல்லாம் ஒழிந்தது
எஞ்சுமோ தீண்டிய அழலில், முளி புல் யாவும் எரிந்தது


மாற்று:

உருகிப் போனது பாவம் எல்லாம், உள்ளுள் இராமன் வந்ததுமே
கருகிப் போயின முளிபுல் யாவும், கனல்பொறி தீண்டிய பின்னே


(மன்னுதல்- நிலைபெறுதல் ; முளிபுல் -உலர்ந்த புல் )

இந்த கருத்தை காலம் காலமாக நமது ஆன்மீக வழிகாட்டிகள் சொல்லி வந்திருக்கின்றனர் என்பது ஸ்ரீமத் பாகவதத்தில் அஜாமிளன் கதை மூலமும் தெரிய வருகிறது.

விதிவசத்தால், நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வழி தவறி இன்ன பாவம் என்றில்லாமல் எல்லா வகைப் பாவங்களையும் இழைத்து மரணப் படுக்கையில் கிடக்கிறான். அவன் உயிரைக் கொண்டு செல்ல எமதூதர்கள் அவன் முன்னே தோன்றுகிறார்கள். பயத்தினால் தன் கடைசி மகன் பெயரை " நாராயணா நாராயணா" என்று சொல்லிக் கொண்டே இறக்கிறான் அஜாமிளன். உடனே விஷ்ணு தூதர்களும் அங்கு வந்து சேர்கிறார்கள். அப்போது எமதூதர்களுக்கும் விஷ்ணு தூதர்களும் வாக்குவாதம் நடக்கிறது. ஏன் அஜாமிளன் உயிரை எமதூதர்கள் கொண்டு செல்லக்கூடாது என்பதற்கு அவர்கள் சொன்ன உதாரணமும் கபீர் சொல்லும் அதே உதாரணமே.

अज्ञानादथवा ज्ञानादुत्तमश्लोकनाम यत्
सङ्कीर्तितमघं पुंसो दहेदेधो यथानलः
(6.2.18)

அஞ்ஞானாத் அதவா ஞானாத் உத்தம ஷ்லோக நாம யத்
சங்கீர்த்திதம் அக்ஹம் பும்ஸோ தஹேத் எத: யதா அனல:


அஞ்ஞானாத்= தெரியாமலோ, அத்வா= அல்லது, ஞானாத் =தெரிந்தோ, உத்தமஷ்லோகா=உத்தமன் புகழ், நாமா=நாமத்தை, யத்= அந்த, சங்கீர்த்திதம் = சொல்லி, அக்ஹம்= பாவத்தை, பும்ஸ:= அவனுடைய, தஹேத் = எரித்துவிடும், எத:= உலர்ந்த புல், யதா= போல, அனல:= நெருப்பு

தெரிந்தோ தெரியாமலோ அந்த பரம்பொருளின் நாமத்தை சொல்லுபவன் பாவம் உலர்ந்த புல்லை நெருப்பு எரித்துவிடுவது போல் எரிந்து போகும். அவர்கள் மேலும் சொல்கிறார்கள். மருந்து எப்படி வேலை செய்கிறது என்பது நோயாளிக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உரிய முறையில் அதை உட்கொண்டால் அது குணப்படுத்தத்தான் செய்யும். அது போலவே இந்த அஜாமிளன் பாவங்கள் நிறைய செய்திருந்தாலும் அவன் நாராயணனின் பெயரை சொன்னதினால் அவனுக்கு மோட்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லி எமதூதர்களிடமிருந்து அவனை மீட்கின்றனர்.

இங்கு எவருக்கும் சற்று குழப்பம் ஏற்படும். அதெப்படி மகனை கூப்பிட்டதும் அதை நாராயணன் தன் பெயராக ஏற்றுக் கொண்டு அவன் கொடிய பாவங்களையும் அழித்துவிடுவானா? அவ்வளவு கூட விவரமில்லாதவனா அவன் ? அப்படியானால் நமது பாவங்களுக்கும் நாம் படும் துன்பங்களுக்கும் அர்த்தமே கிடையாதே !!

கதை சொல்லும் ஓட்டத்தில் நிகழ்வுகள் மட்டுமே பெரும்பாலும் சொல்லப்படுகின்றன. அஜாமிளனின் கடைசி காலம் எப்படி இருந்தது என்பதில் அவனுக்கு தெய்வ சிந்தனை இருக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும் விஷ்ணு தூதர்கள் விவாதத்தின் இடையே சொல்லும் ஒரு விளக்கம் (6.2.7) மூலம் அவன் ”உலர்ந்த புல்லின்” நிலையை அடைந்திருக்கக்கூடும் என்பதை அனுமானிக்க முடிகிறது.

अयं हि कृतनिर्वेशो जन्मकोट्यंहसामपि
यद्व्याजहार विवशो नाम स्वस्त्ययनं हरेः

அயம் ஹி கிருத நிர்வேஷோ ஜன்ம கோடி அம்ஹஸாம் அபி
யத் வ்யாஜஹார விவாஷோ நாம ஸ்வஸ்தி அயனம் ஹரே:

அயம்= இவன்(அஜாமிளன்); ஹி =உண்மையாக ; ஜன்மக் கோடி=பல கோடி ஜென்ம; அம்ஹஸாமபி = பாவங்களுக்காக ;
கிருத நிவேஷ: = தன்னிரக்கத்தால் வருந்தியவன்; விவாஷ:= கை விடப்பட்ட நிலையில்; நாம ஸ்வஸ்தி அயனம் ஹரே:= முக்திக்காக உயர்ந்த ஹரியின் பெயரைவ்யாஜஹார=உச்சரித்திருக்கிறான்.

பல கோடி ஜென்மங்களில் செய்த பாவத்தை எண்ணி அவன்(அஜாமிளன்) தன் கடைசி காலத்தில் வருந்தியிருக்கிறான் என்னும் காரணமே அவன் உலர்ந்த புல் என்கிற நிலைக்கு தயார் செய்திருக்கிறது என்று கொள்ளலாம். அந்நிலையில் தேவையானது தீப்பொறி மட்டுமே.அவன் அறிந்தோ அறியாமலோ அதுவும், இறைவனின் நாமம், மரண நேரத்தில் சேர்ந்து கொள்கிறது. அதனால் முன்வினைகள் யாவும் எரிக்கப்பட்டது.

இப்போது இன்னொன்று புரிகிறது. நாமசெபம் இல்லாமலே உலர்ந்த 'கட்டை' அஜாமிளன். ஆனால் நாமசெபம் இல்லாமல் முக்தி கிடையாது போலும். விஷ்ணு தூதர்கள் எமதூதர்களை விரட்டி விட்டு போய்விடுகிறார்கள். அஜாமிளன் உயிர்பெற்று எழுகிறான். நாராயணின் பெரும் கருணையை நினைந்து அவன் மனம் போற்றத் தொடங்கியது. அவன் கங்கை கரையை அடைந்து நாமசெபத்திலும் சத்சங்கத்திலும் காலத்தைக் கழித்து இறுதியில் இறைவனின் திருப்பாதங்களை அடைகிறான் என்று கதை முடிகிறது.

ஒரு சுற்றறிக்கையோ அல்லது கடிதமோ அரசாங்கத்தாலோ நிறுவனங்களிலிருந்தோ வெளியிடப்பட்டால் அதை செயல்படுத்துவதற்கு தக்க அதிகாரமுள்ள அதிகாரியின் கையொப்பம் இருந்தால்தான் அது ஏற்றுக்கொள்ளப்படும். பல நேரங்களில் மிகப் பழைய அறிக்கைகளை காலாவதியாகி விட்டது என்று கூட சிலர் தள்ளிவிடத் துணியலாம்.

துவாபரயுக பாகவதத்தில் சொல்லியுள்ள கருத்து கலியுகத்திலும் செல்லுபடியாகும் என்று கபீர்தாஸர் இந்த ஈரடி மூலம் தம்முடைய ஒப்பத்தை இட்டு உறுதிசெய்துள்ளார்.

சேற்றைக் கழுவும் பிரவாகம்

$
0
0
சிறியவனுக்கு குளியலறையில் 'அர்ச்சனை' நடக்கிறது.

"எவ்வளவுதான் சோப்பும் ஷாம்பூவும் தேய்க்கிறது? அந்த ' பன்டி' யோட விளையாடப் போகாதேன்னு சொன்னா கேட்டாதானே ! ஊர்ல இருக்கிற சேத்தெயெல்லாம் பூசி அனுப்பியிருக்காளே".
[Bunty அவனுடைய,ஏழு வயது நண்பியின் செல்லப் பெயர்.]

சின்னவனோ அழுகையும் கோபமுமாக ஏதேதோ காரணங்களைக் கூறிக் கொண்டே இருப்பான். வீடெல்லாம் வர்ண அலங்கோலம்.


(படம், நன்றி : The Hindu )

வட நாட்டில் வசிக்கும் பெரும்பாலான தென்னிந்தியர்களுக்கு ஹோலி பண்டிகை வந்தாலே பயம். அவர்கள் பயன்படுத்தும்
வர்ணங்கள் யாவும் உடலுக்கு கேடு விளைவிப்பவை என்ற கவலை வேறு.

அலுவலகத்தில் உலர் பொடி வர்ணங்கள் மட்டுமே பயன்படுத்த வேன்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதை சுத்தம் செய்து கொள்வதில் சிரமம் அதிகம் இல்லை. ஆனால் தண்ணீரில் கலந்து ஒருவர் மீது ஒருவர் இறைத்துக் கொள்ளும் வர்ணங்களுண்டே அது அழியாத கோலங்களே ! உச்சக்கட்டத்தில் வர்ணங்களும் நீரும் தீர்ந்து விட்டாலும் கீழே உள்ள சேற்றை அள்ளிப் பூசி விளையாட்டுத் தொடரும். அன்றணிந்திருந்த உடுப்புகளை அத்தோடு மறக்க வேண்டியது தான். போறாத குறைக்கு நம் தோலின் மீதுள்ள வர்ணங்கள் மறைய இரண்டு மூன்று நாட்களாவது ஆகும்.

ஒரு வகையில் நம்முடைய உலக வாழ்க்கையும் சேறு பூசிக்கொள்ளும் விளையாட்டுதான். அதனால்தானோ என்னவோ, மனம் பக்குவப்பட்ட சான்றோர்களுக்கும் ஞானிகளுக்கும் இந்த சேற்றைப் பூசிக் கொள்ளும் விளையாட்டு போதுமென்ற எண்ணம் வந்து ஒதுங்குகிறார்கள். பெரும்பாலோர் இதுவே மகிழ்ச்சிக்குரிய ஆட்டம் என்று மேன்மேலும் அதில் ஈடுபாடு கொள்கிறார்கள்.

விவிலியத்தில் கடைசி கட்டம். Last supper எனப்படும் அந்த இறுதி விருந்தின் நடுவே ஏசு எழுந்தார். தன் மேலங்கியைக் கழற்றி இடுப்பிலே ஒரு துண்டை சுற்றிக் கொண்டார். ஏனமொன்றில் நீர் ஏந்தி ஒவ்வொரு சீடரின் கால்களை கழுவி துண்டினால் துடைத்து விட்டார்.

பீட்டரின் அருகே கால்களைக் கழுவ வந்த பொழுது ”என்னுடைய கால்களை தாங்கள் கழுவுவது முறையன்று. நான் அதை ஏற்க முடியாது” என்று மறுத்தான்.

“அப்படியானால் நீ என்னில் ஒருவன் அல்ல” என்று ஏசுபிரான் சொன்னதும் ”தேவரே!அப்படியானால், கால் மட்டுமல்ல என்னுடைய கைகள் தலை எல்லாவற்றையும் தர சித்தமாயிருக்கிறேன்” என்று அவரை பணிந்து அவருடைய சேவையை பெற்றுக் கொள்ள முன்வந்தான்.

”குளித்திருக்கும் ஒருவனுக்கு கால்களை மட்டும் சுத்தம் செய்தால் போதும். நீ சுத்தமானவன். ஆனால் உங்களில் ஒவ்வொருவரும் (சுத்தமானவர்) அல்ல” என்று சொன்னார். அது தன்னைக் காட்டிக் கொடுக்கப்போகும் ஜூடாஸை பற்றி மறைமுகமான குறிப்பு.

”உங்களுக்கு நான் செய்ததன் பொருள் புரிந்ததா? என்னை ஆசான் என்றும் தேவன் என்றும் அழைக்கிறீர்கள். அது சரியே. என்னை முன்னுதாரணமாகக் கொண்டு நீங்களும் ஒருவரின் கால்களை மற்றொருவர் கழுவி விட வேண்டும். உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறேன். எந்த ஊழியனும் அவன் தலைவனை விட பெரியவனாக முடியாது. அப்படியே இறைதூதனும் இறைவனைவிட பெரியவனாக முடியாது.” என்று சொல்லிக்கொண்டே தம் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு இருவிதமான விளக்கங்கள் உண்டு. முதலாவது சீடர்கள் ஒவ்வொருவரிலும் இறைவனையேக் காண வேண்டும். அடியவர்கள் கால்களை கழுவுதன் மூலம் கடவுளின் சேவை செய்வதாகவே பாவிக்க வேண்டும். இதனால் மனிதரை ஆட்டுவிக்கும் அகந்தை அழியும். அதையே ஏசு 'என்னை முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள்' என்று குறிப்பிடுகிறார்.

இன்னுமொரு விளக்கம்: மனிதர்கள் இறைவனின் கால்கள். எப்படி வீதியிலே திரியும் போது கால்களே அதிக அளவில் அசுத்தமடையுமோ அப்படி உலக விஷயங்களில் ஈடுபடுவதால் மனம் அசுத்தமடைகிறது. பிற எல்லா உறுப்புகள் சுத்தமாக இருப்பினும் கால்கள் சுத்தமில்லாவிட்டால் வீட்டிற்குள் நுழைய எப்படி அனுமதி இல்லையோ அப்படி மனம் சுத்த மில்லாதவனுக்கு இறைவனுடைய வீட்டிலும் அனுமதி கிடையாது. இறைவன் பெயரே அதை கழுவுகின்ற தண்ணீர். பிற சீடர்களின் கால்களை மற்றொருவர் கழுவுவதன் மூலம் இறைவன் பெயரால் சீடர்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து மனம் சுத்தமடைந்து அவனைச் சேரவேண்டும் என்பதாக கூறப்படுகிறது.

குற்றங் குறைய, குணம் மேலிட அருளை
உற்றவரே ஆவிக்கு உறவாம் பராபரமே
(தாயுமானவர்)

’அருளை உற்றவர்’ குரு ஆவார். மனிதரை உய்விப்பதற்காக உலகில் மனித வடிவில் வலம் வரும் தேவ தூதர்கள். அவர்களின் அருள் நம்முடைய பாவங்களை நொடியில் கழுவி விடும். அதுவும் பல சென்மங்களாக சேர்ந்திருக்கும் வினை மலங்களையும் அடித்து செல்லும் பிரவாகமாக வரும்.

இப்படி ஒரு கருத்தை தமது ஈரடியில் கபீர்தாஸர் வலியுறுத்துகிறார்.

कुमति कीच चेला भरा, गुरु ग्यान जल होय ।
जनम जनम का मोरचा, फल में डारे धोय ॥


அஞ்ஞான சகதியில் சீடன், ஞான மூர்த்தி குருவேநீர் |
சென்ம சென்மாந்திர சேர்க்கை, கணத்தில் கழுவுது காணீர் ||


மாற்று

புரண்டு வந்தான் சீடன் சேற்றில், குருவின் ஞானம் ஆகுது நீர் |
திரண்ட சென்மாந்திர அழுக்கு, கணத்தில் போகுது பாரீர் ||


நமது தேசத்தில் சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் "...விட்டுத் தலைமுழுகியாச்சு" என்ற சொல்லாடலைக் காண்கிறோம். இந்த தலை முழுகலைத் தான் கிருஸ்துவ மதமும் Babtize என்கிறது.

பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக்கோரி பழைய வாழ்க்கையைத் தலைமுழுகித் தொலைத்து இறைவன் மீது முழு நம்பிக்கையுள்ளவராக மாறுவதை குறிக்க வந்த சொல் அது. "BAPTIDZO" என்கிற கிரேக்க மொழி சொல்லுக்கு முழுகி எழுதல் என்ற பொருளாம். பிற்காலத்தில் 'முழுகும்' வழக்கம் மறைந்து புனித நீரை மேலே தெளித்துக் கொள்வது மூலமாக ,ஞானஸ்நானம் என்பதாக மாறி யிருக்கிறது.

ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை ஏசு பிரானே நிகோடெமஸ் என்கிற பண்டிதனுக்கு உரைக்கிறார். "ஒரு உண்மையை சொல்வேன். மீண்டும் பிறக்காமல் இறைவன் சாம்ராஜ்ஜியத்தினுள் யாரும் பிரவேசிக்க முடியாது"

" வயதான மனிதன் மீண்டும் எப்படிப் பிறக்க முடியும்? தாயின் கர்ப்பத்தில் புகுந்து வருவது கண்டிப்பாக இயலாத காரியம்" என்று பதிலளித்தான் நிகோடெமஸ்.

”இது உண்மை. நீரினாலும் ஆவியினாலும் (spirit) பிறப்பிக்கப்படாத ஒருவன் கடவுளின் சாம்ராஜ்ஜியத்தை சேர முடியாது. ஊன், ஊனுக்கு பிறப்பளிக்கிறது. ஆவி, ஆவிக்கு பிறப்பளிக்கிறது. ஆகையால் 'நீவிர் மீண்டும் பிறக்க வேண்டும்' என்று நான் சொல்வதைக் கேட்டு ஆச்சரியமடைய வேண்டாம். தன் போக்கில் காற்று வீசுகிறது. அதன் சத்தம் மட்டுமே கேட்கிறது. அது எங்கிருந்து வருகிறது எங்கே போகிறது என்பதை உம்மால் கூற இயலாது. அது போல (ஒவ்வொருவருள்ளும் உறையும்) ஆவியும் ஆவியிலிருந்து வருவதே
(John 3:3)

[புனித நீர் நிலைகளில் மூழ்கி எழும்போது பூமித்தாயின் வயிற்றிலிருந்து வெளி வருகின்ற பாவனையுடன் புதிய பிறப்பாகக் கருதப்படுகிறது. இது தேகத்தை ஒட்டிய பாவங்களைக் கழுவுதலாகும். அதன் பின்னர் குருவின் உபதேசம் ஆன்மா ஆன்மாவிற்கு அளிக்கின்ற புது பிறப்பாகும்.]

நம் தேசத்தில் குருகுலம் செல்லும் முன் மாணவன் இரண்டாவது பிறப்பாக கருதப்படும் உபநயன சம்ஸ்காரத்தால் ஆன்மீக நெறியில் பயணம் செய்ய தகுதியுடையவனாகப் பட்டு அனுப்பி வைக்கப்படுகிறான்.

இருப்பினும் இல்லறதர்மத்தில் ஈடுபட்டு தம் கடமைகளை ஆற்றும் போது பலவிதமான மாசுகளால் மீண்டும் மீண்டும் அவன் மனம் பாதிக்கப்படுகிறது. இது வீதியில் திரியும் கால்கள் அசுத்தமடைவதைப் போன்றது. அகங்காரம் என்னும் ஆணவ மலம் முக்கியமாக அழிய வேண்டும். அதைப் போக்கிக் கொள்ள சான்றோர்களின் உறவை நாடி இருக்க வேண்டும். அப்போது மனம் சுத்தம் அடைந்து- ஏசு குறிப்பிடுவது போல் கால்களை கழுவிக் கொண்டு- இறைவனை அணுகும் வாய்ப்பாகும்.

கிழக்கோ மேற்கோ அடிப்படை நெறி ஒன்றுதான் என்பது இதிலிருந்து புலனாகிறது.

உலகமெனும் சேற்றில் அமிழ்ந்து போகாமல் தன்னை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் அருணகிரியார் தன் குருவான முருகனைக் கொண்டாடுவதும் அதனால்தானே.

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா, செஞ்சடா (அ)டவிமேல்
ஆற்றை, பணியை இதழியை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமரன் கிருபாகர
னே(கந்தர் அலங்காரம்)

(பணி= பாம்பு : இதழி= கொன்றை மலர்)

மனம் நொந்து பரம்பொருளின் கருணை வேண்டி நின்றால் நொடிப் பொழுதில் துயரைத் துடைக்க வல்லவன் அவன் என்பதற்கு அருணகிரியாரின் வாழ்க்கையே சான்று.

ஞானமுதல்வனாம் விநாயகனின் பெருமை பேசும் நாள் இன்று. அவனருள் யாவருக்கும் பொங்கி பெருகட்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

Let us draw near to God with a sincere heart in full assurance of faith, having our hearts sprinkled to cleanse us from a guilty conscience and having our bodies washed with pure water (Heb:16-22)

நாட்டியமாடுது மண்ணின் பாவை

$
0
0
காசி மகாநகரத்தில் பெருங்கூட்டம். பெரிய பண்டிதர்கள் குழுமியிருக்கும் அந்த கூட்டத்தில் ரவிதாஸை வாதத்திற்கு அழைத்திருந்தனர். அவன் எவ்வளவோ மறுத்த போதிலும் அவனை அவர்கள் விடுவதாயில்லை. மக்களுக்கு ஆன்மீக உபதேசம் செய்ய அவனுக்கு எந்த தகுதியும் கிடையாது என்பதை நிரூபித்து மக்கள் நடுவே அவன் போலித்தனத்தை வெளிப்படுத்தவே அங்கே கூட்டம்.

”உனக்கு சாளக்கிராம பூஜையின் அருமை தெரியுமா ?”

“தெரியாது. நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். எனக்குத் தெரிந்த தெய்வம் என் தொழிலை நடத்த உதவும் இந்த கல் ஒன்றுதான்” என்று சொல்லி செருப்புகளைத் தைப்பதற்காக முட்டுக்கு வைத்துக் கொள்ளும் கல்லை காட்டினான்.

”முறையான பூஜை செய்து பக்தியுடன் நீரில் விட்டால் சாளக்கிராமக் கல் மிதக்க வேண்டும்”

“ஆகா! அந்த அற்புதத்தைக் காணச் செய்யுங்கள். இறைவனின் பெருமையை என்னவென்று சொல்வது. அவன் மனம் வைத்தால் எது தான் நடக்காது !” என்று பணிவுடன் பதிலளித்தான் ரவிதாஸ்.

ஆனால் எந்த பண்டிதருடைய சாளக்கிராமக் கல்லும் மிதக்கவில்லை. எல்லாம் நீரில் மூழ்கின. மிதக்காமல் போனதற்கு பலவித சாஸ்திர பூர்வமான விளக்கங்கள் தரப்பட்டன. கடைசியாக ரவிதாஸ் தன்னிடமிருந்த செருப்பு தைக்க உதவும் முட்டுக் கல்லை நீரினுள் இட்டான். எல்லோரது கண்முன்னும் அது மிதந்து நின்றது.

பண்டிதர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.

இப்படிப்பட்ட பண்டிதர்களைக் கண்டு மகான்களுக்கு சிரிப்பு ஒருபுறமும் வருத்தம் ஒரு புறமும் ஏற்படுகிறது. பக்தியும் முக்தியும் அவ்வளவு லேசான விஷயமா? பறவைகள் எல்லாமே அன்னப் பறவையாகிவிடுமா ? மனித உருவில் உள்ளவர்கள் யாவரும் பரஹம்ஸர்களாகி விட முடியுமா?

”கான மயிலாட கண்டிருந்த வான் கோழி ” கதைதான் அந்தப் பண்டிதர்களுடைய கதையும். வெறும் பூசை புனஸ்காரங்களே கடவுளிடம் அவர்களுக்கு அதிக உரிமை கொடுத்து விடாது என்பது ரவிதாஸர் போன்ற பக்தர்கள் மூலம் இறைவன் தெரிய வைக்கிறான்.

இதை கபீர் நாரைக்கும் அன்னத்திற்குமான உதாரணத்தால் விளக்குகிறார்.

चाल बकुल की चलत है , बहुरि कहावै हंस ।
ते मुक्ता कैसे चुंगे, पडे काल के फंस ॥


நடையிலே நாரை போலே, கருதுவர் தம்மை அன்னமென்றே
கிடைக்குமோ இவருக்கும் முத்தியே, கிடப்பரே காலன் பிடியிலே


காசியிலிருந்து ஹரித்துவாரத்திற்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்ட அந்தணனின் அனுபவம் வித்தியாசமானது. அவனிடம் கங்கா-மாயிக்கு காணிக்கையாக தன் சேமிப்பிலிருந்த சில காசுகளைக் கொடுத்து அவனிடம் ஒரு விண்ணப்பமும் வைத்தார் ரவிதாஸ். “ஐயா கங்கா மாயி கைநீட்டிப் பெற்றுக் கொண்டாலன்றி வேறெவரிடமும் இதை சேர்ப்பிக்க வேண்டாம்”. கால்நடையாய் பலநாட்கள் பயணம் மேற்கொண்ட அந்நாட்களில் அந்தணனுக்கு வேடிக்கையான ரவிதாஸின் வேண்டுகோள் மறந்தே போயிருந்தது.

ஹரித்வாரத்தில் ஹர்-கி-பாடியில் கங்கையினுள் கால் வைத்ததுமே கங்காதேவி ரவிதாஸின் காணிக்கையை பெற்றுக் கொள்ள இரண்டு கைகளையும் வெளியே நீட்டினாள். அது மட்டுமல்லாது கங்கை அன்னை இரண்டு தங்க வளையல்களைக் கொடுத்து ரவிதாஸிடம் சேர்க்கும்படி கூறினாள். ஆனால் பேராசை பிடித்த அந்தணனோ ஊர் திரும்பியதும் அதை ஹரித்வாரத்து விசேஷ நகையாக அரசனிடம் கொடுத்து பரிசுகளை பெற்றுச் சென்றான். ரவிதாஸிடம் விஷயத்தை சொல்லவே இல்லை.

அந்த அந்தணன் விரைவிலேயே மீண்டும் தாழ்குலத்தவனாகிய ரவிதாஸரின் வாசலை அடையும் நிலை ஏற்பட்டது. வளையல்களைக் கண்டு மெச்சிய ராணி மேலும் சிலவற்றை அது போலவே தந்து கொடுக்கும்படி ஆணையிட்டாள். கங்கா மாயியை இப்போது வரச் செய்வது எப்படி? கலங்கிப் போனான் அந்தணன்.

ரவிதாஸரை அடைந்து நடந்தவற்றையெல்லாம் கூறி தன்னை மன்னிக்கக் கோரினான். தன்னை எப்படியாவது அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற பலவிதமாக வேண்டிக் கொண்டான். அவன் நிலை கண்டு ரவிதாஸருக்கு இரக்கம் உண்டாயிற்று.

“ இதோ இந்த தொட்டியினுள் உள்ள நீரை உற்றுப் பார்த்துக் கொண்டு இரும்” என்று சொல்லினார். அந்த தொட்டி, செருப்பு தைப்பதற்கு முன் சருமத்தை ஊற வைக்கப் பயன்படும் தொட்டி. அதனுள்ளே கலங்கிய தோல் வர்ணம் கொண்ட அழுக்கு நீர் காணப்பட்டது. நம்பிக்கையோடு அதை உற்றுப்பார்க்க ஆரம்பித்தான் அந்தணன். ரவிதாஸ் தன் வேலையில் ஈடுபட்டிருந்தார். சிறிது நேரத்திலேயே நீரின் அடியில் இரண்டு வளையல்கள் மினுக்க ஆரம்பித்தன. அதையெடுத்துக் கொடுத்து அந்தணனை வழி அனுப்பிவைத்தார் ரவிதாஸ். உண்மை பக்தனுக்காக கங்கை அவனுடைய தொழில் செய்யும் தொட்டியிலேயே எழுந்தருளினாள்.

ரவிதாஸின் பக்தர்கள் அனேகர். ஆனாலும் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை. மேவார் ராணி ரவிதாஸின் சேவகி. அவருடைய வறுமையை நீக்க ஏதேதோ பரிசுகளை அனுப்பியது உண்டு. அவற்றை மனதாலும் தீண்டவில்லை ரவிதாஸ்.

தன் வறுமையை வறுமையாக நினைக்கவில்லை. உலகத்திலே மிக சிறந்த பொக்கிஷமாக காமதேனுவாக இராம நாமம் இருக்கையில் வேறென்ன வேண்டும் என்பதே அவருடைய கொள்கையாக இருந்தது.

கல்லை மிதக்கச் செய்தது இலகிமா சித்தி எனப்படும் இது சித்தபுருஷர் தம் இச்சைபடி லேசாக்கி விடுவது. கங்கையின் அருளை தன் தொட்டியில் காட்டிய சித்திக்கு பிராப்தி என்று பெயர். விரும்பியதை விரும்பிய இடத்தில் அடைவது.

இவ்வகையில் சகல சித்திகள் பெற்றிருக்கும் தன்னலமற்ற பக்தனின் நிலையை கபீர்தாஸ் படம் பிடிக்கிறார்.

जाकी गांठी राम है, ताके है सब सिद्धि ।
कर जोडी ठाढी सबै, अष्ट सिद्धि नव निद्धि ॥


செல்வம் எல்லாம் இராமனே, சித்தி யெல்லாம் அவனதே
சேவிக்கும் குவிகரத் துடனே, அட்ட சித்தியும் நவநிதியுமே


[அஷ்ட சித்திகள் =அனிமா, கரிமா,மஹிமா,லகிமா,பிராப்தி,பிரகாம்யா,ஈசத்வம், வசித்வம்]

இறைவன் அடியவர்களின் வாசலில் அஷ்ட சித்தியும் நவ நிதியும் கைகட்டி ஏவல் புரியக் காத்திருக்கும் என்று கபீர் சொன்னதை ரவிதாஸரின் வாழ்க்கையில் உண்மையெனக் காண்கிறோம் . இதையொட்டி இன்னொரு நிகழ்ச்சியும் சொல்லப்படுவதுண்டு.

அவருடைய பக்தர் ஒருவர், ரவிதாஸுக்கு ரசவாதக்கல் ஒன்றைக் கொடுத்து அவர்தம் வறுமையை போக்கிக் கொள்ளுமாறு வேண்டினாராம். ரசவாதக்கல் செப்பை தங்கமாக மாற்ற வல்லது. “அதை அந்த ஓலைக்கு அடியில் சொருகி வை” என்று பதிலளித்தாராம். சில மாதங்கள் கழித்து அந்த பக்தர் வந்த போது அந்தக் கல் அதே இடத்தில் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனாராம். நவநிதியும் அவர் காலடியிலேயே கிடந்தாலும் மனம் சலனம் அடையாத பக்தர் அவர்.

சீக்கியரின் புனித நூலான ஆதிகிரந்தத்தில் ரவிதாஸின் நாற்பத்தியொரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை இங்கே காண்போம்


[picture courtesy : www.indiapicks.com ]

चमरटा गांठी न जनई |
लोगु गठावै पनही ||

குரடன் அறியான் செய்முறை
குவலையர் வேண்டுவர் மிதியடி

आर नही जिह तोपउ |
नही रांबी ठाउ रोपउ ||

தைத்திட இல்லை துன்னூசி
பொத்திட இல்லை கைக்கத்தி

लोगु गंठी गंठी खरा बिगूचा |
हउ बिनु गंठी जाइ पहूचा ||

பொத்திப் பொத்திப் போவார்வீணாய்
பொத்தாமலே அறிவேன் அவனை

रविदासु जपै राम नामा |
मोहि जम सिउ नाही कामा ||

ரவிதாஸன் செபிப்பான் ராம நாமமே
காலன் கவலையும் அவனுக்கிலையே

குரடன்= சக்கிலியன் :
துன்னூசி = செருப்பு தைக்கப் பயன்படும் பெரிய ஊசி
பொத்து -தல் : 4.To
mend, patch, botch, as baskets or bags; தைத்து மூட்டுதல். 5.
To stitch; தைத்தல். இலையைப் பொத்திப் போடு. 6. To hide, conceal; மறைத்தல்.


உலகில் மக்களின் மனதில் பலப்பல விசித்திரமான ஆசைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் யாராலும் நிறைவேற்ற முடியாது. அதை உட்பொருளாக வைத்து தன் தொழிலை முன்னிலைப்படுத்தி ”செய்முறை அறியேன், தேவைப்படும் உபகரணங்களான துன்னூசியோ கத்தியோ இல்லை; ஆயினும் இவர்கள் வேட்கை அடங்காது மீண்டும் மீண்டும் அனுபவிக்கத் துடிக்கிறார்களே” என்று குறிப்பிடுகிறார்.

गांठी என்பதற்கு தைப்பது, சரிபார்த்தல்- mend- என்று பொருளாம். பொத்துதல் என்பதற்கும் அந்த இரண்டு அர்த்தங்களும் பொருந்தி வருகிறது. செருப்பை மீண்டும் மீண்டும் சரி பார்த்து அணிந்தாலும் அது தேயத்தானே போகிறது. நாட்கள் தேய்வது போல் செருப்பும் தேய்கிறது. இறைவனை அறிய முயலாமல் செல்லும் நாட்களெல்லாம் வீணான நாட்கள். அவனை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஒன்று இல்லாமல் போய்விடுகிறது. இறைசெபத்தால் தான் அந்த நிலையை அடைந்து விட்டபடியால் தனக்கு மரணம் இல்லை என்று சொல்கிறார் ரவிதாஸர்.

உலகில் நாம் காண்பதெல்லாம் வெறும் பொம்மலாட்டம் என்ற பொருளில் அவர் சொல்லியிருக்கும் இந்தப் பாடலும் பிரபலமானது.

माटि के पुतरा कैसे नचतु है
देखे देखे सुनै बोलै दउरिओ फिरतु है
जब कुछु पावै तब गरबु करतु है
माइआ गई तब रोवनु लगतु है
कहि रविदास बाजी जगु भाई

நாட்டியம் ஆடுது மண்ணின் பாவை;
பார்க்குது கேட்குது பேசுது
இப்படி அப்படி ஓடவும் செய்யுது
நெனச்சது கெடச்சா உடனே துள்ளுது
கெடச்சது போனா அம்மா! அழுவுது
ஐயோ பாவம்;
சொல்லுறேன் கேளு
எல்லாமே வெறும் நாடக மாச்சு
ரவிதாசு எனக்கு புரிஞ்சு போச்சு


[இது வரிக்கு வரி மொழிபெயர்ப்பு அல்ல. ஆனால் முழுக்கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. சாமானியர்களோடு பழகி சாமானியராய் அவர் வாழ்ந்ததால் சாமானியன் மொழியில் மொழியாக்க முயற்சி.]

இந்த காயம் மண்ணால் ஆனது தானே அதனால்தான் மண்ணில் முடிகிறது. நாமெல்லோரும் இறைவனின் கையில் பொம்மைகள். அவன் சூத்திரதாரி. அறியாமை நம்மில் இருக்கும்வரை நமக்கு ஆட்டம் ருசிக்கிறது. ரவிதாஸ் போன்றவர்களுக்கு ஆட்டம் முடித்தபின் பொம்மைகளுக்கான இடம் எது என்பது தெரியுமாதலால் இது வெறும் நாடகம் என்ற உண்மையில் மனம் லயத்து அறிவுரை கூறுகிறார்கள்.

ரவிதாஸை, மாபெரும் கிருஷ்ண பக்தையான மீராவின் குரு என்றும் சொல்வர். ராஜா பீபா வும் இவரிடம் ஞானோபதேசம் வேண்டி நின்றார். பீபாவும் ஒரு தலைசிறந்த பக்தர்.

மகான்களின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாலே சத்சங்க பலன் உண்டு. வரும் பதிவுகளில் இவர்களைப் பற்றி மேலும் காண்போம்.

அழலை நாடும் விட்டில் பூச்சி

$
0
0
அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே சிறிது நேரம் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக எதையும் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. வழக்கம்போல் மனம் ஒன்று விட்டு ஒன்று பற்றித் திரிந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் மூன்று சிறுமிகள் ஏதோ பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்ட பின் முதல் எண்ணம் என் குழந்தைகளின் குழந்தைப் பருவம்- அவர்கள் விளையாட்டு, எவ்வளவு வேகமாக வருடங்கள் உருண்டு போய்விட்டன என்பன போன்றன. அடுத்து, எங்களுக்கு நினவில் அழியாமல் இருக்கும் அவர்களின் பல விளையாட்டுகள், கேள்விகள்.

அவை எதுவும் அவர்களுக்கு சற்றும் நினைவில் இல்லை.

வயது ஏற ஏற நோக்கமும் விருப்புகளும் மாறிக் கொண்டே போய்விட்டன. நாம் கடந்து வந்த பாதையும் அது தானே என்பதும் கூடவே நினைவுக்கு வந்தது. நம்முடைய குறும்புகள் வால்தனம், பொய் சொல்லி சிக்கிக் கொண்டது எல்லாம் நம் பெற்றோர்கள் சொல்லித்தானே நாம் அறிகிறோம் என்பதை நினைக்கும் போது இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்ற கேள்வி கூடவே எழுந்தது.

அடுத்து, மனம் மீராவின் வாழ்க்கை வரலாறுக்கு தாவியது.

சாமானியர்களுக்கான இந்த விதி ஏன் ஆண்டாள் மீரா போன்ற பக்தைகளின் வாழ்வில் செயல்படுவதில்லை என்ற எண்ணமும் எழுந்தது. கிருஷ்ணனே உன் கணவன் என்று விளையாட்டாக தன் தாய் கூறியதை நம்பிய அந்த சிறுமி மீராவின் மனம், காலப்போக்கில் ஏன் அதை மறக்கவில்லை ? அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது கூட அவளுடைய தாத்தா சாமர்த்தியமாக செய்ய வேண்டியிருந்தது. “நீ உன் கணவனுக்கு நல்ல முறையில் சேவை செய்தால் அவன் மூலமாகவே கிருஷ்ணன் காட்சியளிப்பான்” என்று நம்பிக்கை ஊட்டினார்.

அதை முழுவதுமாக நம்பி திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தாள். போஜராஜன் அவளுடைய கிருஷ்ண பக்திக்கு எந்த தடையும் விதிக்கவில்லை மிகப் பெரிய மனதுடைய கணவனின் அன்பும் ஆதரவும் இருந்ததால் அரண்மனை சாதுக்களும் சன்னியாசிகளும் சர்வ சுதந்திரமாக வந்து போகும் இடமாகிவிட்டது.

கணவனின் பாட்டி, பக்த ரவிதாஸின் சேவகி. அதனால் சிறு பெண்ணான மீராவிற்கு ரவிதாஸின் தரிசனமும் மந்திர உபதேசமும் கிட்டியது என்றும் சொல்லப்படுகிறது. பல பாடல்களில் அவள் தன் குரு ரவிதாஸ் என்பதை வெளிப்படுத்தியிருப்பதும் தெரிகிறது.

गुरु मिलिया रैदासजी , दीनी ज्ञान की गुटकी || என்றும் मीरा ने गोविन्द मिलिया जी , गुरु मिलिया रैदास என்றும் रैदास संत मिले मोहि सतगुरु , दीन्ही सुरत सहदानी என்பதாகவும் ரைதாஸ், ரவிதாஸ் என்று தன் குருவிற்கு நன்றியை பாடல்களில் தெரிவிக்கிறார்.


(picture courtesy: Divya 's blog : My Musings)

அரண்மனை தர்ம சத்திரம் போல் மாறி விட்டதால் கணவன் வீட்டாரின் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதை தவிர்க்க அன்பான கணவன் அவளுக்காக தனியாக ஒரு கோவிலே கட்டி கொடுத்தான். மீராவின் சாதுக்களுடான சத்சங்கம் இடம் மாற்றம் பட்டது.

இப்போது எதிர்ப்பு வேறு விதமாய் திரும்பியது. “அவள் அரண்மனையியில் இருப்பதே இல்லை. துர்கா பூஜையில் பங்கேற்பதில்லை. அகால நேரங்களில் மந்திருக்கு போகிறேனென்று ’யாரையோ’ சந்திக்க போய்வருகிறாள்” இத்யாதி. சோதனை போல கணவனும் முகலாயருடனான போரில் மிகுந்த காயம் அடைந்து மூன்று வருடங்கள் நோயினால் வாடி இறந்து போய்விட்டான். எல்லாம் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களில் நடந்தேறிவிட்டது. மீராவின் வயது அப்போது இருபத்தி மூன்று.

கணவனின் மறைவுக்குப் பிறகு அரண்மனை நரகமாகியது. சித்தூருக்கு அரசனாக பொறுப்பேற்ற மைத்துனன் அரண்மனை பெண்டிரின் பேச்சைக் கேட்டு மீராவை தம் குலத்திற்கே களங்கமாக நினைக்க ஆரம்பித்தான். பூஜைக்கான பூக்குடலையில் விஷப்பாம்பு அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணனின் அருளால் பாம்பு பூஜிக்கத் தக்க சாளக்கிராம கல்லாக மாறியது. இவள் மாயக்காரி என்ற பயம் பற்றிக் கொண்டது பொறாமைகாரர்களுக்கு. தம் கண் எதிரிலேயே விஷம் குடிக்கசெய்தனர். விஷம் அமிர்தமாயிற்று. ராணாவின் கோபம் தலைக்கேறியது. கை வாளை உருவியது. ஆனால் ஒருப் பெண்ணை -அரண்மனையின் மூத்த மருமகளை -கொல்வது ஒரு ரஜபுதனுக்கு அவமானம் அல்லவோ !

உருவிய வாளுடன் “நீங்கள் ஏன் ஒரு ஆற்றிலோ கிணற்றிலோ விழுந்து செத்து போகக் கூடாது ?” என்று சினந்து கூறினான்.

ஏ மாதவா எனக்கு உன்னைத்தவிர யாருண்டு
மீனாகி உன் சரணங்களை ஸ்பரிசித்திருக்கலாம்;
குயிலாகி நீ மாடு மேய்க்கும் போது உன்னைப் பாடி மகிழ்விக்கலாம்;
ஒரு முத்தாக இருந்தால் உன் மார்பில் தவழும் மாலையில் ஒளிர்ந்திருக்கலாம்.
எனக்கு இது எதுவும் வாய்க்கவில்லையே.
உன்னை அடைவதும் எப்படி?
எப்போதும் உன்னோடு இருப்பதும் எப்படி?

என்றெல்லாம் கரைந்து ஏங்குபவளுக்கு ராணா சொன்ன வழியே சரியெனப் படுகிறது. அதுவே கிருஷ்ணனின் அருகில் அழைத்துச் செல்லுமானால் ஏன் உயிரை விடக்கூடாது? ராணாவின் சினத்தின் மூலம் தன்னை கிருஷ்ணனே அழைக்கிறானோ என்றெல்லாம் தோன்றி நீரில் குதித்து உயிரைவிட துணிகிறாள் மீரா.

அவளுடைய நிலை, விளக்கு ஒளி கவர்ச்சியில் தன்னை மாய்த்துக் கொள்ளும், விட்டில் பூச்சியைப் போலே.

பொதுவாக உலகக் கவர்ச்சியின் ஈர்ப்பிற்கு ஆளாபவர்களை விட்டில் பூச்சி போலே என்று சொல்வதுண்டு. சிந்திக்கும் சக்தியின்றி ஆசையின் வலையில் விழுந்து அழிவடைவதை குறிப்பது. ஆனால் இங்கே பக்தனுக்கு பரமாத்மனிடத்தில் ஏற்படும் ஈர்ப்பையும் விட்டில் பூச்சிக்கே கபீர்தாசர் ஒப்பிடுகிறார். ஏனென்றால் அதீத பக்தியினால் தான் என்னும் எண்ணம் முற்றிலுமாய் அழிந்து பக்தனுக்கு பரமன் ஒருவனே தெரிகிறான்.

सुमिरन सो मन लाइये, जैसे दिप पतंग ।
प्राण तजे छिन एक में, जरत न मोरै अंग ॥


மனமொன்றி செபத்தில் நிலைத்திடு, அழல்நாடும் விட்டிலைப் போலே |
கணமொன்றி லுயிரே போயினுமது, பொரிந்திட அஞ்சுது இல்லையே ||

(பொரிதல் -கருகுதல் தீய்தல்)

இதே கருத்தை மீராவும் தன் பாடல் ஒன்றில் வெளிப்படுத்துகிறாள்.

If you want to offer love
Be prepared to cut off your head
And sit on it.

Be like the moth,
Which circles the lamp and offers its body.

Be like the deer, which, on hearing the horn,
Offers its head to the hunter.
Be like the fish
Which yields up its life
When separated from the sea.
Be like the bee,
Entrapped in the closing petals of the lotus.

Mira's lord is the courtly Giridhara.
She says: Offer your mind
To those lotus feet.
( இதன் மூலப்பாடல் தெரிந்திருந்தால் அதன் இணைப்பை தயவு செய்து தெரிக்கவும். ஆங்கில பொழிபெயர்ப்பு மட்டுமே கிடைத்தது)

உயிரைத் துச்சமாகக் கருதி துறக்கத் துணிந்தவளை கிருஷ்ணனே தடுக்கிறான். “நீ பிருந்தாவனத்துக்கு போ” என்ற உத்தரவும் கொடுக்கிறான். பல பெரும் இறையன்பர்களின் தொடர்பு அவள் மனதுக்கு ஆறுதல் அளித்தாலும் கண்ணனை சேர முடியாத மானுடப் பிறவி பெரும் துன்பமாகத் தெரிகிறது.

भवनपति तुम घर आज्यो हो ।
புவன பதியே வீடு விரைந்திடு
बिथा लगी तन मँहिने म्हारी तपत बुझाज्यो हो ॥
என்னைப் பீடித்திருக்கும் தாபம் உன்னால் அணையட்டும்
रोवत रोवत डोलता सब रैन बिहावै हो ।
அழுதழுது இரவெல்லாம் புரளுகிறேன்
भूख गई निदरा गई पापी जीव न जावै हो ॥
பசியில்லை தூக்கமில்லை பாவி ஜீவன் போவதுமில்லை
दुखिया कूँ सुखिया करो मोहि दरसण दीजै हो ।
துயரம் போக்கி ஆறுதல் தர எனக்கு தரிசனம் கொடு
मीरा ब्याकुल बिरहणी अब बिलम न कीजै हो ॥

வாடும் மீராவின் வேதனை தீர்க்கக் காலம் கடத்தாதே

இப்படி மீராபாயின் இறை ஏக்கத்தின் உச்சியில் வெளிப்பட்ட பாடல்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு இன்று பக்திக் களஞ்சியமாகத் திகழ்கிறது. இறைவனுடைய அடிகமலங்கள் அவ்வளவு சுலபமாக எட்டப்படுவதில்லை என்பதும் அவரது ஏக்கம் மிகுந்த வரிகளால் புலனாகிறது.

இதன் அடுத்த பகுதி விரைவில் ...... அதுவரை

எம் எஸ் அம்மாவின் குரலில் மீரா பஜன் ஹரி தும் ஹரோ பஜனை கேட்டு அனுபவியுங்கள்.

हरि तुम हरो जनकी भीर ।
द्रौपदीकी लाज राखी तुरत बढ़ायो चीर ॥
भगत कारण रूप नरहरि धर् यो आप सरीर ।
हिरण्याकुस मारि लीन्हों धर् यो नाहिन धीर ॥
बूड़तो गजराज राख्यो कियौ बाहर नीर ।
दासी मीरा लाल गिरधर चरणकँवलपर सीर ॥





ஓ ஹரி, ஜனங்களின் துக்கம் களைந்திடு; காலம் கடத்தாமல் திரௌபதிக்கு சீரை தந்து மானம் காத்தாய் ; நர-ஹரி ரூபத்தில் பிரகலாதனைக் காப்பாற்றினாய் ; இரண்யகசிபுவை வதம் செய்த தீரன் ; கஜராஜனை நீரினின்று வெளியே இழுத்தாய் ; அடிமை மீரா பணிவேன் உனது தாமரைப் பாதங்களை .

----------------------------------------------

இந்த பதிவுடன் தனது ஐந்தாவது வருடத்தில் இந்த வலைப்பூ அடி எடுத்து வைக்கிறது என்பதோடு இன்னுமொரு விசேஷம். !!கூகிளின் கணக்குப்படி இது நூறாவது இடுகை. அதன் பின்பலம் எல்லாம் வாசகர்களாகிய உங்களைச் சேர்ந்தது. பொறுமையாகப் படித்து தனி மடலிலும் பின்னூட்டங்களிலும் உற்சாகமூட்டி வரும் அனைத்து ஆத்திக அன்பர்களுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

இதையொட்டி அடுத்த இடுகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும். :)))

அனைவருக்கும் சிறப்பான நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு அம்பிகை அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

கண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி

$
0
0
மனைவிக்கு மிக நெருங்கியவர் இல்லத்தில் ஒரு விசேஷம். அன்பாக, குடும்பத்தோடு பங்கு கொள்ள அழைத்தும் இருக்கிறார்கள்.

" நீ வேணுமானா போயிட்டு வா. எனக்கு அங்க யாரையும் தெரியாது." இது கணவனின் அணுகுமுறை. நிர்பந்தத்தை அனுசரித்து தனியாக போவதா வேண்டாமா என்று மனைவி முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

சிறிது நாட்கள் கழித்து, கணவரது அதிகாரிக்கு பிரமோஷன் பார்ட்டி. தம்பதி சமேதராய் வர அழைப்பு.

"உங்க பாஸ்... நீங்க போகணும். நானெதுக்கு? நாளைக்கு பேரண்ட்ஸ்-மீட்டிங். பார்ட்டிக்கெல்லாம் வந்தா காலைல வேலையாகாது. என்னால முடியாது ".

"ஆமா பப்லுவோட ப்ளே-ஹோம் பேரண்ட்ஸ் மீட்டிங் தான் ரொம்ப இம்பார்டண்ட்-டாக்கும் ! எல்லாம் வெறும் சாக்கு" சீறினான் கணவன்.

"அன்னிக்கி நீங்க மட்டும் நித்யா வீட்டுல கூப்பிட்ட போது வந்தீங்களா? எனக்கும் உங்க ஆபீஸ்காரங்க யாரையும் தெரியாது. அங்க வந்து சும்மா வெத்து சிரிப்பு சிரிச்சுகிட்டு பொழுது போக்க முடியாது " என்பது மனைவியின் தீர்மானமான பதில்.

உண்மையில் இருவரும் இரண்டு சந்தர்பங்களிலும் 'தம்மை' முன் வைக்காது வாழ்க்கைத் துணையின் சந்தோஷத்திற்காக செயற்பட்டிருந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகி இருக்கும். ஆனால் இங்கே அன்பு வளர வேண்டிய தருணங்கள் அன்பு உடைவதற்கு காரணமாகி விடுகின்றன.

இப்படியான எண்ணங்கள் கணவன் மனைவி என்று மட்டுமல்லாமல் சகோதர சகோதரியரிடையே, பெற்ற தாய் தந்தையரிடையே நீயா நானா என்னும் ஏட்டிக்கு போட்டியாய் நிதானமாகவேர்விட்டு, அன்பெனும் மாளிகையின் அஸ்திவாரத்தை விரிசல் அடையச் செய்கிறது.

மனிதர் மனம் தனக்கு முக்கியத்துவம் இல்லாத இடங்களுக்கு போவதற்கு விரும்புவதில்லை. நாம் சந்திக்கப் போகும் தருணங்கள் நம்முடைய சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் தராது என்று நினைத்தால் அதை தவிர்க்கவே விரும்புகிறோம். சுயகௌரவம் என்ற பெயரின் பின்னால் ஒளிந்து கொள்ளும் இந்த கர்வம் அல்லது ஆணவமே ஆன்மீக முன்னேற்றத்தை தடுக்கும் பெரிய திரை ஆகும்.

அதனால்தான் கபீர்தாஸர் ’அன்பெனும் மாளிகைக்குள் வரவேண்டுமானால் உன்னுடைய சுயகௌரவத்தை விட்டு வா’ என்று அறிவுறுத்துகிறார். இறைவனிடத்து வைக்கும் தீவிர அன்பு பக்தியாகிறது. அங்கே கர்வம் என்பதற்கு இடமே இல்லை.

कबीर यह घर प्रेम का, खाला का घर नाहीं ।
सीस उतारे हाथि करि, सो पैसे घर माहीं ॥


பக்தர்தம் இல்லமிது, கபீரா, அத்தையின் இல்லம் போலவன்று
பக்திக்கு சிரம்தாழ்ந்து பணிந்திடு, பக்தருக்கே உண்டு யிடமிங்கு


மாமியார் வீட்டுக்கு மருமகன் வருகிறாரென்றால் பலத்த வரவேற்பு உபசாரம் எல்லாம் இருக்கும். எல்லா மனிதருக்கும் தம்மை பாராட்டி சீராட்டினால் மனதுக்கு உவகை அளிக்கும். அது வெறும் அற்ப மகிழ்ச்சி. அது இறைபக்தி தரும் மகிழ்ச்சிக்கு ஈடாக முடியாது. இறைபக்தி வேண்டுமானால் யானையை பழக்குவது போல மனதையும் பழக்க வேண்டும்.

எந்த சாதனைக்கும் உழைப்பு வேண்டும். பக்திக்குத் தேவை மன ஒருமை. அதுவும் ஒரு உழைப்புதான். அதற்கும் கஷ்டப்பட வேண்டும். இறைவன் நாமத்தை சொல்லிச் சொல்லி மனமாசுகளை கழுவ வேண்டும். தானெனும் இறுமாப்பை ஒழிக்க வேண்டும். இவை யாவும் மன உழைப்பில்லாமல் கூடுவது சாத்தியமல்ல. இது மாமியார் வீட்டிற்கு போவது போன்ற சுலபமான செயல் அல்ல என்று கபீர் வேடிக்கையாக சொல்லியிருக்கிறார்.

மனதைப் பழக்குவதற்கு அதில் தேர்ந்த அடியவர்களுடன் சத்சங்கம் கொள்ள வேண்டும். அவர்களிடையே ஏழை பணக்காரர் இல்லை. மேற்சாதி-கீழ்சாதி, அரசன்-ஆண்டி போன்ற வேறுபாடுகள் போன்ற எதுவும் இருக்காது. இணக்கமாக அவர்களுடன் பழகி அவர்களின் சேவையில் ஈடுபட்டால் சமபாவனையுடன் யாவரையும் கண்டு பழகும் திறமை கைகூடும். அப்படி கிருஷ்ணரின் பக்தியில் தோய்ந்திருந்த மீராவை "தான்" என்கிற மனப்பான்மை அண்ட முடியவில்லை. அதை எப்படி துறந்து விட்டார் என்பதை அவர் பாடல் ஒன்றில் காணலாம்.

அவருள் கிருஷ்ணனுக்கான பக்தி ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை ?

मेरे तो गिरधर गोपाल दूसरो न कोई ॥
கிரிதர கோபாலனன்றி வேறொருவர் என் பதி ஆகார்
जाके सिर मोर मुकुट मेरो पति सोई ।
மணிமுடியும் பீலியும் சிரந்தரித்த அவனே பதி
अंसुवन जल सीचि सीचि प्रेम बेलि बोई ।
கண்ணீரால் பிரேமையெனும் கொடி வளர்த்தேன்
अब तो बेल फैल गई आणंद फल होई ॥
கொடி படர்ந்து பரப்புது ஆனந்தம் இப்போது

तात मात भ्रात बंधु आपनो न कोई ॥
தாய் தந்தை, சோதரன், பந்து என என்னவர் இல்லை எவரும்
छांडि दई कुलकी कानि कहा करिहै कोई ।
குலப் பெருமை விட்டொழித்தேன், யார் என்ன(கேடு)செய்வர் ?
संतन ढिग बैठि बैठि लोकलाज खोई ॥
அடியாரோடு அமர்வேன் நாணம் ஏதுமில்லை யெனக்கு
चुनरी के किये टूक ओढ लीन्ही लोई ।
முக்காடு விலக்கினேன் முரட்டாடை தரித்தேன்
मोती मूंगे उतार बनमाला पोई ॥
முத்துச்சரத்தை விட்டு வனப்பூச்சரம் அணிந்தேன்
दूध की मथनियां बडे प्रेम से बिलोई ।
அதி பிரேமையுடன் கடைந்தேன் பாலை
माखन जब काढ़ि लियो छाछ पिये कोई ॥
வெண்ணெய் கிடைத்த பின் கடை-நீர் அருந்துவர் யாரோ?
भगति देखि राजी हुई जगत देखि रोई ।
பக்தரைக் கண்டு எனக்கு பேருவகை, உலகோரைக் காணப் பெருகுது கண்ணீர்
दासी मीरा लाल गिरधर तारो अब मोही

அடிமை மீரா வேண்டினள் கிரிதரா, கடைத்தேற்று என்னையே

[பண்டிட் ரவிஷங்கர் இசையமைப்பில் வாணி ஜெயராம் அவர்களின் மதுரமான குரலில் இந்த பாடலை கேளுங்கள்].

mere_tho_giridhar....


மீரா பல தேசங்களையும் சுற்றி துவாரகையை அடைந்தார். ராணாவின் அரசாட்சி பல சோதனைகளுக்கு உள்ளாகியது. பஞ்சம் தலைவிரித்தாடியது. மீராவிற்கு இழைத்த துரோகமே காரணம் என்று கருதி மன்னிப்புக் கேட்டு மீண்டும் தன் ராஜ்ஜியத்திற்கு வந்து விடும்படி தானே சென்று வேண்டிக் கொண்டான். அழைப்பை மறுத்து விடுகிறார் மீரா. காலமெல்லாம் கண்ணனின் நினைவிலேயே அவள் காலம் கழிக்க முடிவு செய்து விட்டாள்.

जो तुम तोडो पियो मैं नही तोडू।
நீ கைவிட்டாலும் அன்பே ! நான் உன்னை விடமாட்டேன்
तोसु प्रीत तोडी कृष्ण कोन संग जोडू
உன் அன்பை விட்டு கிருஷ்ணா வேறு யாரிடம் செல்வேன் ?
तुम भये तरुवर मैं भई पखिया।
மரங்களானால் நீ, பறவையாவேன் நான்
तुम भये सरोवर मैं तोरी मछिया॥ जो०
சரோவரம் ஆனால் நீ, மீனாவேன் நான்
तुम भये गिरिवर मैं भई चारा।
மலையானால் நீ, நான் புல்லாவேன் .
तुम भये चंद्रा मैं भये चकोरा॥ जो० (ஜோ தும்)
நிலவானால் நீ நான் சகோரம் ஆவேன்
तुम भये मोती प्रभु हम भये धागा।
முத்து ஆனால் நீ, கோர்க்கும் சரடாவேன்
तुम भये सोना हम भये स्वागा॥ जो०
தங்கம் நீயானாய், நகையாவேன் நான் (ஜோ தும்)
मीरा कहे प्रभु ब्रजके बाशी।
மீராவின் முறை கேளாய், விரஜ்(தேச) வாசியே
तुम मेरे ठाकोर मैं तेरी दासी॥ जो०॥
நீ எனது தலைவன் நான் உன் அடிமை

இந்த பாடலையும் வாணிஜெயராமின் குரலில் கேளுங்கள். ஒலிநாடா மூலம் இந்தப் பாடலைக் கேட்டுக்கேட்டு நாடாவே தேய்ந்து விட்டது !:))
Get this widget | Track details | eSnips Social DNA


ஏமாற்றத்துடன் திரும்பிய ராணா சில பக்தர்களை அழைத்து எப்படியாவது மீராவை மீண்டும் சித்தோர் ராஜ்யத்திற்கு அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டான். அவர்களும் துவாரகையை அடந்து அவரது சத்சங்கத்தில் பங்கேற்று சில நாட்கள் அங்கேயே தங்கி தமது விண்ணப்பத்தை அவரிடம் வைத்தனர். மீராவின் முடிவில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. பெரும் ஏமாற்றமடைந்த அவர்கள் கடைசி முயற்சியாக “ தாங்கள் ஊர் திரும்பாவிடில் நாங்கள் இங்கேயே உயிர் துறப்போம்” என்று சொல்லி அவரை சம்மதிக்கச் செய்ய முயன்றனர். மிகவும் தர்மசங்கடமாயிற்று மீராவுக்கு. ’தன்னால் அடியவர்களுக்கு துன்பம் ஏற்படுவதா? ’

”நாளை காலை வரை பொறுத்துக் கொள்ளுங்கள் “ என்று அவர்களை வேண்டிக் கொண்டார். அவர்களும் இரவை சந்தோஷமாகக் கழித்தனர். ஆனால் மறுநாள் காலையில் மீரா எங்கும் காணப்படவில்லை. துவாரகநாதர் கோவிலைத் திறந்தால் அங்கே கிருஷ்ணனின் விக்கிரகத்தின் மீது மீராவின் ஆடையின் ஒரு பகுதி காணப்பட்டது. கண்ணனை நினைந்து நினைந்து அவனுடனேயே இரண்டறக் கலந்து விட்டார் என்பதை அந்த துண்டு வஸ்திரம் சூசகமாகத் தெரிவித்தது போலும்.

மீராவின் பக்தி மிக அசாதாரணமானது. ஆண்கள் அதிகாரம் மண்டியிருக்கும் ஒரு கலாசாரத்தில் தனியாகப் போராடி தன் பிரிய தெய்வமான கிருஷ்ணனுடன் அவள் இணைந்த பக்தி எவ்வளவு நூற்றாண்டுகள் ஆயினும் பக்தர்களுக்கு நம்பிக்கை விளக்காகும். அதனை கபீர்தாஸ் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்

भक्ति महल बहु ऊंच है , दूरहि ते दरशाय ।
जो कोई जन भक्ति करे, शोभा बरनि न जाय ॥


வெகு உயரம் பக்தியெனும் கோபுரம், வெகுதூரத்திலும் தரிசனம் தருமே
வெகுவாய் பக்தியில் திளைப்போர்க்கு, அகலாது அது தரும் விம்மிதமே
(விம்மிதம் =Admiration, அதிசயம் )

உயரமான கோபுரத்தை மீராவின் அளவற்ற பக்தி என்று வைத்துக்கொண்டால், தூரத்து காட்சி என்பதை நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் அவர் புகழ் என்கிற காட்சியாகக் கொள்ளலாம். மனதில் பக்தி நிறைந்தவர்களுக்கு அவருடைய பக்தி இன்றும் விம்மிதம் தருவதை எவரும் மறுக்க முடியாது.


மீராபாய் மந்திர் : நன்றி indianetzone.com

மீராவைப் பற்றி அறிந்து கொள்ள சில நல்ல வலைத்தளங்கள்.
http://miramadhurya.vndv.com/
http://www.chittorgarh.com/
http://www.freeindia.org/biographies/greatdevotees/mirabai/page4.htm

---------------------------------------------------------------------------

என் கணக்கிற்கு இது நூறாவது பதிவு. இடையே ஒரு பதிவு தேன்கூடு திரட்டி தொடங்கிய கல்யாண் அவர்களின் மறைவிற்காக அஞ்சலி இடுகையாக -கட்டுரை வடிவில்லாமல் -வெளியிடப்பட்டது. அதனால் கூகிள் கணக்கிற்கும் எனக்கும் சற்று வேறுபாடு :)

அறிவிப்பு :
கபீர் வலைப்பூவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பின்னூட்டங்களை -அவர்களே களைத்து போகும் அளவுக்கு- இட்டு உற்சாகமூட்டி வந்த சில
பெரும்வலைப்பதிவு ஆசிரியர்களுக்கு எப்படி கைம்மாறு செய்யமுடியும் என்று யோசித்திருந்தேன்.

பெரும்பான்மையான வாசகர்கள் ரீடரிலோ நேரடி அஞ்சலிலோ படித்து விடுவதால் பல பின்னூட்டங்களில் கிடைக்கும் நல்ல கருத்தாடல்களை தவற விடுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

அதனால், ஏன் அவர்களைக் கொண்டே சில கட்டுரைகளை இடச்செய்து சிறப்பு விருந்தினர் இடுகைகளை அளிக்கக் கூடாது எனத் தோன்றியது.

நேரடி இடுகையாக -சிறப்புப் பதிவாக -வரும்போது அவர்களின் எண்ண ஓட்டங்கள் ஒரு முழுப்பதிவாக எல்லோராலும் படிக்கப் பெறும். அவர்கள் தத்தம் பாணியிலே மிகச் சிறந்த எழுத்தாளர்கள் என்பதையும் வாசகர்கள் அறிவர்.

ஒரு சிலரிடம் தொடர்பு கொண்ட போது மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்து இவ்வலைப்பூவை பெருமைபடுத்தி உயர்த்த முன் வந்துள்ளனர். இன்னும் சிலரோடு தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது.

கட்டுரைகளின் மையக்கருத்து கபீரின் கருத்துகளாகவே இருக்கும்.

பல அன்பான வாசகர்கள் தனிமடலில் எழுதியும் தொலைபேசி மூலமும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். அவர்களும் எழுத முன்வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். விவரங்கள் உதவி வேண்டினால் தனி மடலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

கபீருடனும் பிற மகாத்மாக்களுடனுமான நமது பயணம் அவர்களின் அருளால் இனிதாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். நன்றி




சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை- 1

$
0
0
ஆசிரியர் அறிமுகம் :

இந்த இடுகையின் விருந்து ஆசிரியர் பலரும் மிக நன்கு அறிந்த ஒரு வலைப்பதிவாளர்.

அவரை நான் கபீரண்ணன்என்று அழைப்பது உண்டு. :))
அவருடைய வலைப்பூ கபீரின் கனிமொழிகள் வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர் என்பது மட்டுமல்ல, எழுதும் திறத்திலும் அவர் என்னை விட கைத்தேர்ந்தவர். எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி தீர்த்து விடுவார்.

தற்போது பழந் தமிழிலக்கியங்களில் திருமால் பற்றிக் காணப்படும் குறிப்புகளைத் தகுந்த ஆதாரங்களுடன் தனித்தனியாக பதிந்து வருகிறார்.

இவைகளினால் நம் இதிகாசகங்கள் எவ்வளவு தொன்மையானது என்பதும் இந்நாட்டு மக்களின் மனதில் எப்படி இரண்டறக் கலந்து உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. மிக நல்ல திறனாய்வு.

இயல்பான பேச்சு வழக்கைப் பயன்படுத்தி அதில் நகைச்சுவை இழையோடும் வகையில் கருத்துகளை வழங்கும் திறமைதான் அவருக்கு மிகப்பெரும் வாசகர் வட்டத்தைத் தேடித் தந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

தமிழ்மணம் நடத்திய சிறந்த ஆன்மீக இடுகைக்கான போட்டியில் பெரும்பாலோர் வாக்குகளைப் பெற்று பரிசைத் தட்டிச் செல்பவர் என்பதே அதற்கு சான்று.

அவருடைய வலைப்பூவின் பெயர் மாதவிப்பந்தல். (The cat is out of the bag !!!)இதைத் தவிர இவர் பங்கேற்கும் பிற வலைப்பூக்கள் முருகனருள், ஆச்சார்ய ஹ்ருதயம், அம்மன்பாட்டு. இவை நானறிந்தவை, அறியாதவை எவ்வளவோ ! :)

ஆம், அன்பர்களே, வெகுவான வாசகர்களின் அபிமானம் பெற்ற

கே.ஆர்.எஸ் என்னும் Kannabiran Ravishankar

இந்த சிறப்பு இடுகை வழங்குகிறார்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று உடனடியாக ஒரு இடுகையை தயாரித்து சிறப்பு ஆசிரியராக ஒரு பதிவு வழங்க கே.ஆர்.எஸ். முன்வந்திருப்பது கபீர் வலைப்பூவின் அதிருஷ்டம் . 2007 ஆம் வருடத்திலிருந்தே இவர் நடத்திவரும் புதிரா -புனிதமா கேள்வி பதில் பாணியில் இம்முறை கபீரை எடுத்துக் கொண்டிருக்கிறார். வாசகர்களுக்கு இது ஒரு வரவேற்கத் தக்க மாறுதலாக இருக்கும்.

அவருக்கு மனமார்ந்த நன்றி. இது வெறும் கேள்வி பதில் அல்ல, அவர் ஆசிரியர் மட்டும் அல்ல. இது ஒரு சின்ன போட்டி அதற்கு அவர் நடுவரும் கூட. போட்டி மற்றும் பரிசு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனி கே.ஆர். எஸ் பேசுவார்.

கபீர் என்பவர்...

கவிஞரா? ஆன்மீகவாதியா?
தத்துவச் செம்மலா? குடும்பத் தலைவரா?
இந்துவா? மூஸ்லீமா? சீக்கியரா?
சாஸ்திர விற்பன்னரா?
சுஃபியா? யோகியா? சித்தரா?
இப்படியெல்லாம் அடக்கத் தான் முடியுமா?

கபீரின் தத்துவங்களைக் கபீரன்பன் தொடர்ந்து இந்த வலைப்பூவில் சொல்லத் தான் போகிறார்!
கபீரின் தோஹா என்னும் ஈரடி இந்திக் குறள் தொடர்ந்து இந்தப் பதிவில் பரிமளிக்கத் தான் போகிறது!
ஆனால் கபீர் யார்? என்று அறிந்து வைத்துக் கொள்வதும் ஒரு சுகம்! கபீர் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதில் ஒரு சுகம்!
ஏனென்றால் கபீர் மகான் என்பதை விட மனிதர், நம்மைப் போல! அவரால் முடிந்தால், நம்மாலும் முடியாதா என்ன? வாருங்கள் எட்டித் தான் பார்ப்போம்!


Lives of great men all remind us
We can make our lives sublime
And, departing, leave behind us
Footprints on the sands of time.

புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு!

முதன் முதலாக மாதவிப் பந்தல் அல்லாத ஒரு வெளிப்பூவில்! நான் மிக விரும்பும் வலைப்பூவில்! இதோ!

புதிரா? புனிதமா?? = கபீர்!


1

கபீரைப் போலவே இவரும் ஒரு நெசவாளி ?யார் இவர்?

அ) திருநீலகண்டர்

ஆ) நேச நாயனார்

இ) அமர்நீதி நாயனார்

ஈ) தண்டி அடிகள்

2

கபீரின் அருள் கவிதைகள், ஒரு மத நூலில் கூட ஏறி விட்டன! சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில்! இதைத் தொகுத்தது யார்?

அ) குரு ராம் தேவ்

ஆ) குரு கோவிந்த் சிங்

இ) குரு நானக்

ஈ) குரு அர்ஜூன் தேவ்

3

கபீரின் குருவாகக் கருதப்படுபவர், இராமானுச வழியில் வந்த ஒரு மகான்! சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்?

அ) துளசி தாசர்

ஆ) ஜெய தேவர்

இ) இராமனந்த தீர்த்தர்

ஈ) துக்கா ராம்

4

ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்

என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி
"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;"
என்று துவங்கும் ஒரு தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி அமைந்திருக்கிறது. எழுதியது யார் ?

அ) சேக்கிழார்


ஆ) நம்மாழ்வார்


இ) பாரதியார்


ஈ) கம்பர்


5

கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள்! தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள்! அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

அ) சிறப்பானவரின் பக்தர்

ஆ)கடவுளின் அடிமை

இ) சிறப்பானவரின் அடிமை

ஈ) கடவுளின் காதலர்

6

கபீரின் சொந்த ஊர் எது?

அ) காசி

ஆ) கயா

இ) கோரக்பூர்

ஈ) கோலாப்பூர்

7

கபீரின் சமாதி எங்கு உள்ளது?

இவ்வளவு பெரிய மகானின் உடல் மீது இந்து முஸ்லீம் பிரச்சனை எழ, துணியை விலக்கிய போது, ரோஜாக்கள் மட்டுமே இருந்தன என்பது வழக்கு! ஒரு பகுதி ரோஜாக்களை எரித்தார்கள்! இன்னொரு பகுதி ரோஜாக்களைப் புதைத்தார்கள்! இன்றும் சமாதியில், அடக்கமான இடம்/சாம்பலான இடம் என்று இரண்டுமே உள்ளது!

அ) மகர், கோரக்பூர்

ஆ) காசி (வாரணாசி)

இ) பத்ராச்சலம்

ஈ) பண்டரிபுரம்


8

கபீர், வெறுமனே சாத்திர விதிகளை மட்டும் பிடித்துக் கொண்டவர் இல்லை! இதனால் இந்து உயர் வகுப்பினருக்குப் பிடிக்காமல் போனது! வெறுமனே காபா திசைத் தொழுகைகள் பற்றிக் கருத்துச் சொன்னதால், முஸ்லீம்கள் சிலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனது!

இரு வகுப்பாரும் எந்த மன்னரிடம் கபீரைப் போட்டுக கொடுத்தனர்?

அ) காசி மகாராஜா

ஆ) குவாலியர் மகாராஜா மான்சிங்

இ) சிக்கந்தர் லோதி

ஈ) அவுரங்கசீப்

9


கபீர், உணவு முறைகளில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சொன்னாரா?அதாவது அசைவ உணவு உண்ணலாம் என்பது கபீரின் கொள்கையா?


அ) ஆம்


ஆ) இல்லை

10

இறைவனுடைய அடியவர்க்கு தோல்வியே நன்று என்பது கபீரின் கருத்து. இதே போல் இன்னொரு மகானும் சொல்லியுள்ளார். "What shall it profit a man if he gains the whole world and loses his own soul?"சொன்னது யார் ?

அ) ஏசுபிரான்
ஆ) முகம்மது நபிகள்
இ) புனித தாமஸ்
ஈ) இக்னேஷியல் லயோலா


எல்லாக் கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்கும் முதல் இரண்டு வாசகர்களுக்கு பரிசு உண்டு.

ராமகிருஷ்ண ஆசிரமத்தின் வெளியீடுகளில் (online e-store )ரூ 250 மதிப்பிற்கு புத்தகங்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவிற்குள்- ரா.கி.மி கட்டுதிட்டங்களுக்குட்பட்ட விலாசத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.

உங்கள் விடைகள் -இந்திய நேரப்படி 24 ஆம்தேதி மாலை 6 மணிக்குள் -பின்னூட்டப்பெட்டி மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

எவையேனும் தவறு என்று கருதி மாற்று விடைகளை அளித்தால் பின்னர் இடும் பின்னூட்ட சமயமே கணக்குக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தகுதியான காரணங்கள் இருந்தால் பரிசுத் தொகை இருவருக்கும் மேற்பட்ட பேர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படலாம். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

பங்கேற்கும் அனைவருக்கும் கூட ஒரு பரிசு உண்டு. அது பின்னர் தெரிவிக்கப்படும்.
---------------------------------------------------------------------

இப்போது பரிசுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி : ரவிஷங்கர் அவர்களை “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு அது என்ன ?

கே.ஆர்.எஸ் விடையளிக்கிறார்

$
0
0
சிறப்பு இடுகை -1 ( இங்கே சுட்டவும் ) -தொடர்ச்சி


புதிரா புனிதமா : கபீர்

வணக்கம் மக்களே!
புதிரா புனிதமாவில் வடநாட்டு அடியவர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை!
நம்ம ஊருன்னா மக்கள் ஈசியாச் சொல்லீருவாங்க!
இருந்தாலும், வட-தென் பேதமின்றி, அடியவர் என்ற ஒரே நோக்கோடு, தேடிப் பார்த்து விடைகளை முயன்ற அத்தனை நண்பர்களுக்கும் தேடல் கூட வாழ்த்துக்கள்! விடைகளை ஒவ்வொன்னாப் பார்க்கலாமா?

1. கபீரைப் போலவே இந்த நாயன்மார்! இவரும் ஒரு நெசவாளர்? யார் இவர்? = நேச நாயனார்!

சிறந்த சிவனடியாரான இவர், அடியார்களுக்கு ஆடை தைத்துக் கொடுப்பதையே பணியாகக் கொண்டிருந்தார்! அன்னதானம் எல்லாரும் பண்ணறது தான்! ஆனால் ஆடைதானம் என்று மானங் காக்கும் தொண்டினை அன்றே செய்த நல்ல உள்ளம்!

Other Choices-இல் அமர்நீதி நாயனார், உங்களைக் குழப்பவென்றே கொடுத்தது! :)
அதான் எப்பமே பண்ணுவியே-ங்கிறீங்களா? ஹா ஹா ஹா! குழம்பிக் கிடைக்கும் தெளிவு தான் ரொம்ப நாள் நிக்கும்! Water "fills" only in empty glass :)
அமர்நீதி நாயனார் ஈசனுக்குக் கோவணம் காத்துக் கொடுத்தவர்! ஆனால் நெசவாளர் அல்ல!
தண்டியடிகள் பார்வையற்றர் - இருந்தும் குளம் கட்டுவித்து, தண்ணீர்த் தாகம் தீர்த்தவர்!
திருநீலகண்டர் குயவர்! மனைவியிடம் அல்லாது இன்னொரு இடத்தில் லேசு மாசாக நடந்ததற்கு, மனைவியின் சத்தியத்தால் மனைவியிடமே நெருங்காது, காலமெல்லாம் ஒழுக்கம் காத்து நின்றவர்!

2. கபீரின் அருள் கவிதைகள், ஒரு மத நூலில் கூட ஏறி விட்டன! சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில்! இதைத் தொகுத்தது யார்? = குரு அர்ஜூன் தேவ்

குரு நானக் முதல் சீக்கிய குரு! கபீரின் சமகாலத்தவர் என்றும் சொல்வார்கள்!
குரு கோவிந்த் சிங் கடைசி குரு!
குரு அர்ஜீன் தேவ் தான் ஐந்தாம் குரு! நடுவாக உதித்தவர்! இவரே தனக்கு முன்பிருந்த குருக்களின் வாய்மொழிகளை எல்லாம் திரட்டி, குரு கிரந்த சாகிப் என்று எழுதுவித்தவர்!

பின்னாளில் இதர குருக்களின் வாசகமும் இதில் ஒவ்வொன்றாகச் சேர்ந்தது! 10 சீக்கிய குருக்கள் அல்லாது 15 மகான்கள் (பகத்) சொன்னதும், இதில் இடம் பெற்றுள்ளது!

அதில் ஒன்று தான் கபீரின் பீஜக்!
இராமானுச வழிவந்த இராமனந்தரின் வாசகமும் குரு கிரந்த் சாகிப்பில் உண்டு!


3. கபீரின் குருவாகக் கருதப்படுபவர், இராமானுச வழியில் வந்த ஒரு மகான்! சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்? = இராமானந்த தீர்த்தர்

இவரே கபீரின் மானசீக குரு!
கபீர் வளர்ப்பால் முஸ்லீம் என்பதால், சுற்றி இருந்த சில அக்ரஹார சீடர்கள் விலக்க, அவமானப்பட்ட கபீர், அழுது கொண்டே கங்கைப் படித்துறையில் படுத்துறங்கி விட்டார்!

விவரம் அறியாத இராமானந்தர், யாரோ இரண்டு வீர புருஷர்கள் (இராம-இலக்குவன்) தன் மடத்தை விட்டுப் போவதாக விடிகாலைக் கனவு கண்டு,
ஐயோ, பாகவத அபச்சாரம் (அடியார் பழித்தல்) நடந்து விட்டது போலிருக்கே என்று பதறி,

இதர வகுப்பாரை விசாரிக்க, உண்மை அறிந்து, எதற்கு கபீரை விரட்டினீர்கள் என்று மற்றவர்களைக் கடிந்து கொண்டார்!
உடனே கங்கைக் கரையில் குளிக்கப் போகும் போது, படியில் கால் வைக்க, அது கபீரின் மேல் பட்டு விட..."சீதாராம்" என்று இராமானந்தர் அலற, கபீர் எழுந்து வணங்க, அதுவே தாரக மந்திர உபதேசம் ஆயிற்று! கபீர் சீடர் ஆனார்!

4.

ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்
என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி...
"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;" என்று துவங்கும் ஒரு பெரும் தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி அமைந்திருக்கிறது. எழுதியது யார் ? = கம்பர்

கம்ப ராமாயணம் - கடைசிக் காண்டமான யுத்த காண்டத்தின் முதல் பாட்டு!

ஒன்றே என்னின், ஒன்றே ஆம்; பல என்று உரைக்கின், பலவே ஆம்;
அன்றே என்னின், அன்றே ஆம்; ஆம் என்று உரைக்கின், ஆமே ஆம்;
இன்றே என்னின், இன்றே ஆம்; உளது என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பம்மா!

சான்சே இல்ல-ல்ல? கம்பன் கவியே கவி! என்னமா நச்-ன்னு சொல்றாரு! உளதென்று உரைக்கின் உளதேயாம்! அப்படியே நம்மாழ்வார் பாசுரம் போலவே இல்ல? = உளன் எனில் உளன்!
பின்னாளில் கண்ணதாசன் இதைத் தான் எழுதினாரு! = உண்டென்றால் அது உண்டு!


5. கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள்! தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள்! அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

கபீர் + தாசர் = Great (Allah) + Servant = சிறப்பானவரின் அடிமை!
அல்லாஹ் என்னும் இறைவனின் திருப்பெயர்களுள், 37ஆம் திருநாமமாக, திருக்குர்ஆனில் வருவது கபீர் என்ற நாமம்!


6.கபீரின் சொந்த ஊர் எது? = காசி (வாரணாசி)

காசியில் வாழ்ந்த நெசவாளத் தம்பதிகள் (இணையர்கள்) நீரு-நீமா என்பவர்களின் பிள்ளையே கபீர்!
பிறப்பால் இந்து, முதல் மூன்று வருணத்துக்குள் பிறந்தவர் என்றெல்லாம் சில சாதி அபிமானிகள் பின்னாளில் எழுதிச் சேர்க்கப் பார்த்தனர்!
கபீர் பிரபலமாகி விட்டார் அல்லவா! வள்ளுவரை மதத்துக்குள் அடைப்பது போலத் தான், கபீரை அடைக்கப் பார்த்தார்கள் போலும்! ஆனால் கபீர் இரு மதங்களின் மூட வழக்கங்களையும் போலியான சாஸ்திர-சம்பிரதாயங்களையும் சேர்த்தே தான் எதிர்த்தார்!

7. கபீரின் சமாதி எங்கு உள்ளது? = மகர், கோரக்பூர்

பண்டிதர்களால் காசியை விட்டுத் துரத்திய பின், கபீரின் இடம் இதுவானது!
பலரும் மகர் பாவப்பட்ட ஊர் என்று பேச, இறக்கும் தருவாயில் காசியில் இறந்தால், எவ்வளவு பாவியானாலும் ஸ்டெரெயிட் மோட்சம் என்று குறுக்கு வழிக் கால்குலேஷன்களைச் சொல்ல...
அதை மறுக்க நினைத்த கபீர், கோரக்பூர் அருகிலுள்ள இந்த மகரிலேயே சமாதியானார்! இன்றும் சமாதிக் கோயில் உள்ளது!


8. கபீர், வெறுமனே சாத்திர விதிகளை மட்டும் பிடித்துக் கொண்டவர் இல்லை! இதனால் இந்து உயர் வகுப்பினருக்குப் பிடிக்காமல் போனது!
வெறுமனே காபா திசைத் தொழுகைகள் பற்றிக் கருத்துச் சொன்னதால், முஸ்லீம்கள் சிலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனது!
இரு வகுப்பாரும் எந்த மன்னரிடம் கபீரைப் போட்டுக் கொடுத்தனர்? = சிக்கந்தர் லோதி

பல வெற்றிகள் கண்டு, இறுதியில் குவாலியர் மகாராஜா மான் சிங்கிடம் தோற்றுப் போன சிக்கந்தர் லோடியே இவர்! சமயப் பொறையாளர் அல்லர்! இன்று தில்லியில் உள்ள Lodi Gardens இவரின் சமாதியே!

கபீர், போலியான சாஸ்திர-சம்பிரதாய வழக்கங்களை நையாண்டி செய்து பாடுவதால், பொத்துக் கொண்டு வந்து விட்டது பல பேருக்கு!
கோள் சொல்லுதல் பாவம் என்பது தான் சாஸ்திரம்! ஆனால் கபீர் மேலுள்ள வெறுப்புக்காக, சாஸ்திரத்தை மீறத் துணிந்தனர்கள், அதே சாத்திரம் பேசுவோர்! அது தான் வேடிக்கை! :)

மேலும் சுன்னத் போன்ற சில சடங்குகளைப் பற்றியும் கபீர் பாடியதால், இவர்களும் சேர்ந்து போட்டுக் கொடுக்க, சிக்கந்தர் லோடியோ கபீர் பார்ப்பதற்கு முஸ்லீம் பெரியவர் போல இருந்ததால் விட்டு விட்டான்! ஈஸ்வர-அல்லா தேரே நாம் என்று சொன்ன துறவியின் உயிரை எடுத்த அவன், கபீரை மட்டும் கொல்லாது, ஊரை விட்டு மட்டும் அகன்று விடுமாறு சொல்லி விட்டான்! கபீரும் காசியை விட்டு, கோரக்பூர் சென்று தங்கலானார்!


9. கபீர், உணவு முறைகளில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சொன்னாரா? அதாவது அசைவ உணவு உண்ணலாம் என்பது கபீரின் கொள்கையா? = இல்லை!

கபீர் சைவ உணவு-அசைவ உணவு என்று எதையும் குறித்தோ, விலக்கியோ சொல்லவில்லை! ஜீவ காருண்யம் என்னும் உயிர்கள் பால் கருணை என்பது மட்டுமே பாடியுள்ளார்! அதையே சீக்கியர்களும் புலால் மறுத்தலாகத் தங்கள் நூலில் கொண்டுள்ளார்கள்!

10. இறைவனுடைய அடியவர்க்கு தோல்வியே நன்று என்பது கபீரின் கருத்து. இதே போல் இன்னொரு மகானும் சொல்லியுள்ளார். "What shall it profit a man if he gains the whole world and loses his own soul?" - சொன்னது யார் ? = இயேசு பிரான்!

ஏழு ரொட்டித் துண்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்த மாயச் செயலினாலும்,
பின்பு பெத்செடாவில் பார்வையற்றவனைப் பார்க்க வைத்த பின்பும், சீடர்களிடம் தன் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே பேசும் போது, இயேசு பிரான் இவ்வாறு சொல்கிறார்!

இது புனித பைபிள் வாசகம்!
For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul? Or what shall a man give in exchange for his soul? - Mark 8:36, Matthew 16:26
உலக ஆசையின் களிப்புக்காக பலதை விலை கொடுக்கலாம்! ஆனால் ஆன்மாவையே விலை கொடுத்து விட்டால்? அது லாபமா? நட்டமா?
- இது இயேசுபிரான் காட்டும் நமோ (எனதில்லை) என்னும் ஆன்ம சிந்தனை! அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்! அடைய நின்றனரே!

உஷ்ஷ்ஷ்...அப்பாடா...பதில் சொல்லியாச்சி பத்துக்கும்! என் பரிசு எங்கே?
---------------------------------------------------
பதில் சொல்லப்படாத ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டுமே!

இப்போது பரிசுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி : ரவிஷங்கர் அவர்களை “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு அது என்ன ?


கே.ஆர்.எஸ் எவ்வளவுதான் தன்னை " மத்தபடி சீனியர் எல்லாம் ஏமி லேது!, மீ ஒன்லி ஒன் அப்பாவிச் சிறுவன்! :) சொல்லிக்கொண்டாலும் அவரால் தன்பெயரினுள்ளேயே கபீரை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் ரகசியத்தை மறுக்க முடியாதே !

Kannabiran Ravishankarஐ கொஞ்சம் மாற்றிப் போடுங்கள்
Kabirannan Ravishankarவருகிறதா இல்லையா !!! :))))
-------------------------------------------
வாசகர்களை கவரும் வகையில் ஒரு நல்ல இடுகையை தந்து இந்த வலைப்பூவை சிறப்பித்த கே.ஆர்.எஸ் வாழி வாழி.

தங்கள் எழுத்துப்பணி எப்போதும் போல் சிறப்பாகத் தொடரட்டும் என்று பிரார்த்திக்கிறேன். கபீர் வலைப்பூ வாசகர்கள் சார்பாக மிக்க நன்றி.

--------------------------

அடுத்து வரப்போவது யாரு ??????


சிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2

$
0
0
ஆசிரியர் அறிமுகம் :

கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் வாசகர்களுக்கு, இப்பதிவின் ஆசிரியர் யாரென்று புரிந்து விடும்.

கவிதாயினி. அதனால் கவி அவர் பெயரில் உண்டு. அபிநயமும் வெகுவாகப் பிடித்திருப்பதால் அதையும் 'நய'மாகத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு விட்டார்.

கவிநயா என்ற பெயரில் அழகிய கவிதைகளையும், சிறுகதைகளையும், எண்ண ஓட்டங்களையும் தனது நினைவின் விளிம்பில்என்கிற வலைப்பூவில் பகிர்ந்து வரும் இவரது வாசகர் வட்டம் பெரியது. ஒரு காற்றுக்குமிழ்பற்றிய அவருடைய வரிகள் அவருடைய கவி உள்ளத்தைப் படம் பிடிக்கிறது.

அதே சமயம் குழந்தைகளுக்கானக் கவிதைகள் கூட எழுத வல்லவர்தான் என்பதை அவருடைய ஆனைப்பாருபட்டாம்பூச்சி போன்ற கவிதைகளைப் படித்தாலேத் தெரியும். இரண்டு பாடல்களிலிருந்தும் சில மாதிரி ’நம்பிக்கைத் தரும்’ வரிகள் இங்கே :
.....
ஆனை யோட பலத்தைப் பாரு
தும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!
--------------
கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது
சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்
நாளை உலகை இன்றே தரலாம்!!

குழந்தை மனம் உடையவர்களால்தான் குழந்தைகளுக்காகப் பாடமுடியும் என்று எப்போதோ படித்த நினைவு. "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"

இங்கே கவிநயா அவர்கள் நம் அழைப்பை ஏற்று கட்டுரை ஒன்றை வழங்கி இருப்பது பெருமகிழ்வு தருகிறது. அவருக்கு வணக்கங்கள்.

இனி கவிநயா அவர்களின் எழுத்து வண்ணம்

கற்றதனால் ஆய பயன்

ஒரு சாது இருந்தாராம். பல வருடங்களாகச் சாதனை செய்ததில், அவருக்கு ஒரு அற்புதமான சித்தி கிடைத்ததாம். அதாவது, அவரால் தண்ணீரின் மேல் அநாயாசமாக நடக்க முடியுமாம். அதைப் பற்றி அவருக்கு ஏகப் பெருமையாம்.
ஒரு நாள் இவர் கங்கைக் கரையில் காத்துக் கொண்டிருந்த இன்னொரு சாதுவைப் பார்த்தாராம். “என்ன இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.
அவரும், “கரையைக் கடக்க வேண்டும். படகுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாராம்.

உடனே நம் சாது, “ப்பூ… இவ்வளவுதானா? நானாக இருந்தால் நடந்தே கடந்திருப்பேனே” என்றாராம், மகாப் பெருமையுடன்.

“அப்படியா!” என்று ஆச்சர்யப்பட்ட அந்த இன்னொரு சாது, “இந்த சித்தியைப் பெற உங்களுக்கு எத்தனை காலம் ஆயிற்று?” என்று கேட்டாராம்.

“சுமார் பன்னிரெண்டு வருடங்கள் ஆயிற்று” என்று பதிலிறுத்தாராம் அவர்.

“இதனால் என்ன பயன் ஏற்பட்டது? உங்களால் இறைவனை அறிய முடிந்ததா? காலணா மிச்சம் பண்ணுவதற்காக, பாதி வாழ்நாளை வீணடித்து விட்டீர்களே.”என்று சொல்லி விட்டுப் போனாராம் மற்றவர்.

எல்லோருக்கும் தெரிந்த கதைதான். விவரங்கள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கக் கூடும், இருந்தாலும் கதை சொல்ல வரும் கருத்தை மட்டுமே மனதில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இறைவனை அறிவதே பிறவியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைய உதவாத எதுவும் பயனற்றதே.

அனைத்து மகான்களுமே வலியுறுத்தும் கருத்து, இது.

ஸ்ரீராமகிருஷ்ணரும் அடிக்கடி இதைப் பற்றி பேசியிருக்கிறார். நாம் இந்த உலகத்திற்கு எதற்காக வந்தோமோ அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஒரு மாந்தோப்பிற்கு மாம்பழம் சாப்பிடவெனப் போகிறோம். அங்கே போனதும் வந்த வேலையைக் கவனிக்காமல், அந்தத் தோப்பில் எத்தனை மரம், மரத்தில் எத்தனை கிளை, கிளையில் எத்தனை இலை, மரத்தில் எத்தனை பழம், இப்படி எண்ணிக் கொண்டிருந்தால் தோப்பின் சிறப்பு தெரியும்; ஆனால் அதனால் மாம்பழத்தின் ருசி எப்படித் தெரியும் என்பார்.

அதைப் போலத்தான் நாமும் பல விஷயங்களையும், இறைவனைப் பற்றியுமே கூட, அனுபவித்து அறிய முயலாமல், கற்று அறிவதில் மட்டுமே திருப்தி அடைந்து விடுகிறோம்.

நெய்யையே பார்த்திராத ஒருவருக்கு நெய்யின் ருசி எப்படி இருக்கும் என்று எப்படி விளக்க முடியும்? அதைப் பற்றி புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள முடியுமா? ஆனால் அதைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்து விட்டால் உடனே தெரிந்து விடுகிறது... இதுவும் குருதேவர் சொல்வதுதான்.

அதைப் போலத்தான் இறைவனும். அவன் படித்து அறியக் கூடியவன் அல்ல; உணர்ந்து அடைய வேண்டியவன் – இதுவும் அவனை அனுபவித்து அறிந்தவர்கள் கூறுவதுதான்.

வேதங்களையும் உபநிடதங்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் இன்ன பிறவையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆனால் அவை எதற்காக ஏற்படுத்தப் பட்டனவோ, அதனை அடைய அந்த அறிவு பயன்படா விட்டால், அத்தனையும் கற்பதன் பயன்தான் என்ன?
வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தானே சொல்கிறார்:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

அலுவலக வேலையாக நம்மை வெளியூர் அனுப்புகிறார்கள். வந்த வேலையை விட்டுவிட்டு ஜாலியாக ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் (நம்மூர் அரசாங்க உத்தியோகத்தைச் சொல்லவில்லை!). ஆனால்

நாம் பிறவி எடுத்ததன் காரணத்தை கவனிக்கா விட்டால் இந்த வேலையை விட்டு எங்கேயும் தப்பிச் செல்ல முடியாது! வந்த வேலையைக் கவனிக்கும் வரை திரும்பத் திரும்ப பிறந்து கொண்டே இருக்க வேண்டிதான் வரும்! ஜீரா ரொம்ப ருசி என்பதற்காக அதை மட்டும் சாப்பிட்டு விட்டு குலோப் ஜாமூனை சாப்பிடா விட்டால் எப்படி?!

அது சரி, குலோப் ஜாமூனை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியவில்லையே என்கிறீர்களா? அதற்கும் ஸ்ரீராமகிருஷ்ணர், கபீர், போன்ற அனைத்து மகான்களும் ஒரு சுலபமான வழியைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதுவே நாமஜபம்.

கலியுகத்திற்கு மிகவும் உகந்தது நாமஜபமே என்று ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்லுவார்.

இதைப் பற்றி கபீர் சொன்ன ஈரடிகள், கபீரன்பரின் தமிழாக்கத்தில், இதோ:

செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவை நூறு படிப்பதும் வீணே


அதனால், ஊரைச் சுற்றிக் கொண்டிருக்காமல், வந்த வேலையைக் கவனிப்போம்.

கவிநயான்னு பேர் வச்சுக்கிட்டு கவிதை சொல்லலைன்னா எப்படி, அப்படின்னு விருந்துக்கு அழைச்சவர் சொன்னதால…

இப்போ சொன்னதெல்லாம் சேர்த்து வச்சு…

இதோ ஒரு கவுஜ:


உலகெலாம் சுற்றி வந்து
உன்னிப்பாய்க் கற்பார் பலநூல்;
மொழியெலாம் கற்று வந்து
மழையெனப் பொழிவார் அறிவை;
கலையெலாம் கற்று வந்து
உலகெலாம் பரப்புவார் புகழை.

சாதனை பலசெய் தாலும்
பழவினை அழிவ தில்லை;
எத்தனை கற்றறிந் தாலும்
இறைவனேட் டறிவினி லில்லை.

உள்ளுக்குள் உறையும் அவனை
உணர்வினில் அறிய வேண்டின்
கள்ளெனச் சுவைக்கும் நாமம்
உள்ளத்தில் ஊறிட வேண்டும்.

இப்பொருள் அப்பொரு ளெல்லாம்
பொய்மையின் வடிவே ஆகும்;
மெய்ப்பொருள் அறிவது ஒன்றே
மனிதர்க்கு மெய்யறி வாகும்!

(கபீர் இரண்டு அடிகளில் சொன்னதைச் சொல்ல, நமக்கு இத்தனை அடி வேண்டியிருக்கு!)

கபீரன்பர் அவர்கள் அளித்த வாய்ப்பிற்கு நன்றிகளுடன்…

அன்புடன்,

கவிநயா

----------------------------------------
மாம்பழத்தில் ஆரம்பித்து நெய், குலாப்ஜாமூன், ஜீரா வரை தித்திப்புச் சுவைகளை அள்ளித் தெளித்து விட்ட கவிநயா அவர்கள் கடைசியில் மனிதனுக்கு வேண்டிய 'கள்' ளையும் விட்டுவைக்கவில்லை :)))

இடுகை முழுவதும் தித்திக்கக் காரணம் இல்லாமல் இருக்க முடியாது.

இந்த வாரம் தீபாவளி !

அவருக்கும் வாசகர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.


அன்னை அருளில் திளைக்கும் கவிநயா அவர்களின் எழுத்து மேன்மேலும் அருட்சுவையை கவிதையாகவும் கட்டுரையாகவும் பரப்பட்டும் என்று வேண்டி வாழ்த்துவோம்.

சிறப்பு இடுகை- விருந்தினர் படைப்பு -3

$
0
0
ஆசிரியர் அறிமுகம் :

”படிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், விவரிக்கிறோம், தெரிந்து கொள்ள முயல்கிறோம்!
ஆனால் கோடிக்கணக்கான வார்த்தைகள், நூற்றுக் கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம், அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி "எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது?"என்பதுதான்!வெளியே தேடுவதை விட,தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி"என்கிறார் ஸ்ரீ அரவிந்தஅன்னை!


மேலே காணும் உபதேசத்தின் முதல் பகுதியை சென்ற பதிவில் கவிநயா அவர்கள் தமது இடுகையில் கூறிய பயனற்ற ஏட்டுக்கல்வி என்கிற மையக்கருத்தில் கண்டோம். மேற்கண்ட ஸ்ரீ அன்னையின் வாசகங்களையே தமது வலைப்பூவின் மையக்கருத்தாக வைத்திருக்கும் இந்த ஆசிரியரின் வலைப்பூவின் பெயரே சற்று வினோதமாக இருந்தது, Consent to be.... nothing. (நான் புரிந்து கொண்டது “willing to be a zero” -தானொரு பூஜ்யம்). இது மட்டுமல்லாமல் (சு)வாசிக்கப் போறேங்கஎன்கிற வலைப்பக்கத்தில் படித்ததில் பிடித்தது என்னும் வகையில் தம் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

தமது வலைப்பூவை ஒரு காலிப் பாத்திரமாக சித்தரித்துக் கொள்ளும் இவர் அப்பாத்திரத்தினின்று படைக்கும் அமுது பல்சுவையானது. ஆரம்பத்தில் அரவிந்தருக்கும் ஸ்ரீ அன்னைக்கும் மட்டுமேயான ஒருவலைப்பூ என நான் நினைத்திருந்த போது அது ஆன்மீகம், அரசியல், மனித வளம்,கல்வி, சுய முன்னேற்றம், விளம்பரத்துறைஎன பல பரிமாணங்களில் மலர்ந்த போது ஆசிரியருடைய உற்சாகத்தைக் கண்டு வியக்கிறேன். அவருடைய வெளிப்படையான விமரிசனங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் என்னை அவரது வலைப்பூக்களின் தொடர் வாசகனாக வைத்திருக்கிறது.

இந்நேரம் நீங்களே ஊகித்து இருப்பீர்கள்!

வேறு யாருமல்ல, பெருமளவு பதிவர்களுக்கு நன்கு அறிமுகமான திரு எஸ்.கிருஷ்ணமூர்த்திஅவர்களே இந்த சிறப்பு இடுகையை அளிக்க முன்வந்துள்ள விருந்தினர்.

அவர் நம்அழைப்பை ஏற்று கபீரைக் குறித்து எழுதுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

கபீரைப் பற்றிய இந்த இடுகையிலும் ஸ்ரீ அன்னைக் குறிப்பிடும் “கணநேர அனுபவ”த்தின் அருமையையும் கபீரின் பெருநோக்கையும் சுட்டிக்காட்டுகிறார்.

இனி திரு கிருஷ்ணமூர்த்தி பேசுவார்.

----------------------------------------------------------------------

தெரியாதவனையும் தேடி வந்த கபீரின் கனிமொழிகள்

இறைவன் இருக்கின்றானா - மனிதன் கேட்கிறான்!
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே
வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் -அவன் வசப்படவில்லை!
நான் நாத்திகனானேன் அவன்
பயப்படவில்லை!

நீண்ட நாட்களுக்கு முன்னால் ’அவன் பித்தனா’ என்ற படத்தில் டி.எம் சௌந்தரராஜன்-சுசீலா இருவரும் இணைந்து பாடிய ஒரு அருமையான பாடல், இப்போது ஒரு கேள்வியாக எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்வியை எனக்குள் எழுப்பியது எனக்கு கபீரன்பன் அவர்கள் அனுப்பிய ஒரு மின்னஞ்சல்!

கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தில் நூறு இடுகைகளை நிறைவடைந்ததை ஒட்டி சில சிறப்புப் பதிவுகளை அதன் வாசக-பதிவர்களைக் கொண்டு வெளியிடும் தன் உத்தேசத்தைத் தெரிவித்து அதற்கு என்னிடமிருந்தும் ஒரு கட்டுரை வேண்டியிருந்தார்.

1965 களில் உணர்ச்சிகளைக் கிளறி விட்டு ஹிந்தி எதிர்ப்பு என்று நடந்த கண்மூடித் தனமான போராட்டத்தில் ஈடுபாடுகொண்டு, ஹிந்தியைப் படிப்பதைத் தவிர்த்தவன் நான். இன்றைக்கும் எனக்கிருக்கும் ஒரே வருத்தம், இந்தப் புண்ணிய பூமியில் பிறந்த மகான்களைப் பற்றி, குறிப்பாக மீராபாய், கபீர் தாசர், துளசிதாசர், சைதன்ய மஹாப்ரபு போன்ற வட இந்தியாவில் பிறந்த வாழ்ந்த மகான்களைப் பற்றிய நேரடியான பரிச்சயம், இந்த மொழி வெறுப்பினால் கைகூடாமல் போய்விட்டதே என்பது தான்!

அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, நிர்வாகம் என்று எதை எதையோ தொட்டு எழுதத் தெரிந்த, எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிற என்னைப் போய், ஒரு மகானைப் பற்றி எழுது, அவரைப் பற்றி உனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள் என்று கேட்டால், எதுவும் தெரியாத நான் என்னவென்று எழுதுவேன்? எப்படி எழுதுவேன்?

ஒரு கவிஞனின் வார்த்தைகளில் வெளிப்படுகிற உணர்ச்சிகள் எதுவாக இருந்தாலும் சரி, அதை மொழி பெயர்ப்பில் அப்படியே கொண்டு வருவது என்பது மிகவும் சிரமம். அதுவே ஒரு உன்னதமான மெய்ஞானத்தைப் போதிப்பதாக இருந்தால்.........!

முஹமது ஜலாலுதீன் ரூமியின் சூஃபி கவிதைகளை, நெருடல் எதுவுமில்லாமல் மொழிபெயர்த்திருந்த எனக்கு ஒரு பாடல்நினைவுக்கு வந்தது.

நீ


உயிராய்ப் பூமியில் தோன்றிய தருணமே

ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!

ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்
கூடவே வந்தது உனக்காக.

மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன் பயம் கொள்ள வேண்டும்?
மரணம் உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும் போது
தேவதை ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை

அங்கேயே தேங்கிவிடாதே தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்
பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்
சிறுதுளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறுதுளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறுதுளியாய் ஆனதைப்பார்!


(ஜலாலுதீன் முகமது ரூமி !)

அனேகமாக எல்லா விஷயங்களையுமே தேடிப் படிப்பதால், ஒரு வாசகனாக, பல விஷயங்களையும் அனுபவித்து, அதில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளைப் பதிந்து கொண்ட வகையில் எழுதியவை இவை. மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்பதற்காக செய்ததில்லை இது.

இவை இணையத்தில், தேடிப் படித்துக் கொண்டிருக்கும் தருணங்களில் ஆங்கிலத்தில் கிடைத்தவை. அவைகளை ஆர்வத்தோடு கவனித்து வருகிறேன். ரூமியின் கவிதை எவ்வளவு தூரம் சிவபுராணத்தின்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

என்கிற வரிகளோடு ஒத்துப் போகிறது என்பதை பார்க்கும் போது ஒன்று புரிகிறது. தேசங்கள், மொழிகள், காலங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், மெய்ஞானிகள் அத்தனை பேருக்கும் ஒரே ஆன்மீகத் தேடல் தான், ஒரே ஆன்மீக உண்மைதான் வெளிப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து அதிசயித்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட தேடல் நமக்குள்ளும் நிகழவேண்டும் என்பதற்காகவே இந்தமாதிரி ஒப்புமை, சிந்தனைகளை இறைவன் நமக்களிக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டு, அந்தக் கண நேரத்து வெளிச்சக் கீற்றையும் அனுபவித்திருக்கிறேன். ஒரு சராசரி, ஆசாபாசங்களுக்குட்பட்ட மனிதனாக, இருப்பதில் இருந்து உயரவேண்டும் என்ற வேட்கையை இந்தமாதிரிக் கணநேர வெளிச்சக் கீற்றுக்கள் தான் தீர்மானிக்கின்றன இல்லையா?

கபீரின் ஈரடி கொண்ட பாடல்களை, தோஹே என்று சொல்கிறார்கள், தமிழில் மிக எளிமையாக மொழிபெயர்த்து வருகிற இந்த வலைத் தளத்தில் தான், ஹிந்தி மொழியை அறியாத நான், கபீர்தாசர் என்ற மகாத்மாவின் பாடல்களை ஜீவனுடன் தமிழிலேயே பரிச்சயம் செய்துகொள்ள ஆரம்பித்தேன்.

கருவூரார் சன்னதியில் என்றைக்கோ பார்த்த வாசகங்கள், "குரு அருளே திருவருள்!" என்பதாக நினைவுக்கு வர, மணிவாசகப் பெருமானது வார்த்தைகள் "அவனருளாலே அவன் தாள் வணங்கும்" நுட்பத்தைச் சொல்லாமல் சொல்லின. குருவருளாகக் கிடைத்தாலொழிய இறை அனுபவத்தைப் பேசுவதோ, வார்த்தைகளில் சொல்ல முனைவதோ கைகூடாது என்பதும் நன்றாகவே உறைத்த அந்தத் தருணம்....!

நன்றறியேன் தீதறியேன் நான்என்று நின்றவன்ஆர்
என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே


என்று தாயுமானவர் பராபரக் கண்ணியில் கசிந்துருகியதை நினைத்துக் கொண்டு, என்னுடைய ஏலாமையைக் கபீரன்பனிடம் இன்னொரு மின்னஞ்சலில் தெரிவித்தபோது, கபீரின் பாடல் ஒன்றை அவரே தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்.

ஜலாலுதீன் ரூமியின் பாடலுக்கும் மணிவாசகப் பெருமானுக்கும் நாம் காணும் ஒற்றுமையின் ஒளிக்கீற்று கபீரின் இந்தப் பாடலில் பட்டப் பகலென ஒளி விடுகிறது. வெறும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்கள் இறைக்காட்சியை கொடுக்க முடியாது என்பதை இருமதத்தினருக்கும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடவுள் ஹிந்துவமல்ல முஸ்லீமும் அல்ல. அவன் வசிப்பது தெற்கிலோ மேற்கிலோ அல்ல. இடைவிடாத சிந்தனையின் மூலம் தன்னுள்ளே உணரப்படும் ஒரு அரிய பேருணர்வே என்பதை இந்தப் பாடல் மூலம் கபீர் சொல்கிறார்.

अलहु एकु मसीति बसतु है अवरु मुलखु किसु केरा ॥
If the Lord Allah lives only in the mosque, then to whom does the rest of the world belong?
மசூதியில் மட்டுமே அல்லா வாழ்ந்தால் இவ்வுலகம் யாருக்குச் சொந்தம்?

हिन्दू मूरित नाम निवासी दुह मिह ततु न हेरा ॥१॥
According to the Hindus, the Lord's Name abides in the idol, but there is no truth in either of these claims.
மூர்த்தத்தில் இருப்பவன் இறைவன் எனும் ஹிந்துவும் சரியல்ல

अलह राम जीवउ तेरे नाई ॥
O Allah, O Raam, I live by Your Name.
அல்லா! ராமா!! உம் பெயரில் வாழ்பவன் நான்

तू किर िमहरामित साई ॥१॥

Please show mercy to me, O Master.

கருணை பொழிவாய் ஓ தலைவனே !

दखन देसि हरी का बासा पिछिम अलह मुकामा ॥
The God of the Hindus lives in the southern lands, and the God of the Muslims lives in the west.
தெற்கில் வசிப்பதோ ஹிந்துவின் கடவுள், இசுலாமியர்தம் கடவுளோ மேற்கே

कहतु कबीरु सुनहु नर दिल् मिह खोजि दिलै दिल खोजहु एही ठउर मुकामा ॥२॥
So search in your heart - look deep in to your heart of hearts: this is the home and the place where God lives.
இதயத்தில் தேடு, உள்ளே ஆழ்ந்து தேடின் அதுவே இறைவன் வாழும் இல்லம்

बर्हमन िगआस करिह चउबीसा काजी मह रमजाना ॥
The Brahmins observe twenty-four fasts during the year, and the Muslims fast during themonth of Ramadaan.
அந்தணர் நோன்பு இருபத்திநாலு மணியாம், இசுலாமியருக்கோ அது ரமதான் மாதம்


गिआरह मास पास कै राखे एकै मािह िनधाना ॥३|
The Muslims set aside eleven months, and claim that the treasure is only in the onemonth.||3||
பதினோரு மாதம் விட்டு எஞ்சிய ஒரு மாதமே இறைபுகழாம்

कहा उडीसे मजनु कीआ िकआ मसीति सिरु नांएं ॥
What is the use of bathing at Orissa? Why do the Muslims bow their heads in the mosque?
ஒரிஸ்ஸாவில் தீர்த்த நீராடல் எதற்கு ? மசூதியில் தலை வணங்குவதும் எதற்கு?

दिल मिह कपटु िनवाज गुजारै किआ हज काबै जांएं ॥४॥
If someone has deception in his heart, what good is it for him to utter
prayers? And what good is it for him to go on pilgrimage to Mecca? ||4||

கபடம் மண்டிய மனதில், பிரார்த்தனையின் பயனும் என்ன? ஹஜ் பயணமும் எதற்கு?

एते अउरत मरदा साजे ए सभ रूप तुम्हारे ॥
You fashioned all these men and women, Lord. All these are Your Forms.
தேவனே, உன் விருப்பில் வந்தனர் ஆடவரும் பெண்டிரும்; யாவரும் உன் வடிவே.

कबीरु पूंगरा राम अलह का सभ गुर पीर हमारे॥५॥
Kabeer is the child of God, Allah, Raam. All the Gurus and prophets are mine. ||5||
இறைவனின் குழந்தை கபீரன், அல்லா, ராம், குரு யாவரும் என்னவரே

नरवै परहु एक की सरना ॥
Says Kabeer, listen, O men and women: seek the Sanctuary of the One.
கபீர் உரைப்பேன், தஞ்சம் அடைவீர் , மாந்தரே

केवल नामु जपहु रे पर्ानी तब ही निहचै तरना ॥६॥२॥
Chant the Naam, the Name of the Lord, O mortals, and you shall surely be carried across.

செபித்திடுவீர் அவன் நாமம், அக்கரை சேர்வதும் நிச்சயமே.


கிட்டத்தட்ட இதே கருத்து அமைந்த இன்னொரு கபீரின் பாடலை, திரு ஜீவா வெங்கட்ராமன் தனது அருள் என்ற வலைப்பதிவில் மூன்றே முக்கால் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழில் மொழி பெயர்த்துப் போட்டிருப்பதையும் காணலாம்.

”என்னை எங்கே தேடுகிறாய்” என்று இறைவன் கேட்பது போல் அமைந்த அந்த பாடலின் ஒலி-ஒளி வடிவம் யூட்யூப் தளத்திலிருந்து இங்கே:


[ஸ்ரீ அன்னை சொன்ன”..வெளியே தேடுவதை விட,தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி"என்ற கருத்தையே இந்தப் பாடலில் கபீரும் வலியுறுத்தியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது - கபீரன்பன் ]

கபீர் தாசர் தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, தன்னுடைய மறைவுக்குப் பின்னால் கூட ஒரு குறுகிய மத அடையாளம் தன்மேல் சுமத்துவதை விரும்பியதில்லை என்பதுமே ஒரு சுவாரசியமான கதையாகச் சொல்லப்படுகிறது.

இருக்கும்போதும் ஹிந்து முஸ்லிம்
சர்ச்சை

இறந்தபோதும் கபீரைத் தொடர்ந்து வந்தது.
அவரவர் மத வழக்கப்படிதான்
அடக்கமோ எரிப்பதோ என்று
இருதரப்பும் கோபத்துடன் குரலெழுப்பிக்
கொண்டிருந்த தருணம்

கபீர் எழுந்தார்! இருதரப்புக்கும் சொன்னார்!
"என் சடலத்தைத் தூக்குங்கள்!"
சீடரும் அவ்வாறே தூக்கினர்!

சடலம் இருந்த இடம்
முழுக்க மலர்கள்! மணம் வீசும் மலர்கள்!

இருகூறாய்ப் பிரித்துக் கொண்டு இருதரப்பும்
இருவிதமாய் கபீரை
அடக்கம் செய்தனர் என்றே

செவிவழிச் செய்தியைக் கதையொன்று சொல்லும்!

மேன்மக்கள் அமைதியை,
சமத்துவத்தைச் சுமந்து வந்தபோதிலும்
கீழ்மையில் இழிந்த மாந்தர்
அவரை வைத்து
அடித்துக் கொள்வதற்கான

காரணத்தைத் தான் தேடி நிற்பார்!
பூரணமாய் நின்ற பொருள்

கண்ணெதிரே தோன்றிடினும்
கிஞ்சித்தும் அதைக் காணார்.

ஹிந்துவென்றும் முசல்மான் என்றும்
கபீர் தன்னைச் சொன்னதில்லை!

ஹிந்துதானென்று ஒருதரப்பு, இல்லை இல்லை
சூஃ பி தான் என்றொரு தரப்பும்
மாறி மாறி வம்புதான் செய்திருக்கக்
கபீரின் கனிமொழியைக்

கண்டுணரக் காலம் கனிந்து வரவேணும்!
மொழிகடந்த மெய்ஞானம்

கபீரின் கனிமொழிகள் தளத்தில்
தமிழில் பெருகிவர
உள்வாங்கும் திறம் வேண்டும்!
குருவருள் குறையின்றி இப்பணியை நடத்தட்டும்!

கபீரின் கனிமொழியைத்
தமிழில் தந்ததற்கு நன்றியுடன் வணங்குகிறோம்!


--------------------------------------

வாரம் மூன்று நான்கு இடுகைகளை பலவிதமான தலைப்புகளில் இடும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது கட்டுரையுடன் அனுப்பி வைத்த குறிப்பில்

“....இப்படி ஒரு சாக்கை வைத்தாவது, கபீரின் மொழிகளைத் தொடர்ந்து சிந்திக்கிற வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறதே என்பதில் மிகவும் சந்தோஷம்”
என்று எழுதியிருந்தார்.

சந்தோஷம் அவரது மட்டுமல்ல, வாசகர்கள் அனைவரதும் ஆகும் என்று கூறி நமக்காக நேரம் ஒதுக்கியதற்கு அவருக்கு நன்றி. அவரது ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த எழுத்துக்கள் அதிக அளவில் வாசகர்களை அடையட்டும் என்று வாழ்த்தி நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

சிறப்பு இடுகை -விருந்தினர் படைப்பு -4

$
0
0
ஆசிரியர் அறிமுகம்

இந்த இடுகைக்காக அறிமுகம் செய்யப்படும் ஆசிரியரின் ஆன்மீக ஈடுபாட்டை அவருடன் தொலைபேசி மூலம் உரையாடித் தெரிந்து கொண்டிருக்கிறேனேத் தவிர எழுத்து மூலம் அல்ல. தன்னை ஒரு வாசகனாக அறிமுகப் படுத்திக் கொள்ளவே அவர் விழைவார், எழுத்தாளராக அல்ல.

பலவேறு வகையான ஆன்மீகப் பயிற்சிகளில் ஆர்வமுடன் அவர் ஈடுபடுகிறார். தியான முறைகள், கீதைப் பயிற்சி, சத்சங்கங்கள் என அவருடைய ஈடுபாடு தொடர்கிறது. குறிப்பாக நாமசெபத்தின் மகிமையில் அவருக்குள்ள ஈடுபாட்டை இந்த வலைப்பூவின் பின்னூட்டங்கள் வழியாகவே அறிந்து கொள்ளலாம்.

தன் பெயருடன் ஸ்ரீ யோகிராம் சூரத்குமாரை இணைத்துக் கொண்டுள்ள திரு பாலசந்தர் அவர்களே இந்த இடுகைக்கான குறிப்புகளையும் கட்டுரையையும் கொடுத்து உதவியுள்ளார்.

YRSK BALU என்றால்தான் பல பதிவர்களுக்கும் புரியும்.

அவருக்கு தம் குரு மீதுள்ள பக்தியை இக்கட்டுரையைப் படித்தாலே புரிந்து விடும். ஆம், இந்தக் கட்டுரை யோகிராம் சூரத்குமாரை மையமாகவே வைத்து பின்னப்பட்டுள்ளது.

கட்டுரைக்கான அழைப்பைத் தயங்காமல் முன் வந்து ஏற்று சமீபகாலம் வரையில் நம்மிடையே வாழ்ந்த ஒரு மகானைப் பற்றி அறிய தந்தமைக்கு அவருக்கு வாசகர்கள் சார்பாக நன்றி.

இனி பாலசந்திரன் அவர்களது கட்டுரை.

அய்யன் விரும்பும் பிச்சைக்காரன்


திருவண்ணாமலையில் தேரடி மண்டபத்திலோ புன்னை மரத்தடியிலோ தனது அய்யனின் விருப்பப்படி யோகிராம் சூரத்குமார் காலம் கழித்த வருடங்கள் அவை. பெரும் தமிழ் அறிஞர்களான கி.வா.ஜகன்னாதன், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பெரியசாமி தூரன் போன்றவர்கள் அடிக்கடி அவரை சந்தித்து சத்சங்கம் நடத்திய காலம். ஞானானந்த கிரி அவர்களின் தபோவனத்திலிருந்து சிவராமகிருஷ்ண ஐயர் என்பவரும் அவ்வப்போது பங்கு பெறுவதுண்டு.

ஆன்மீகத்தின் சிகரங்களான தபோவன ஞானானந்த கிரி சுவாமிகளிடமும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மஹாசுவாமிகளுடனும் தனிப்பட்ட முறையில் யோகிராம் ஆழமான தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் இருவரிடமும் பெரும் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார்.

சில அன்பர்கள் மயிலாடுதுறை அருகிலுள்ள வனகிரி என்ற ஊருக்கு மஹாப் பெரியவரின் சொற்பொழிவைக் கேட்பதற்காக புறப்பட்ட பொழுது யோகிராமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். மண்டபத்தில் பெரியவர் தரிசனம் நன்கு கிடைக்கும் வகையில் ஒரு தூண் அருகே அமர்ந்திருந்தார். அன்றைய சொற்பொழிவில் பெரியவர் அந்தர்முகம் (உள்முகம்) கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கொண்டிருந்தார். இடையே யோகிராம் பக்கம் கையைக் காட்டி “ஒரு நல்ல உதாரணம், இதோ இங்கேயே ஒரு அந்தர் முகி” என்று குறிப்பிட்டார். உடனே கூட்டம் யோகிராம் சூரத்குமாரை சூழ்ந்து கொள்ளத் தொடங்கியது. அதை பெரியவரே அன்புடன் தடுத்து யோகியருக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

யோகிராம் சூரத்குமார் ஒரு சரித்திரப் பட்டதாரி. ஆங்கிலம் நன்கு அறிந்த ’பிச்சைக்காரர்’. அவர் வடநாட்டவர் என்றறிந்த சில ஹிந்தி எதிர்ப்பு விஷமிகள் அவருக்கு விடாமல் தொந்தரவு கொடுத்தனர். பைத்தியம் என்று அடித்து துன்புறுத்தினர். அவரது ஆடைகளை கிழித்து வேடிக்கை பார்த்தனர். பதிமூன்றுமுறை அவர் தங்கியிருந்த வீட்டுப்பூட்டு உடைக்கப்பட்டது. அவரை கொலை செய்யவும் முயற்சி நடந்தது. இவை எதுவுமே அவரை பாதிக்கவில்லை. யாரிடமும் கோபம் பாராட்டவில்லை.

ஒரு பக்கம் ஞானிகள் தமக்கு சமமாக அவரை மதித்துப் போற்றினர். மறுபக்கம் அஞ்ஞானிகள் அவருக்கு தீங்கிழைக்க அஞ்சவில்லை. கபீர்தாஸரின் ஈரடி ஒன்றுஅவருடைய நிலமையை பொருத்தமாக எடுத்துக் காட்டுகிறது.

ஞானியை ஞானி காணில் பெரும்ஞான ரசக்கொண் டாட்டம்
ஞானியோடு அஞ்ஞானியோ பாழும் சிரநோவுத் திண்டாட்டம்


சூரத்குமார் அவர்களுக்கு துன்பம் இழைக்கப்பட்ட காலத்தில் இருபெரும் தவசிகளும் தத்தம் வழியில் யோகியாருக்கு பக்கபலமாக இருந்ததாக அறிகிறோம்.

யோகி ராம்சூரத்குமார் சில வேளைகளில் திருக்கோவிலூர் தபோவனத்திற்கு விஜயம் செய்வதுண்டு. ஸ்ரீ ஞானானந்தகிரியும் யோகியாரும் அவ்வப்போது செய்த பல புதிரான நிகழ்வுகளை- ஞானரசக் கொண்டாட்டத்தை- அவர்களுடைய பழங்கால அடியார்கள் சந்தோஷமாக நினைவு கூர்வதுண்டு.

தென்னாங்கூர் ஸ்ரீ நாமானந்த கிரி சுவாமிஜி சொல்லிய ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை கூடியிருந்த பக்தர்களிடம் ”கபீரை தரிசிக்க விருப்பமா ?”என்று ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் கேட்டாராம்

யாவரும் ஸ்ரீ ஞானனந்தகிரியையே ஆவலுடன் என்ன சொல்லப் போகிறாரோ என்று எதிர்பார்த்த வேளையில் யோகி ராம்சூரத்குமாரை சுட்டிக்காட்டி “ இவர்தாம் அப்போது கபீர் இப்போது யோகி ராம்சூரத்குமார்”என்று சொன்னார்.

ஞானானந்த கிரி சுவாமிகள் அவ்வாறு சொன்னதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கபீரைப் போலவே ராம்சூரத்குமாரும் கங்கை கரையில் பிறந்து வளர்ந்தவர். கபீரைப் போலவே இளமையிலேயே ஆன்மதாகத்தில் பல குருக்களிடம் ஞானத்தைத் தேடியவர்.

கபீருக்கு ராமானந்தர் குரு, யோகியரின் குருவோ ராமதாஸர். அவர் பெற்ற உபதேச மந்திரமும் ராம நாமம் இவருக்கு கிடைத்த மந்திரமும் ராமநாமம்.

கபீரைப் போலவே எந்த மதத்தினரும் தம்மவர் என்று யோகியர் மேல் உரிமை கொண்டாட இயலாது.

காவி உடை இல்லை நெற்றியில் மத சின்னங்கள் எதுவும் இல்லை. அழுக்கு உடையுடன் திரிந்த அருள் வேந்தன் அவர்.

தலையிலோர் பாகை உள்ளான்,
தாடி உளான், கையிலோர்
அலைவுறுமோர் விசிறிஉளான்
அங்கையிலோர் ஓடெடுப்பான்
நிலையுள்ள இன்பத்தை
நித்தம் அனுபவிக்கும்
கலையாளன் ராம்சுரத்
குமாரனை நீர்காண்மினரோ
(கி.வா.ஜகன்னாதன்)

பேட்ரிக் என்ற பெயருடைய கராத்தே மாஸ்டர் யோகியரை சந்தித்தபோது அவருக்கு பேட்ரிக் என்ற பெயரில் வெளி நாட்டில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய விவரமெல்லாம் தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் யோகியரின் அருள் நோக்கில் ஏசு பிரானையே கண்டதாகப் பேட்ரிக் கூறினார்.

இந்துக்கள்,கிருத்துவர்கள்,முகமதியர்கள் போன்ற எல்லா மதத்தினரும் வந்து அவரிடம் அருளாசி பெற்றுச் சென்றனர். இதிலிருந்து கபீரைப் போலவே கடவுள் மதங்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பதை உணர்த்த வாழ்ந்து காட்டியவர் என்பதும் புலனாகிறது.
( T பொன்.காமராஜன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

பக்தர் ஒருவர், பலருக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் வெதும்பி இப்பேற்பட்ட துன்பங்கள் எதற்காக என்று தனிமையில் பகவானிடம் வினவினார். அவரை ஆழ்ந்து நோக்கிய பகவான் வாசலில் மிதியடியாகப் போடப்பட்டிருந்த சாக்குப் பையை சுட்டிக்காட்டினார்.
”போ! அதில் உள்ளதைப் படித்துப்பார்”
தன் கேள்விக்கும் அவருடைய செய்கைக்கும் தொடர்பு புரியாது மிதியடி அருகே சென்று அதைப் படித்தார். படித்ததும் அவர் முகம் புரிந்துகொண்டது போல் நகை முகம் ஆனது. ”ஓ இது தானா! ஒருவர் படும் கஷ்டத்தால் மன அழுக்குகள் களையப்பட்டு தூய்மையானவர்களாகி மனதிடம் பெறுகிறார்கள்” என்று ஏற்றுக் கொண்டார்

அதில் இருந்த வாசகம்“ கல்,குருணை நீக்கிய நெ.1 திடம் அரிசி

ஆன்மீகத்தில் பல படிகள் இருக்குமே என்ற எண்ணத்தில் ஒரு மேற்கத்தியர், அவதாரம், முனிவர் மற்றும் சாது இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்னவென்று யோகியரிடம் கேட்டார். பகவான் தனக்கே உரிய எளிமையுடனும் அதே நேரம் முடிவுடனும் “ இந்தப் பிச்சைக்காரனுக்கு அதெல்லாம் தெரியாது. ஒன்று மட்டும் தெரியும், தன் உடலையே தான் என்று நினைத்திருக்கும் வரையில் அவன் இதில் எதுவாகவும் முடியாது. இந்த உடல் தானில்லை என்று உணர்ந்ததும் அவற்றில் வித்தியாசம் கிடையாது”

இதிலிருந்து அவர் தேக உணர்வை முற்றிலும் கடந்து விட்டிருந்த ஒரு முழு யோகி என்பதை அறிய முடிகிறது.

கிருத்துவமிஷினரிகளை சேர்ந்த சிலர் பகவானிடம் “ கிருத்துவர்களாகிய நாங்கள் மனிதகுலத்திற்கு சேவை செய்கிறோம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்களை நிறுவி உதவுகிறோம். ஆனால் உங்களைப் போன்றோர் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறீர்களே (ஏன்) ? என்று வினவினர்.

பகவான் சொன்னது, ”சூரியன் மருத்துவமனைகளைக் கட்டுகிறானா ? பள்ளிகளை நடத்துகிறானா? அனாதை இல்லங்களை
நிர்மாணிக்கிறானா? ஆனால் சூரியன் இருப்பதனால்தானே இவையெல்லாம் நடைபறுகிறது? யோகி என்பவன் சூரியனைப் போன்றவன்”.

யார் மூலம் எவ்வகையான காரியங்கள் முடிக்கப்படவேண்டும் என்றுணர்ந்து அவர்களுக்கு அந்த ஆற்றலை அளிக்க வல்லவர்கள் யோகிகள். யோகி சூரத்குமார் “என் அய்யன் விரும்புவதால்”என்று அடிக்கடி சொன்னதன் மூலம் இறைவனின் கருவியாக தன்னை வைத்துக் கொண்டு செயலாற்றினார் என்பது புரிகிறது. ஞானானந்த கிரி சுவாமிகள் கபீர் என்று குறிப்பிட்டதற்கு ஏற்ப கபீரின் வரிகளை வாழ்ந்து காட்டியவர் யோகிராம் சூரத்குமார் அவர்கள்.

தான்செய்து நடப்பன இல்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ
தான்செய்து நடப்பது போலக் காண்பீர், செய்விப்ப வனவன் யாரோ


ஒரு யோகிக்கு ”அய்யனின் ஆணை”யை புரிந்து கொள்ளும் சக்தி இருக்கலாம். ஆனால் சாமானியர்கள் நிலையென்ன?

அதற்கு விடையாக பகவான் யோகி ராம்சூரத்குமார் ஒரு அருமையான கதை சொல்லுவார்.

சமுத்திரக் கரையோரத்தில் இரு தித்திபப் பறவைகள் இருந்தன. முட்டையிட்டு இரை தேடச் சென்ற போது கடல் அலைகள் முட்டைகளை இழுத்துச் சென்று விட்டன. திரும்பி வந்த தித்திபப் பட்சிகளுக்கு ஒரே வருத்தம். கடலின் மீது ஒரே கோபம். கடலைப் பார்த்து முட்டைகளைத் திருப்பித் தா என்று கேட்டால் கடல் அலட்சியப்படுத்தி விட்டது. ”இந்தக் கடலை வற்றச் செய்து முட்டைகளை திரும்பப் பெறுவோம்” என்று தீர்மானித்த பறவைகள் தம் அலகுகளினால் நீரை கரையில் வாரி இறைத்தன. பல மணி நேரங்கள் முயற்சி நீடித்தது. அந்தப்பக்கம் வந்தப் பெரியவர் ” இது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவைகளின் குறிக்கோளைக் கேட்டவர் “இது நடக்கக் கூடிய காரியமா ?”என கேலி செய்தார். பறவைகளோ சற்றும் மனம் தளராமல் “உங்களுக்கு அதில் என்ன சந்தேகம்? கடல் நீரைக் கட்டாயம் வற்றச் செய்து முட்டைகளை மீட்போம்” என உறுதியுடன் கூறின. அவைகளின் உறுதியையும் விடாமுயற்சியையும் கண்டு அந்தப் பெரியவர் தன் தெய்வீகக் கரங்களை கடலில் விட்டு முட்டைகளை மீட்டுத் தந்தார்.

பகவான் இந்தக் கதையை மிகுந்த நெகிழ்வும் அன்பும் மிளிரக் கூறி “விடா முயற்சியும் தளரா மன உறுதியும் கொண்டு செய்யும் முயற்சிகள் இறையருளை ஈர்க்கும் சக்திஉடையவை என்று கூறுவார்.

விடாமுயற்சிக்குத் தேவை வைராக்கியம். அதனுடன் இலக்கை அடையவேண்டும் என்ற தணியாத தாகம், தீராப் பசி அல்லது வெறி அவசியம் இருக்க வேண்டும். நமது லட்சியத்தில் நேர்மை இருந்தால் அது இறையன்பை நம்பால் கொண்டுவர முடியும். இது இருந்தால் நம் சாதனை எளிதாகி விடும்.

இதை நினைவுறுத்தும் கபீரின் ஈரடி ( பாரதி எதிரொலிக்கும் கபீர் )

ஆழியுள் குதிப்பர் ஆழ மூழ்குவர், அள்ளி வருவரே முத்து
கூழையர் கூடுவர் கூசியே நிற்பர், எங்கனம் தருவரே முத்து?

(கூழையர்= அற்ப மக்கள், அறிவற்றவர்; கூசுதல்= பயப்படுதல்)

கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கடினமான செயல். துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு காரியம் இது. உள்ளே சென்றவருக்கு மூச்சுக் கட்டும் திறமை அசாதாரணமாக இருக்க வேண்டும். கடல் வாழ் பிராணிகளால் எந்த கணமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் பெரும்பாலானவர் தொழிலில் உள்ள அபாயத்தையும் சங்கடங்களையும் சொல்லி முத்துக்குளிக்க விரும்புவனை தடுக்க முயலுவர். மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.

கபீர் இந்த உதாரணத்தை சொல்வதன் நோக்கம் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சாதனைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சளவிலே நிற்பதால், பிறவி வந்ததன் பயனான, இறையின்பம் அடையப் படாதது என்பதாகும். சாதனைகளை மேற்கொள்ள பெரிய வைராக்கியமும் திடச்சித்தமும் தேவை என்பதை எல்லா ஞானிகளும் உரைக்கின்றனர். எனவே அதை முத்துக்குளிப்பதற்கு ஒப்பாக்கி காட்டுகிறார். ஆயின் நாம் இதை வெறும் ஆன்மீகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் எந்த ஒரு உயர்லட்சியத்தை அடைவதற்கான தேவை எனக்கொள்ளலாம்.


தளரா மனம் உள்ளவர்களின் முயற்சிக்கு இறைவன் கரங்களும் விரைந்து உதவிக்கு வரும் என்று நமக்கெல்லாம் நம்பிக்கை தரும் வகையில் தித்திப பறவைகளின் கதை மூலம் அவன் அருளை புரிய வைக்கிறார் இருபதாம் நூற்றாண்டு கபீரான ஸ்ரீ யோகிராம் சூரத்குமார்.

டிசம்பர் ஒன்றாம் தேதி யோகிராம் சூரத்குமார் அவர்களின் ஜன்ம ஜெயந்தி. அவருடைய அருள் வாசகர்கள் அனைவருக்கும் பூரணமாய் கிட்டட்டும்.

ஓம் ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்.
கலிமலம் தீர்க்குமே, சதா செபிப்பீர் ராம நாமமே

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்துத் தேயுமே
சென்மமு மரணமு மின்றித் தீருமே
இம்மையே ராமா வென்றிரண் டெழுத்தினால்
(கம்பராமாயணம்)

---------------------------------------------------------

இருபதாம் நூற்றாண்டின் கபீரைப் பற்றி பல அரிய தகவல்களை மிகுந்த விருப்பத்துடன் வாசகர்கள் அனைவர்களுடனும் பகிர்ந்து கொண்ட திரு YRSK Balu அவர்களுக்கு மிக்க நன்றி.

அவருக்கு குருஅருள் நிறைந்து விளங்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5

$
0
0
ஆசிரியர் அறிமுகம்

கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தின் முதல் வாசகர் இவர். அதாவது ஒரு தொடர் வாசகராக தன்னை பின்னூட்டங்கள் மூலம் காட்டிக்கொள்ள முன் வந்த முதல் வலைப்பதிவர். அது மட்டுமல்லாமல் தமது வலைப்பூவில் விரும்பிப் படிக்கும் வலைப்பூக்கள் பட்டியலில் இணைத்தும் அவ்வப்போது தமது இடுகைகளில் மேற்கோள் கொடுத்தும் பலருக்கு இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தியவர். ஆன்மீகத்திலும் இசையிலும் அளவு கடந்த ஆர்வம் உள்ளவர். ரமணரின் ஆத்மபோதத்தையும்கீதையின் சாரத்தையும்மிகவும் சிரத்தையாக விளக்கியவர். அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக இசைப்பாடல்களை எழுத்துருவுடன் இவருடைய வலைப்பக்கங்களில் கேட்டு ரசிக்கலாம். மார்கழி இசை உற்சவத்தைதம் பதிவுகளிலே இணைப்பு கொடுத்து இசையைக் கொண்டாடுபவர். ஆரம்ப காலங்களில் அவரே ”டாப் டென்” திரைப்படப் பாடல்களையும் சில வருடங்கள்தொகுத்து வந்தார். தமிழ் ஆர்வம் மிகுந்து வெண்பா எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அவருடைய வாசகம் என்வாசகம்”.இதைத் தவிர அருள்என்னும் வலைப்பூவிலும், இசை இன்பம்என்ற வலைப்பக்கத்திலும் தன் எழுத்துப் பணியை நடத்திவருகிறார்.

ஜீவா வெங்கடராமனைஅறியாத சீனியர் பதிவர்கள் இருக்க முடியாது. அவர் ஊட்டம் ஊட்டி வளர்த்த வலைப்பூவில் அவரே பங்கேற்க வந்திருப்பது மட்டில்லா மகிழ்ச்சி தருகிறது. கபீரை பற்றி அவர் எழுதுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கபீருடையக் கவிதைகள் பற்றி மூன்று நான்கு இடுகைகள் என்வாசகத்திலும்’ (மன ஊஞ்சல்,இவ்வுலகம் ),
அருள்வலைப்பூவிலும் வெளியாகியுள்ளன. எனவே அவருக்கு கபீரும் புதியவர் அல்லர். இம்முறை கபீர்தாஸாரின் மூன்று பாடல்களை எடுத்துக் கொண்டு நமக்காக அழகாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது குறைவாகவே இருக்கும். சுருங்கக் கூறின் இந்த வலைப்பூ அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

இனி ஜீவா ...

-----------------------------------------------
பீரின் கனிவான கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.
எளிமையானவை. இரசிக்கத் தக்கவை. அவற்றுக்கு விரிவுரையோ, விளக்கங்களோ தேவையில்லை. இடராமல் ஓடி வரும் தெளிந்த சிற்றோடை.
பொதிந்த கருத்துக்களை அள்ளித் தரும் வற்றா அருள் ஓடை.
"இது தான் என் மதம்! இப்படித்தான் இருக்க வேண்டும்!" போன்ற தடைக்கற்களை தாண்டிய நீரோடை.

அக்கவிதைகளில் இருந்து எனக்குப் பிடித்த வரிகளின் தமிழாக்கம்.
---------------------------------------------------------------------

1. "பழந்துணி வெளுத்த குரு"

சீடன் என்பவன் பழந்துணி போல,
குரு அத்துணியினை வெளுப்பவர்.
தியானம் என்னும் கல்லில் அடித்து அவர்
துவைக்கையில் துலங்குது என் சொரூபம்;
அஞ்ஞான அப்பழுக்குகள் அகன்றன முழுவதும்.

அன்பும், பக்தியும் அவருக்குத் தந்தேன்;
பதிலுக்குப் பெற்றேன் ஞானம்.
மேலும், அன்பும், மகிழ்ச்சியும்,
கருணையும், பக்தியும், நம்பிக்கையும் கூட.

தனது குருவை மனிதனாய்ப் பார்ப்பவன் குருடன்;
தன் வாழ்நாள் முழுதும் அவன் மகிழ்ச்சி அடையான்;
இறந்தபின்னும் அவன் இருளிலேயே இருப்பான்.

கபீரா, குருடராய் இருக்கும் சீடர்களால்
குருவினை இறைவனாய்க் காண இயலுவதில்லையே.

இறைவனுக்கு கோபம் ஏற்பட்டால்
அதைத்தணிக்க குருவால் இயலும்.
அக்குருவிற்கே கோபம் ஏற்பட்டால்
யாரால் என்ன செய்ய இயலும்?

குருவின் பெருமையும், குருவருளின் இன்றியமையாமையும் இக்கவிதையில் தெளிவாகிறது.
குரு-சீடன், என்றவுடன் நமக்கு இராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் உடனே நினையாமல் இருக்க இயலுமா! மேற்சொன்ன கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். அந்த அளவிற்குப் பொருத்தம். அவர்களது வரலாற்று வரிகளை முன்னம்படித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
-------------------------------------------------------

2. "மலர்வது காய்க்கத்தான்"

என்னுள் ஒளிரும் நிலவை என் குருட்டுக் கண்கள் அறியா.
அந்நிலவும் பகலவனும் கூட என்னுள்ளேயே இருந்தும்.
என்னுள் ஒலிக்கும் ஓங்காரத்தை என் செவிட்டுச் செவிகளும் கேளா.

"நான், எனது" எனும் இரைச்சல்களில் வேறெது கேட்கும்?
எப்போது "நான், எனது" என்னும் ஓசைகள் ஒடுங்குகிறதோ
அப்போது இறைவனின் வேலைகளும் ஓய்ந்துவிடும்.
ஏனெனில் இறைவனின் வேலையே நமக்கு
ஞானம் பெற்றுத் தருவதுதான்.
ஞானம் வந்தபின் நம்மிடம் அவனுக்கு வேலையுமில்லை.
மலர் மலர்வது காய்க்கத்தான்.
காய்த்த பின் மலர் சருகாவதுபோல்.

[ இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு இங்கேபார்க்கவும். ]

க்கவிதையை முடித்த விதம் உங்களையும் ஏதோ செய்தால் அதற்கு கபீர் தான் பொறுப்பாவார்!
"நான் ஏன் நாத்திகன்?" என்பதற்கு எத்தனை எத்தனையோ காரணங்களைச் சொல்லிடலாம்.
ஆனால் ஆத்திகனாவதற்கு, இயற்கையைத் தவிரை வேறெதைச் சொல்வது!

மலர்வது காய்க்கத்தான்.
மனம் மலர்வது,
அவனைக் காணத்தான்.

அன்பெனும் நாரெடுத்து அதில் மனமெனும் மலர் கொண்டு தொடுத்த மாலையும் மணம் வீசும்.
சுடர்கொடி கோதை சூடிக்கொடுத்த மாலை போலே.
இயற்கை என்பார் சிலர்.
இறைவனின் வேலை என்பார் சிலர்.
இரண்டும் வேறில்லை என்பார் இன்னும் சிலர்! :-)
------------------------------------------------------------------

3. "எப்படிச் சொல்வேன்?"

எப்படி அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவேன்?
இறைவன் - இப்படி, அப்படியென எப்படிச் சொல்வேன்?
அவன் என்னுள் இருக்கிறான் என்றால்,
இப்பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவு.
அவனில் நானில்லை என்றாலோ, அது பொய்யாகிடும்.

உள்ளுலகத்திற்கும் வெளியுலகத்திற்கும் இடையே
வேறுபாடுகளில்லாமல் 'ஒன்றென'ச் செய்பவன் அவன்.
அவன் வெளிப்பட்டும் இல்லை, மறைந்தும் இல்லை.
அவன் உரைக்கப்பட்டும் இல்லை, உரைக்கப்படாமலும் இல்லை.
என்ன பார்க்கிறீர்கள்?
அவனை முழுதாக உரைக்க வார்த்தைகளும் இல்லை.

[இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்குஇங்கேபார்க்கவும். ]

ள்ளதெல்லாமிலும் உறைபவன், உள்ளையும் புறத்தையும் ஒன்றெனச் செய்பவன்.
ஒன்றென உறைபவன். ஒன்றென்றில் வேறில்லை. ஓம்.

இறைவன் யாரென வெளிப்படுத்தும் அழகான கவிதை.
மேலோட்டமாக படித்துப் பார்த்தால் - ஈதென்ன, இதில் இயலாமை தானே இருக்கிறது எனலாம்.
இறைவன் வெளிப்படுத்தக்கூடாத இரகசியமோ, வெளிப்படுத்த இயலாத இரகசியமோ இல்லை.
ஆனால் அகத்தைச் சுற்றி புறம் எழுப்பிய சுவர்களால் மறைக்கப்பட்ட இரகசியம்.
அச்சுவர் இருக்கும் வரை அகத்தால் அனுபவிக்கப்படுவது இரகசியமாக பெரும்பாலும் இருப்பதால் மட்டுமே அது இரகசியம்.

அன்பால் மட்டுமே அச்சுவரினை இடித்து இறைவனை இவனேயென இன்புற்றிட இயலும்.

கபீரைப் போன்ற மகான்கள், ஞானியர், பக்தியில் கரை கண்டவர் எனப்பலர், அவர்கள் கண்ட ஆனந்தத்தை இதுபோன்ற கவிதைகளிலும், பாடல்களிலும், கதைகளிலும், உபதேசங்களிலும் உணர்த்தி விட்டுச் சென்றுள்ளார்கள். உதாரணத்திற்கு பள்ளிப் பருவத்தில் படித்த வள்ளலாரின் பாடல்அப்படியே கபீரின் கருத்துகளை பிரதிபலிக்கிறது.

எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்

எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே

எனினும் செவிடர் கேட்பாரோ?
எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறையவனே.

அப்படிப்பட்டோர் போன பாதையை மறந்து போகலாமா?
அவர்கள் கண்ட ஆனந்தம் என்றென்றும் நிலை பெற்றிருப்பது.
தில்லைக்கூத்தன் எப்போதும் அம்பலம் என்னும் ஆனந்த வெளியில் தாண்டவம் ஆடுவதை ஒத்தது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

-பெரியபுராணம்

---------------------------------------------

பல அலுவல்களுக்கிடையேயும் நேரம் ஒதுக்கி ஒரு சிறப்பான பதிவை வழங்கிய ஜீவா வெங்கடராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

கண்ணன் காட்டும் கரும யோகம்என்கிற இடுகை ஒன்றில் அவர் இறுதியாக சொல்லியிருக்கும் வரிகள் :

பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.

நமக்கு அருமையான பிரசாதமாக கபீரின் மூன்று பாடல்களை அளித்து இடுகையின் பலனை அற்புதமாக பூர்த்தி செய்திருக்கிறார். இப்படியே அவருடைய எழுத்துப் பணி மேன்மேலும் நல்லமுறையில் தொடரட்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துவோம்.

சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6

$
0
0
ஆசிரியர் அறிமுகம்

மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே உண்டு. சங்கீதத்தின் ஆழமும் தெரியாது, எதிரே அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களின் மகத்துவமோ பெருமையோ தெரியாது [தெரிந்திருந்திருந்தால் அவன் மேடை ஏறியே இருக்கமாட்டான்].

அவன் பாடி முடித்ததும் பெரியவர் ஒருவர் அவனுக்கு பரிசளித்து வெகுவாகப் பாராட்டி உற்சாகம் அளிக்கிறார். அவரைப் பற்றி பிற்காலத்தில் அறிந்து கொள்ளும் போது வாயைப் பிளக்கும் வண்ணம் இவர் முன்பா அரைகுறையான நான் பாடினேன் என்ற நாணம் தோன்றும். அப்படி பாராட்டி உற்சாகம் தந்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் இன்று முன்வந்து நமக்கு சிறப்பு இடுகை தரவிருக்கிறார்.

கபீரையும் வள்ளுவரையும் ஒப்பிட்டு ’60 களிலேயே மேற்படிப்பு ஆராய்ச்சி மேற்கொள்ள விழைந்தவர். அப்படியானால் இரண்டு மொழிகளிலும் அவருடைய தேர்ச்சி எவ்வளவு இருக்க வேண்டும் !

அர்த்தமுள்ள வலைப்பதிவுகள்என்ற பெயரில் ஒரு வலைப்பூவைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக நூற்றுக்கணக்கானப் பதிவுகளைப் படித்து அவற்றை தமது வலைப்பூவில் இணைப்புகளுடன் சுட்டிக் காட்டி வாசகர்களை ஒரு தரமான வாசிப்பு அனுபவத்திற்கு உயர்த்த பாடுபட்டவர். அவற்றில் வாரம் ஒரு முறை ஒரு சிறப்பான இடுகையை தேர்ந்தெடுத்து அதற்கு மகுடம் சூட்டி வாழ்த்தியவர். ஒரு முறை கபீரின் கனிமொழிகள் இடுகை ஒன்றுக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது.

வலையுலகின் விதவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எல்லா விதங்களிலும் வாசகர்களைக் கவரும் அவருடைய ஆர்வம் பல இளம் தலைமுறையினரையும் வெட்கமுறச் செய்யும். சங்கீதப்பிரியர், அதற்கென ஒரு தனி வலைப்பூ. மூவி ராகாஸ்,மூவிங் ராகாஸ்என்னும் அந்த வலைப்பூவில் கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி இசை கோப்புகளுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட திரைப்படப் பாடல்களின் இசை நுணுக்கத்தை தொகுத்து தருகிறார். தமிழ் மறை தமிழர்நெறிஎன்று இன்னுமொரு வலைப்பூ. இதை திருமூலர் முதல் சுப்பிரமணி பாரதிவரை இலக்கியம் மற்றும் நடைமுறை சமூகக் கண்ணோட்டத்துடன் பல விஷயங்களுக்கு கருத்து சொல்லும் களமாக வைத்திருக்கிறார். ஆன்மீகம்என்ற பெயரில் ஆன்மீக விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள மட்டுமே ஒரு வலைப்பூ. கவிநயா போன்ற கவிஞர்களின் கவிதை வெளியான சில மணிநேரங்களிலேயே அதற்கு ராகம் போட்டு பாடி யூட்யூபில் வலையேற்றவும் செய்து விடுவார். அவருடைய உற்சாகம் யாவரையும் தொற்றிக் கொள்ளக்கூடியது. நகைச்சுவை உணர்வும் மிக்கவர் என்பதையும் “ உலகமே நாற்றம் .ஒரு தினுசான சாக்கடை தான்” போன்ற வர்ணனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட சிறப்புகளுக்கு உரியவரான திரு சுப்புரத்தினம் என்கிற சூரியநாராயண சிவாஅவர்களே இந்த சிறப்பு இடுகையின் ஆசிரியர். அவரை வாசகர் சார்பில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

எச்சரிக்கை :கபீரின் ஈரடிகள் மழைபோல் பொழிய போகிறது. நனைந்து மகிழ வேண்டிய அருள் மழை. அதனோடு இன்னிசைக் காற்றும் சேர்ந்து வாசகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கப் போகிறது.

--------------------------------------------------

கபீரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என அன்பர் திரு கபீரன்பன் பணித்தவுடன் ஒப்புதல் அளித்துவிட்டேன்.

இருப்பினும் கபீரைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டிருக்கிறேனா என்ற ஐயப்பாடு என் மனதிலே என்றென்றுமே உள்ளது. சொல்லப்போனால், 1957 முதல் கபீரின் தோஹாக்களை நான் பிரசார சபா தேர்வுகளுக்குக் கற்க துவங்கின காலத்திலிருந்து, ப்ரவீண் முடித்தபின்னும் சுமார் 1000 தோஹாக்களுக்கு மேல் மனப்பாடமாகத் தெரிந்தபின்னும் அதே நிலைதான். காரணம், கபீரின் பரிமாணம் அத்தகையது.

அவரை எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும், ஒரு பழுத்த ஆன்மீக வாதியாக, ஒரு தத்துவ ஞானியாக( தேரா சாயீ துஜ் மேய்ன் ஜோ ப்ஹுபன் மேய்ன் பாஸ்) , சமூக சீர்திருத்த வாதியாக, மூடப்பழக்க வழக்கங்களை அழிக்கும் நோக்குடையவராக ( பாஹன் பூஜென் ஹரி மிலை, தொ மைம் பூஜும் பஹாட்), ராம பக்தராக (जिसी घटी प्रीती न प्रेम कि, पुनि रसना नहीं राम , ते नर इस संसार में उपजि गए बेकार ) எப்படிப்பார்த்தாலும் அவர் ஒரு வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதராக, தெய்வத்துள் வைக்கப்படுபவராக இருக்கிறார்.

உலகத்தே ஆசானைப்போன்றவர் எவருமே இல்லை. அன்னை, தந்தை, உறவினர், நண்பர் யாவருமே இருப்பினும் நல்ல ஒரு குருவினைப்போன்று மிக நெருங்கிய சொந்தம் எவரும் இல்லை. உறவினர் யாவரும் உலக பந்தங்களே. உலகத்திலே ஒருவனை முழுகடிப்பதிலே தான் கண்ணாக இருக்கையிலே குரு ஒருவர் தான் தனது சீடனை இந்த இக லோக இருட்டிலிருந்து வெளிக்கொணர்ந்து அறிவு நிலையாம் ஞான ஒளியைத் தருவதிலே முனைப்புடன் இருப்பார். அப்படிப்பட்ட‌ குரு சாதாரண மனிதனான என்னை ஒரு தேவனாக ஆக்கிவிட்டாரே, அந்த குருவிடம் தினந்தோறும் எத்துணை முறை நான் நன்றி சொல்வேன், என கபீர் சொல்வதைக்கேட்டு இக்கட்டுரையைத் துவங்குவோம்.

பலிஹாரி குரு ஆபணை, த்யொள்ம் ஹாடி கை பார்.
ஜினி மானிஷ் தைம் தேவதா, கரத் ந லாகி பார்
.

கபீர் ஒரு இணையற்ற ராம பக்தர். கபீரின் பக்தி ஸாகரத்தில் முழுகியவர் பிறவிப்பெருங்கடல் நீந்தி இறைவனடி நிச்சயம் சேருவார் என்பதில் ஐயம் உண்டோ ?
கபீர் கண்ட ராமன் என எழுதுவோமா ? இல்லை , கபீர் அனுபவித்த ராமன் என சொல்வோமா?

கபீரின் மனதுக்கிசைந்த ராமன் பற்றி எழுதுவோம்.

ராமனைப் புரிந்துகொள்வதிலே அவனைப் போற்றுவதிலே, துதிப்பதிலே இருக்கும் வேற்றுமைகள், அந்த நாமம் நமக்கு என்ன நல்லது செய்கிறது என்று சொல்லும்பொழுது மறைந்து போகிறது.

ஒரு இடத்துக்குப் போகணும், டிரையினிலே போகலாமா, பஸ்ஸிலே போகலாமா இல்லை, ப்ளேனிலே போகலாமா என‌ யோசித்துக்கொண்டிருந்தபொழுது நான் மனசாலேயே அங்க ஆல்ரெடி போய்விட்டேன் என்று சொல்வதையும் நாம் கண்டு அனுபவிக்கத்தான் வேண்டும்.

ஆக, இந்த கட்டுரையில், இரண்டு நிலைகளிலும் ராம பக்தியை, மாயா ரஹித பிரும்மன் ஆகவும், அதே சமயத்தில் மாயா சஹித பிரும்மன் ஈஸ்வரன் ஆகவும் சந்திப்போம். சிந்திப்போம்.

ராம நாமத்தை சொல்ல, உச்சரிக்க, ராமனின் பக்தியில் மெய் மறக்க, கபீர் கூவியதைப்போல் வேறு யாரும் பாமர மக்களுக்குப் புரியும் வண்ணம் சொன்னார்களா என எனக்குத் தெரியவில்லை. அந்த ராம நாமத்தை ஒரு தடவை சொன்னால்,ஆயிரம் தரம் சொன்னால் மாதிரி.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹாச்ர நாம தச்துல்யம் ஸ்ரீ ராம நாம வராஹனே


நிற்க. ராமனைப் பற்றி கபீர் என்ன சொல்கிறார் என்ற உடனேயே நமது கண்களில், ராமன் ஒரு சீதா ராமனாக, கோதண்டராமனாக, ஜெயராமன், பட்டாபி ராமன்,ரகுராமன், கோசலைராம‌, கல்யாண ராமன், வேங்கட ராமன் , தசரத ராமன், இப்படி பல்வேறு நாமாக்களைக்கொண்ட ராமனாக சித்தரித்துக் கொண்டால், அதற்கு கபீர் பொறுப்பில்லை.

முதலில் நமக்கு தெரிந்த ராமனின் கதையை கேட்போமா ?

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடுவதை முதலில் கேட்போம்.




சகுணவாதியான துளசிதாசரைப்பார்த்தால்,அவரைப்போல் ராம பக்தர் இருப்பரோ என்று வியக்கிறோம்.
துளசிதாஸரின் ராம சரித மானஸில் ”துமக் சலத் ராமசந்த்ர” லதாமங்கேஷ்கர் அவர்கள் குரலில்




நாம் காணும் சர்வ குணஸ்ரேஷ்டனான Sarva guna sampannan, ragu kula nayakan Aana ராம பிரான், பக்த தியாகராஜர் எழுபத்தி இரண்டு மேள கர்த்தா ராகங்களிலும் பாடியிருக்கும் இராம பிரான் சகுண பிரும்மன். அவதார புருஷன்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத’என்று அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்ட வந்த பரம்பொருள்.அந்த பரம்பொருள் ராமனாக அவதாரம் செய்தபொழுது, அப்பாலகன் ராமனுக்கு குலசேகர் ஆழ்வார் பிரபந்தத்தில் தாலாட்டு பாடி மகிழ்வார். ராமனிடம் அவர் காட்டும் வாத்ஸல்யத்துக்கு ஈடு ஏது!

ராகவனனே தாலேலோ இங்கே கேளுங்கள். பாம்பே ஜெயஸ்ரீ
Get this widget | Track details | eSnips Social DNA

Mannupugazh - பெருமாள் திருமொழி (Divya prabhandam)
Lyrics: Kulasekhara aazhwar ;Singer: Bombay Jayashree (Album: Vatsalyam); Raga : Nilambari


மும்மூர்த்திகளில் ஒருவராம் பக்த தியாகராஜரின் கீர்த்தனைகளில், அந்த யதுகுல, ராகவ ராமன், ராஜா ராமன், கோசலை ராமன் அழகிலே மயங்கி, அவனுடைய குணாதிசியங்களை எல்லாம் சொல்லி சொல்லி, பாடி பாடி மகிழ்ந்து, ராமா, நீயே எனக்கு எல்லாம் எனக் கதறி, ராமா ! என்னை இகலோக பந்தங்களில் இருந்து விடுவித்து மோக்ஷமதை தா என பிரலாபிக்கும், கண்ணீர் வடிக்கும் நிலை ஸர்வகுண ஸம்பன்ன ப்ரதீக உபாசனையின் ப்ரத்யக்ஷ உதாரணம்.

ராமா ! நீயே சர்வ குண ஸம்பன்ன தாரி. நீ வா என்று அழைக்கும் பக்த தியாகராஜர் அவர்களைப்பார்ப்போம்.




[Let all be attentive. Oh Ramachandra,please come. Oh Rama the repository of all virtues,please enter. ]

இதே பாடலைபாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் குரலில் கேட்க

ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே
ரகுநாதாய நாதாயா சீதாயா பதயே நமஹா

என்று சொல்கிறோம்.

அதே சமயத்தில் இந்த நிர்குண சம்ப்ரதாய கபீர் ராம பக்தியில் திளைத்தவர் , என்று சொல்லும்போது அந்த நிர்குண நிராகார சத், சித், ஆனந்த ஸ்வரூபியாக உள்ள பரபிரும்மத்தையே ஹரி எனவும் ராமன் எனவும் குறிப்பிடுகிறார் எனக்கொள்ளுதல் வேண்டும்.

என்ன சொன்னாலும், சகுண பிரும்ம உபாசனையானாலும், நிர்குணமான இறை தத்துவமாக இருந்தாலும் சரி, ராம என்று ஒரு முறை சொல்லிவிட்டாலும் போதும் பாபங்கள் எல்லாமே நீங்கிவிடும் என்று இருவருமே சொல்கிறார்கள்.

கபீரைப் பொறுத்தவரை, ராம் என்பது ஒரு இறைவனது பேரொளியில் அடைக்கலமாய், தன்னை மறந்து , "தன்னை " இழந்து,அந்த பிரும்மனில் சான்னித்யம் அடைந்து, தானும் அந்த பிரும்மனும் ஒன்றே எனத் தெளிந்த அத்வைத நிலை. தத்துவம். ஆயினும் இறைவனை அடைய அவர் சென்ற வழி, மார்க்கம், பக்தி மார்க்கம். ராஜ யோகம், ஞான யோகம், கர்ம யோகம் யாவையும் விடுத்து,பக்தி மார்க்கத்தைக் கடைப் பிடித்து ஒழுகியவர் கபீர்.

பக்தி திராவிட உபஜை, லாயே ராமனந்த்.
பர்கத் கியா கபீர் நே , சப்த தீப் நவ காண்ட்

என சொல்லப்படும் உக்தி படி,

கபீர் தனது குருவின் உபதேசம் " ராம் " எனப்பெற்று, அதைப் போற்றி தமது தத்துவத்தை, நாரத பக்தி எனும் பெயர் சூட்டி, அதன் அடிப்படை தத்துவமே எல்லா ஜீவ ராசிகளிடம் அன்பு பூண்டு இருப்பதே இறைவனை அடையும் ஒரே வழி என தமது தோஹாக்கள் வழியே சொல்லியிருக்கிறார்.

இறைவனை ப்ரேம ஸ்வரூபி ஆகவும், அன்பின் வடிவாகவும் கண்டு, அன்பின் வழியேதான் அந்த ராமனை அடைவது எளிதான வழி எனவும் சொல்கிறார். அந்த காலத்திய பக்தி மார்க்கங்களுக்கு அப்பாற்பட்ட வழி நாரத பக்தி எனச் சொல்லப்பட்டது.
(# நாரத பக்தி பற்றிய விவரமான குறிப்பு கட்டுரையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது#)

அவரது ஹரி, அவரது ராம் நிர்குண, நிராகார, அத்விதீய, அத்வைத இறைவன் மாயா ரஹித பிரும்மன் ஆவான். உலக வாழ்க்கையில், லெளகீக ரீதியில் நமக்கெல்லாம் பரிச்சயமான , பிரதீக உபாசனை படி, அந்த பிரும்மதிற்கு ஒரு உருவத்தைக் கொடுத்து, அக்கடவுளை பிரதிஷ்டை செய்து, பூஜை முடிந்தவுடன் அவனை யதா ஸ்தானம் அனுப்பும் பக்தி மார்க்கம் அல்ல அவருடையது. சுருக்கமாக சொல்லப்போனால், அவரது ஹரி, அவரது ராமன், மாயா ரஹித பிரும்மன். ஒரு புரிதலுக்குச் சொல்லபோனால், அது கிட்டத்தட்ட இது போல்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
.

ஆனாலும், கபீருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

பஹன் பூஜை ஹரி மிலை,
தொ மை பூஞ்சும் பஹாட்
என்பவர் கபீர்.

அவர் வழி தனி வழி. ராமா ராமா என உருகினாலும் அவரது ராமன் நிர்குணம், நிராகாரம், ஸர்வ வ்யாபி,ஸர்வ ப்ரேமி.
நம்முடைய பாரம்பரிய வழக்கம் உருவ வழிபாடு.

உருவ வழியே அருவத்திற்குச் செல்ல நமது யோக மார்க்கங்கள் வழி காட்டுகின்றன.


தியானத்தின் வழியாக, இறைவனை அடையச்சொல்வது ராஜ யோகம். ராஜ யோகத்திலே, யமம், நியமம் என்று தொடங்கி ஆசனம், பிராணாயாமம் ,பிரத்யாஹர்ரம், தாரண, த்யானம், சமாதி என எட்டு நிலைகள் புரிந்துகொள்வதற்கே முடியவில்லையே ? இதை சாதனை செய்வது எங்கனம் ?

அது சரி . யோகங்களைப் படிப்போம் என்றால், ஹட யோகம், லய யோகம், மந்திர யோகம், ராஜ யோகம். ஹட யோகத்திலே ஹ என்றால் ஞானம். ட என்றால் ஆனந்தம். ஹட யோகத்தில் குண்டலினி ஷக்தி யை உசிப்பி விடவேண்டுமாம்.

இந்த மஹா குண்டலினி சக்திதான் மஹா பிரளயித்திலும் இருக்கிறதாம். மூலாதார சக்கிரத்தில் ஒரு முக்கோணம் வடிவத்தில் இந்த குண்டலினி ஒரு பாம்பு போல் மூனரை அடிக்கு சுருட்டி படுத்து கொண்டு இருக்கிறதாம். இதை எழ வைக்க வேண்டுமாம்.( யோவ் ! பயமா இருக்கிறதையா !!)

இது போல் ஸ்வாதிஷ்டான சக்ரம், மணி பூரக சக்ரம், அனஹத் சக்ரம், விஷுத்த சக்ரம், ஆங்கயா சக்கிரம், பிரம்மா ரங்கரா சக்கிரம், ( தலை சக்கிரம் போல் சுழல் கிறதே அய்யா !! இந்த காலத்தில் இதுவெல்லாம் புரிந்துகொள்ள முடியுமா ? அதற்கு எனக்கு நேரம் கிடையாதே !! )

இதுவெல்லாம் போதாது என்று எனது நண்பர் வேங்கட ராமன் சாஸ்திரம் படித்தவர் அவ்வப்பொழுது, ஈடா, பிங்களா, சுஷும்னா நாடிகளைப் பற்றி தெளிவாகச் சொல்கிறேன் என்று குழப்புவார். (என்னை விட்டுடுங்க சார் !!)

அப்ப கபீர் சொல்லுவார்:
[ab mohin raam baroso thera, aur kown kaa karown nihor]

ஹரியை நம்பி அவனை நினை, அது போதும். இந்த கலி யுகத்திலே நாம ஜபம் செஞ்சாலே போதும்.

(அப்பாடா ! ஆளை விடுடா !)

இப்படி, யோகா மார்க்கம், ராஜ மார்க்கம், கர்ம மார்க்கம் எனும் மற்ற மார்கங்களை
எல்லாம் விடுத்து, ராமனுஜரின் சீடராம் கபீர் பக்தி மார்க்கத்தின் நுழைவாயிலை, ராமனது ஸ்மரணையின் மகத்துவத்தை, ராம நாம உச்சாடனத்தை, கபீர் எடுத்துரைத்தது பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் இருந்தது.

எல்லா மார்க்கத்தினைக் காட்டிலும் பக்தி மார்கமே சிறந்தது எனச்சொல்லும் கபீர் பக்தி மார்கத்தில் ராம நாம ஸ்மரணைதனை எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் எளிது என்கிறார்.

कबीर् कहता जात है, सुणता है सब् कोइ
राम् कहे भला होइगा, नहि तर् भला न होइ
||

कबीर् कहै मै कथि गया, कथि गया ब्रम् महेश्
राम् नाव् ततसार् है, सब् काहू उपदेस


எல்லா தத்வங்களின் ஸாரமும் ராம நாமம் தான். இதை
நான் சொல்லவில்லை, பிரும்மாவும் சிவனும் இதே தான் சொல்கிறார். பிரம்மனும் மஹேஸ்வரனும் போற்றும் ராம நாம உச்சாடனைத்தை அதன் மகிமையை கபீர் எடுத்துக்காட்டியதை அடுத்த இடுகையில் காண்போம்.
----------------------------------------
நாரத பக்தி சூத்திரத்தை ஒட்டியக் குறிப்புகளும் கபீரின் பாடல்களில் உண்டு என்பதைப் பற்றிய சுப்புரத்தினம் ஐயா அனுப்பியுள்ள இன்னொரு குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

May I add naradha bhakthi as the contemporaries of Kabir called the same included at least eleven formats that were usual amongst the saguna upasaka krama also.

This would be evident from the ஆஸக்திகள் (aasakthis) detailed below:

1. குண மஹாத்மிய சக்தி [guna mahathmiyamasakthi ]
Govyandha gun gaayiye
thathai bhayee param nirdhan

2. ரூப சக்திrupasakthi
loot chooti khelai vikaraal, ananth kala natvar gopal

3. பூஜா சக்தி poojasakthi
jehi pooja man bhaavai, sow poojanahaar na jaanai.

4. ஸ்மரண சக்தி smaranasakthi.
kahai kabeer jogee aru kangam ai sab jhooti aasa
guru prasaadi rahi chathrig jyun nihachai bhagathi nivaasaa

5. தாஸ்ய சக்தி Dasyasakthi
kahai kabeer sevom bhanvaari.

6. சக்ய சக்திsakyasakthi
( nil )
7. காந்த சக்தி kaanthasakthi.
hari mera priya main raam hi bhahuriya

8. வாத்ஸல்ய சக்தி vatsalyasakthi
hari mera piv , main raam kee bhahuriyaa

9. தன்மய சக்தி thanmayasakthi
virahin piya paavai nagin, jiyaraa thalpai maayi
kai virahin ke meech dhai, kai aapaa dhikalaayi

10. பரவிரஹ சக்தி para virahasakthi
bhahuth thinan ko johathee, bhat thumhaari raam
jiv tharasai thuj milan koon mani naahin vishraam.

11. ஆத்ம நிவேதன சக்தி aathmanivedhanaasakthi
maagho main aisaa aparaadhee, theri bhagathi heth nahin saadhi.

The inclusion of all these sakthis in his poetry does in no way indicate that kabir has astrayed away from his main Nirguna Sampradaya. These scholars say indicate to the extent kabir was influenced or 'taught' by his guru Ramanandh or the scholars of his age.

----------------------------------
வானிலை அறிக்கை : அடுத்த சில நாட்களுக்கு (அருள்) மழை தொடரும் :)))

சிறப்பு இடுகை-6 : தொடர்ச்சி (2)

$
0
0
கபீரின் இராமன் (பாகம் -2)

ஆசிரியர்: திரு. சுப்புரத்தினம்

இறைவனை அடைய பல வழிகள் சொல்லப்படுகின்றன: ஹட யோகம், தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்வது, மந்திரங்களை உச்சரிப்பது, பூஜைகள், எல்லா விதமான கர்மாக்களுமே சிக்கலே. ராம நாம உச்சாடனத்தை ஆகவே எல்லா வழிகளிலிருந்தும் சிறந்ததாக, எளிதாகப் புரிந்து கொண்டு செய்தால், மற்ற வழிகளில் உள்ள ஆடம்பரங்கள் இல்லை எனவும் தெளிந்து செயல்படலாம்.

கபீர் தனது மனதிடம் இறைஞ்சுகிறார். :
, ஏ மனமே !! எப்படி உடைபட்ட ரத்தினங்கள் ஒன்றாகத் திரள்கின்று ரத்தின மாலை ஆகிறதோ, அது போல இந்த உலகின் மாயையிலே சிதைந்து போன நீ, அந்த பரபிரும்மன் ராமனின் அம்ருத குணங்களைக்கேட்டு, அவற்றையே பாடி மகிழ்வாய்,

ராமனையே ஸ்மரித்து ராமனிடமே நிலைத்து ராமனாகவே ஆவாய்.

कबीर् राम् रिझाड् लै, सुखि अम्र्रुत् गुण् गाइ
फूटा नग ज्यूम् जोडि मन्, सनधि मिलाइ

இது ஜீவாத்மா தனது மாயையைக் களைந்து தனது உண்மை சொரூபத்தினை உணர்வது. பரமாத்மாவுடன் ராமா, ராமா என உன் உதடுகளால் ராம மந்திரத்தை உச்சாடனம் செய். மனதிலே ராமனை இருத்து. ராமன் ஒரு சமுத்திரம்.அகண்ட சாகரம். கடக்க இயலாத கடல். அங்கே, அக்கடலிலே ஆனந்த அலைகள் எப்பொழுதுமே எழும்பி எழும்பி உத்சாகத்துடன் பாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வலைகள் முன்னே அன்னிய தேவதைகள், கடவுளர் சின்னஞ்சிறிய‌ குளங்கள் போலவோ இருப்பர் !! கடலின் சக்திக்குமுன்னே குளங்கள் எம்மாத்திரம் ? ஆகவே ராம நாமம் ஒன்றினால் மட்டுமே உண்மையான இன்பம் பெற இயலும்.


ராமா நீ சமானமெவரு ? பிரியா சகோதரிகள் குரலில் தியாகராஜரது பாடல்
ராகம்: கரஹரப்ரியா
Get this widget | Track details | eSnips Social DNA


(Rama,you glorified Raghu dynasty. Who can be equal to you?
Your beloved wife Sita is slender like the fragrant majoram(maruvam) She is
devoted to you like a pet parrot.
You are fortunate to have brothers whose talk is gentle and sweet like
honey drops.You are the most precious jewel of your lineage. Your speech
is refined,gentle and sweet.)

कबीर् राम् ध्याइ लै, जिभ्या साऔ करि मन्त्
हरि सागर् जिनि बीसरै, छीलर् देखि अनन्त्

அந்த ராஜ்ஜியம் உனக்கு கிடைத்துவிடின், உனது இகலோக கவலைகள் எதுவுமே இருக்காது. உண்மையான இன்பம்,உண்மையான சாம்ராஜ்யம் எது என உன் மனசுக்குப் புரிந்துவிடும் என்று சொன்னவர் கபீர்.


ராம பக்தி சாம்ராஜ்ய என்று தியாகராஜர் பாடியது நினைவில் வருகிறது.‌

[ராம பக்தி சாம்ராஜ்யம் நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணாபாடுகிறார். சுத்த பங்காள ராகம்]
Get this widget | Track details | eSnips Social DNA


இன்று எல்லாத்தொல்லைகளிலிருந்தும் விடுபட ராம ஜெபம் ஒன்றே வழி.
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

நம்மிடையே, இந்நாட்களில், ஆன்மீக உபன்யாசம் செய்யும் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் சொல்வதைக் கேட்போமா ?

இன்றைய தேதியிலே, ராம ராம் என்று உச்சாடனம் செய். அது போதும்.ராம பஜன் ஒன்று மட்டுமே உண்மையான பஜன் என்பார் கபீர். இதை விடுத்து மற்ற மார்க்கங்கள் தேவையில்லாத கஷடங்களையே தருகின்றன.இறைவனின் உண்மையான பக்தனுக்கு அவனது பெயரின் நினைவு ஒன்று தான் இருக்கிறது,உலகத்தைப் பற்றியநினைவு இல்லை. ராமா ராமா என அழைத்தே, அவன்
நினைவிலே இருந்து ராம பக்தர்கள் ராம மயமாகின்றனர்.

இனி யார்முன்னே பக்தன் தலை வணங்குவான் ?

பக்தனும் இறைவனும் ஒன்று படும் வேளையிலே, " நான் " என்பது இல்லை. " நான்" இருந்த‌ இடமெலாம் " நீயே" . அது நீதான்.. ( தத் த்வமஸி) காணப்படுகிறது.

ஸ்ரீ ராமசந்திர கிருபாளு பஜ்மன என்கிற பிரசித்தமான பாடல் அனுராதா பதுவாள் அவர்கள் குரலில் [Sri Ramachandra kripalu bhaj man...anuradha patwal




ततम् तिलक लोक मै, राम् नाव् निज सार्
जन कबीर मस्तक दिया, सोभा अधिक अपार‌

ராம நாமம் ஒன்றே வேத உபனிஷத்துகளின் ஸாரம் . இந்த நாமமே மூவுலகங்களின் தத்வ மயமான திலகமாகும். கபீர் சொல்வார்: இந்த ராம நாம திலகத்தை எனது நெற்றியிலே இட்டுக்கொண்டு, எல்லா தேஜஸும் ஒளியும் என்னிடம் பிரகாசிக்க கண்டேன்:


பலுகே பங்காரமாயின - உன்னிகிருஷ்ணன் அவர்கள் குரலில்
Get this widget | Track details | eSnips Social DNA


ராமனுக்குத் தந்த உள்ளம் வேறு ஒருவரையும் கொள்வதில்லை.
कबीर सुमिरण सार है, और सकल जम्जाल
आदि अति सब सोधिया दूजा देखौ काल‌

च्य्न्ता तौ हरि नौ की, और् न चिन्ता दास‌
जे कुछ् चिम्तवै राम् बिन, सोइ काल कौ पास‌

ஒரு உண்மையான பக்தனுக்கு ஏதேனும் சிந்தனை இருப்பதென்றால், அது ராமனைக் குறித்த சிந்தனையே. மற்ற எதிலுமே அவன் மனம் லயிப்பதில்லை. தன்னைப்பற்றியோ, தனது குடும்பத்தைப்பற்றியோ அவனுக்கு கவலை இல்லை. அவன் ஒரே எண்ணத்தில் இருக்கிறான். ராம நாமத்தின் உள் இருக்கும் தத்வத்தை, மர்மத்தைப் புரிந்து, அந்த விராட் ஸ்வரூபத்தை புரிந்து கொள்வதில்லே கண்ணும் கருத்துமாய் இருக்கிறான். ராமன் இல்லை என்று ஒரு எண்ணம் இருந்தால் அதுவே மிருத்யுவின் ஜாலம் அது தன்னை கர்மங்களின் வலையில் தள்ளிவிடும், அவ்வலையிலே சிக்கி எல்லா உலகங்களையும் சுற்றி சுற்றி , அவ்வப்பொழுது பிறந்து இறந்து தொடர் வினையை அனுபவிக்கிறான்.


நான் எல்லா சிந்தனைகளையும் அலசி ஆராய்ந்து முடிவாக, ராம நாமம் எனும் ரத்தினத்தை அடைந்திருக்கிறேன், என்பார் கபீர்:

पन्च सनगी पिव पिव करै, छुठा जु सुमिरै मन‌
आइ सूति कबीर् की, पाया राम रतन

payoji maine..Ram rathan payo. by Latha Mangeshkar
rama natakathilE oru nikalchi.




அந்த ராமனைக் கண்ணாரக் கண்டேன் மதுரை மணி ஐயர் குரலில்

मेरा मन सुमिरै राम कूम, मेरा मन रामहि आहि
अब मन रामहि है रह्या , सीस नवावौ काहि

எனது மனம் ராமா, ராமா என ராமனையே ஜபித்துக்கொண்டிருக்கும்பொழுது ராமனே எனது மனமாகி விட்டது. மனம் ராமன் வசம் ஆனபிறகு, நான் வேறு யாரை தலை வணங்குவேன் ?


ஜகஜித் சிங்க் என்ன பாடுகிறார் ?

ஹரி அல்லால் வேறு யார் துணை ( ஹரி பின் கோன் சஹாய் ) என்னும் பொருளில் துவங்கும் கபீரின் பாடலை ஜகஜித் சிங் குரலில் இங்கே :


तू तू करता तू भया, मुझ मै रही न हूम्
वारी फेरी बलि गयि, जित् देखो तिह तू

ஆஹா ! ராமா ராமா என உன்னையே நான் ஸ்மரிப்பதால், நான், எனது என்று ஒன்றுமே இல்லை. நான் என்பது எதுவோ, எனது என்பது எதுவோ அவையெல்லாம் உன் நாம ஸங்கீர்த்தனத்தில் நிவேதனம் செய்யப்பட்டு என்னால் தியாகிக்கப்பட்டு விட்டன, இப்பொழுது நான் எங்கு பார்த்தாலும், ராமா ! நீயே அங்கு இருக்கிறாய் !!


என்பதாகவும் மற்றும்,

कबीर् निर्भै राम जपि, जब लगि दीवै बाति
तेल घटया बाती बुझी, तब सोवेगा दिन राति

ராம நாமத்தை உனது உடலில் உயிர் உள்ளவரை ஜபித்துக்கொண்டே இரு.
அது உன்னுடைய எல்லா பயங்களையும் போக்க வல்லது. எண்ணை இருக்கும் வரை தீபம் சுடர் விட்டு பிரகாசிப்பது போல , உன் உடலில் உயிர் உள்ளவரை நீ நிர்பயமாக, ஒளி விடுவாய். உன் உடல் மரிக்கும்பொழுது நீ கவலையிலாது நிரந்தரமாக அமைதியாகத் தூங்குவாய்
.

என்றும் ராமநாமத்தின் மகிமையைப் போற்றுகிறார்.

இத்தனை சொல்கிறோமே ? இன்னும் ஜனங்கள் என்னைப் புரிந்துகொண்டு, ராம ஜபத்தினைத் துவங்க வில்லையே என்ற கவலை கபீருக்கு. கதறுகிறார். கூக்குரல் இடுகிறார்.

लूटि सकै तो लूटियो, राम नाम है लूटि
पीछी ही पछिताहुगी, यहु तन जेहै छूटि


ஒ ஜனங்களே !! வாருங்கள்.ராம நாமம் எனும் அகண்ட கஜானா எல்லோரும் வந்து பகிர்ந்து கொள்கிறார்கள். அது காலியாகிவிடப்போகிறது. நீ உனது மன உறுதியும் சக்தியும் ஒருங்கே இணைத்து, சீக்கிரமே எத்தனை முடியுமோ அத்தனை அந்த கஜானாவிலிருந்து ராம நாமத்தை எடுத்துக் கொள். ஸ்மரணை செய்யத் துவங்கு. இறப்பு என்று வந்து காலன் உனது உயிரை தச த்வாரங்களிலிருந்து எடுத்துச் சென்றபின்னே உன்னால் ராம நாமம் ஸ்மரணை இயலாது.

பத்தாம் திருமொழி என்ன சொல்கிறது?

துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
.

அது மட்டுமல்ல,

कबीर आपण राम कहि, औरो राम् कहाइ
जिहि मुखि राम न उचरे, तिहि मुख् फेरि कहाइ

நீ மட்டும் ராம நாமத்தைச் சொல்வதில் திருப்தி அடையாமல், மற்றோரையும் ராம நாம ஜபத்தில் ஈடுபடுத்து. உன்னால், ராம நாமத்தை ஜபிக்க இயலாது போனாலும், மற்றவர் ஜபிக்க நீ காது கொடுத்துக் கேட்கலாம். ராம ஜபத்தில் ஈடுபடலாம் என்று கபீர் சொல்கிறார்.


ராமா ! உன் பெயரைச் சொன்னாலே என் உள்ளம் மகிழ்கிறது. உடல் புல்லரிக்கிறது. நீ உருவமுடன் என்முன் ஒரு கோதண்ட ராமனாக வந்தாலும் சரி, உருவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பர பிரும்மமாக இருந்தாலும் சரி, எனக்கு அருள் புரிவாய். என் பிறவிக்கடலை நீந்தி அக்கரை சேர துணை நிற்பாய்.

जैसे माया मन् रमै, यू जे राम रमाइ
तौ तारा मन्डल् छान्डि करि, जहान् के सो तहान् जाइ.

ராம பக்தனே !! உலகத்தே இருக்கும் யாவையும் ஜீவன் உட்பட, மாயையில் முழுகி உள்ளதோ, அது போல, நீ ராமநாமத்திலே சங்கமமாகி விடு. நக்ஷத்திர மண்டலங்களுக்கப்பாலே கேசவன் இருக்கும் இடத்தை நீ அடைவாய். ஊர்த்வகமனம் செய்து நக்ஷத்திர மண்டலத்துக்கும் மேலே உள்ள ஸூன்ய சக்ரத்தை அடைந்து பரமாத்மாவுடன் ஐக்கியமாய். தன் பிறவிப்பயன் அடைவாய். அழியாப் புகழ் அடைவாய்.


---------------------------------------------------------------

ராம நாமத்திலே சர்வமும் அடக்கம் என்று கபீர் சொன்னதை அழகாக படம் பிடித்து நமது மனங்களில் ஒட்ட வைத்து விட்டார் சுப்புரத்தினம் சார். கபீரின் (ஈரடி) அருள் மழை இன்னிசை தென்றலுடன் மிகவும் சோபித்தது. மிகவும் சுகமான ஒரு வாசிப்பு. அவருக்கு அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி. அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எல்லா நலன்களையும் தந்து இறைவன் அவரை நமக்கு தொடர்ந்து வழிகாட்ட வழி செய்யட்டும்.

இன்று கர்நாடகமெங்கும் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமனை விட சிறந்த ராம பக்தன் உண்டோ ? வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கிய ’கபீரின் இராமன்’ பற்றிய இடுகை ஹனுமத் ஜெயந்தி அன்று நிறைவடைவது இன்னமும் விசேஷம் அன்றோ!

சத்சங்கத்திலே கூட்டுப் பிரார்த்தனைக்கு விசேஷ இடம் உண்டு. வாருங்கள் நாமும் சேர்ந்து கொள்வோம் இந்த ராம நாம ஜெபத்தில்.


ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்.

சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு -7

$
0
0
ஆசிரியர் அறிமுகம்

பள்ளி நாட்களிலும் கல்லூரி பருவத்திலும் படிக்கும் ஆர்வம் மிக இருந்தும் கதைகள், நாவல்கள் போன்றவை பல காரணங்களால் என் மனதை ஈர்க்காமலே இருந்தது. எழுதுபவர்களுக்கும் பிரசுரிப்பவர்களுக்கும் பணம் ஈட்ட இது ஒரு வழி என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

இந்த எண்ணம் இன்று மாறிவருகிறது. சமூகக் கதைகளில் மனதை பாதித்தவை என்று சொல்லக்கூடிய அளவில் எதுவும் இல்லாமல் போனதற்கு என் தேர்ச்சி இன்மை காரணமே ஒழிய படைப்புகள் இல்லாமல் போகவில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

சில அற்புதப் படைப்பாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். நவீன இலக்கியங்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன என்பதெல்லாம் வலையுலகுக்கு வந்த பின்பு பூவனத்தில்படித்து அறிந்து கொண்டேன். விந்தன் முதல் பாலகுமாரன் வரை பல பெரும் எழுத்தாளர்களின் வாழ்க்கைப் பிண்ணணியை மட்டுமல்லாது அவர்களின் கதைகளையும் கதாபாத்திரங்களையும் சிலாகித்து அவர்களின் பன்முக பரிமாணங்களை சுவைபட கூறப்பட்டுள்ள பாங்கை படித்த பின்னர் தான் எழுத்துலகைப் பற்றிய என் தவறான கணிப்புகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தேன்.

அந்த மாற்றத்திற்கு காரணமானவர் திரு ஜீவி அவர்கள்
.

அவருடைய எழுத்துலகப் பயணம் 1957 லேயே துவங்கியது என்று ஒருமுறை படித்ததாக நினைவு. அவருடைய வலைப்பூவை பற்றி அவரது சொற்களாலே அறிய வேண்டுமென்றால் “வலைப்பூ 'பூவனம்' ஒரு சிற்றிதழ் போல. இலக்கியம், ஆன்மிகம், தற்சார்புக் கட்டுரைகள் என்று தேர்ந்தெடுத்த உள்ளடக்கங்கள் கொண்ட ஒரு பத்திரிகையைப் புரட்டுவது போல இருக்கும்”.


இது எவ்வளவு உண்மை என்பதை அறிய பூவனத்தில் அவர் இடுகைகளிலிருந்து ஒரு சில உதாரணங்கள் மட்டும் இங்கே.


"
உயிரில் கலந்து உணர்வில் ஒன்றி" ஐந்திணை ஐம்பதிலிருந்து அன்பிற்காக தியாகம் செய்யும் பாடல் ஒன்று (மாறன் பொறையனார் பாடல்) கதை வடிவில் ஆரம்பித்து இலக்கியச் சுவையுடன் முடிகிறது.பிறர்க்காக வாழும் வாழ்க்கையே சிறப்பு என வலியுறுத்தும் புறநானூற்றுச் சுவை தரும் இடுகைஎன ஒன்று.

இலக்கியத்தமிழ் மட்டுமல்ல இசைத் தமிழும் இவரது பூ வனத்தில் உண்டு. கலைமகள் முதல் முருகன் வரை பாடல்கள் இயற்றி மகிழ்பவர் திரு ஜீவி.
அழகன் முருகன் (மணிரங்கு), சிவன் (கல்யாணி), உப்பிலியப்பன்(ராகமாலிகை) என பட்டியல் பெரிது.

ஜீவி அவர்களின் கவிதைகளை படிப்பவர்களுக்கு அவருடைய நுண்மையான கவனிப்பும் அதை யதார்தத்தில் பகிர்ந்து கொள்ளும் திறனும் வியக்க வைக்கும்.
கிழிசல் என்ற கவிதை உழைக்கும் வர்க்கத்தில் தம் மனப் போராட்டத்தையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் கணவன் மனைவி பற்றிய ஒரு அன்பு மயமான சொற்சித்திரம். இருப்பதுஎன்ற தலைப்பில் ”இருப்பது இல்லாதது” பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகள் மிக சுவையானவை மட்டுமல்ல வெகுநேரம் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை.
..............
அது இருக்கையிலேயே
அதன் இல்லாமையும்
பழக்கப்பட்டுப் போயின்
இருப்பின் மகத்துவமும்
இல்லாது போகலாம்
இப்படியாக இல்லாமையின்
வெறுமையில்
இருப்பின் இழத்தலை
வென்று கடக்கலாம்
..................
எல்லாவற்றினும் மேலாக அவருக்கு முக்கியமானது அவரது ஆன்மீகத் தேடல். அது
மனஓசையாகபூவனத்தின் முதல் இடுகையிலேயே வெளிவந்தது.
............
மார்பில் கைவைத்து பார்க்கையில்
மனசில் உணரமுடிந்தது துடிப்பை
தன்னில் தானாய் என்னில் அதுவாய்
என்னுள் கலந்துபோன உயிரின் ஓசை
பிரயத்தனப்பட்டால் தான் உணர்வாய்
புரிகிறது என்னும் உண்மை புரிந்தது
என்னில் உறங்கும் உள்ளொளியும்
நான் எனும் சுயம் ஒழித்து
தன்னில் கரைந்தால் தான்
தட்டுப்படும் போலிருக்கு.


அந்த தேடல் விரிந்து “
ஆத்மாவை தேடி “என்னும் ஒரு கருத்தரங்கப் பகிர்வாக மெய்ஞானம், விஞ்ஞானம் கலந்த கருத்துக் களமாக பல படிமங்களில் இரண்டு பாகமாக எண்பது இடுகைகளுக்கும் மேலாக பெருகி ஒரு அறிவு களஞ்சியமாக திகழ்கிறது. இப்படி ஒரு தொடரை எழுத வேண்டுமென்றால் அவரது வாசிப்பு எவ்வளவு அகலமும் ஆழமும் உடையது என்பதை எண்ணி எண்ணி மனம் வியக்கிறது.
கடைசியாக ஜீவி அவர்களின் கதைகளைப் பற்றி ஒரு வார்த்தை. அவைகளிலே தீய எண்ணம் உடைய கதாபாத்திரங்களையே காணமுடியாது. யாவரும் அன்பு மயமானவர்கள். பிறருக்காக விட்டுக் கொடுப்பவர்கள். சந்தர்ப்ப வசத்தால் ஒரு தர்மசங்கடமான நிலை தலையெடுக்கும் அல்லது சந்தேகம் தோன்றக்கூடிய வாய்ப்பு எழும். பின்னர் கதிரவனைக் கண்ட பனிபோல் அவை எப்படி அன்பினால் கரைந்து போய்விடும் என்ற வகையிலேயே பொதுவாக இருக்கும்.

அன்பு மயமான ஒருவரால் வேறு எப்படி எழுத முடியும்?


கார்த்திகை தீபத் திருநாளன்று எழுதப்பட்ட கபீரின் வலைப்பூவுக்கான இக்கட்டுரைக்கு
அகல்விளக்கு அற்புதம்என்று தலைப்பிட்டு அன்பின் பெருமையை பேசவிருக்கிறார்.வாசகர்கள் சார்பாக திரு ஜி. வெங்கடராமன் அவர்களை வணங்கி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இனி ஜீவி ஐயா .......
------------------------------------------------------------------------

அகல் விளக்கு அற்புதம்

ஆரம்பத்தில் மகான் கபீர் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. வடக்கில் வாழ்ந்த ஓர் ஆன்மீகப் பெரியவர் என்கிற மட்டில் அன்பர் கபீரன்பனின் 'கபீரின் கனிமொழிகள்' வாசிப்பு தொடர்ந்தது. பிடிப்பு ஏற்பட ஏற்பட இடுகை போட கொஞ்சமே காலம் தாமதமானாலும் நாளாவட்டத்தில் இன்னும் ஏன் அடுத்த பதிவு போடக்காணோம் என்று ஏக்கம் ஏற்பட்டது. அந்த ஏக்கத்திற்குக் காரணம் இருந்தது.

இந்தண்டை அந்தண்டை பராக்கு பார்க்காமல் ஒரு தவம் போல பதட்டப்படாமல், நிதானமாய் மகான் கபீரின் பன்முக தரிசனத்தை அவர் கொடுத்த பொழுது இந்தப் பதிவுக்கு வருவது, வந்து வாசிப்பது, வாசிக்க ஏங்குவது இதெல்லாம் வழக்கமான பழக்கமாயிற்று. இந்த ஈர்ப்புக்கு முக்கிய காரணம், மகான் கபீர் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டிய பேற்றை அவர் அணுஅணுவாக விவரித்த பாங்கு. தாயுமானவர், பட்டினத்தார், வள்ளலார், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று நமக்கும் பழக்கப்பட்டுப்போன தென்னகத்து தவச்சீலர்களின் பாடல் வரிகளை எடுத்தாண்டு மகான் கபீரின் வாய்மொழிகளாம் வாய்மை மொழிகளை நமக்குத் தெரிவித்தமையால் கபீர்தாசரைப் புரிந்து நம்மைப் புரிந்து கொள்வதில் எந்த தடுமாற்றமோ தயக்கமோ இல்லாது போயிற்று.

சொல்லப்போனால், நம்மை நாமே புரிந்து கொள்வதற்காகத்தான் எல்லாமே.தவழும் பருவத்திலிருந்து தள்ளாடும் பருவம் வரை இந்த புரிபடல் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி இந்த நேரத்தில் இன்ன நடப்பது என்பது கூட இறைவனின் வரமாகிப் போகிறது.

அன்பு, பிரேமை, பக்தி என்று பக்குவமடைதலின் வரிசை நீண்டு முக்திக்கு வாசல் திறக்கும் பேற்றை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது

கபீர்தாசருக்கும் இந்த அன்பு தான் அவரது வாழ்வின் ஆதாரசுருதியாக இருந்திருக்கிறது. இறைவனிடத்து வைக்கும் தீவிர அன்பு பக்தியாகப் பரிமளிக்கும் என்பது அவரது வழிகாட்டல். அதனாலேயே, 'தன்னலமற்ற அன்பு பேரின்ப நெறிக்கு முன்பதிவுச் சீட்டு' என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஏழைகளிடத்து வைக்கும் அன்பு இறைவனிடத்து இட்டுச் செல்லும் என்றும்,இல்லாதோர் இறைவனிடம் வைக்கும் அன்பு அந்த இறைவனையே அவர் வீட்டு வாசலுக்கு இட்டு வரும்என்றும் எடுத்துச் சொன்னவர் அவர்.
உண்மை பக்தர் இரவிதாஸருக்காக கங்கை அவர் தொழில் செய்த தொட்டியிலேயே எழுந்தருளினாள் என்பது திகைக்கச் செய்யும் செய்தி, இல்லையா?... எப்படிப்பட்ட இரவிதாஸர்?.. 'இராமஜெபம் இருக்கையில் வேறொன்றும் வேண்டேன் பராபரமே' என்று கைகுவித்து இறைவனை தன் இதய சிம்மாசனத்தில் இருத்திக் கொண்ட இரவிதாஸர்!

அன்பு பக்தியாக குணமாற்றம் கொண்டு மூலமான இறைவனோடு இணையும் இரசவாதம் அற்புதமானது.

கபீரின் மொழியில் அவர் அன்பன் குறிப்பிட்டபடி

सबै रसायन हम किया प्रेम रसायन् न कोय ।
रंचक तन में संचरै, सब तन कंचन होय ॥


அவிழ்தம் பலப்பலக் கண்டேன் அன்பின் நிகராய் கண்டிலேன்
தனுவில் ஒருதுளி புகுந்தது, தனுவெலாம் பொன் மயமானது.

தினமும் பூஜை செய்தது சிவபெருமானின் சிலையாக இருந்தது, சிவகோசரியாருக்கு. கண்ணப்ப நாயனாருக்கோ, தான் கொண்டிருந்த மாசு மருவற்ற பக்தியே சிவபெருமானாக இருந்தார். இந்த அன்பின் பிரதியான பக்தியே காளத்திநாதரின் கண்களில் இடம் வலம் என்று மாறி மாறி குருதி வழிந்த பொழுது தன் கண்களை ஒவ்வொன்றாக நோண்டி எடுத்து பெருமானின் முகத்தில் அப்பி வைக்க வைத்தது.

ஆதி சங்கரரின் சிவானந்த லஹரீயின் அறுபத்து மூன்றாவது சுலோகம் கண்ணப்ப நாயனாருக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

मार्गवर्तितपादुका पशुपते रङ्गस्य कूर्चायते
गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।
किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते
भक्ति: किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥

மார்க்காவர்த்தித-பாதுகா பசுபதே-ரங்கஸ்ய கூர்ச்சாயதே
ண்டூஷாம்பு-நிஷேசனம் புர-ரிபோர்-திவ்யாபி-ஷேகாயதே|
கிஞ்சித்க்ஷித-மாம்ஸசேஷ-கலம் நவ்யோபஹாராயதே,
க்தி: கிந் ந கரோத்யஹோ வநசரோ க்தாவதம்ஸாயதே ||


'காட்டு வழியெல்லாம் நடந்து நடந்து தேய்ந்த கண்ணப்பரின்
செருப்பு பெருமானின் மூர்த்திக்கு அபிஷேகத்திற்கு முன்
சிரசில் வைக்கப்படும் கூர்ச்சம் போலாகிறது. அவர் வாயிலிருந்து கொப்பளித்த நீரில் நனைந்தது தெய்வத்தன்மை பொருந்திய அபிஷேகம் போலாயிற்று. கொஞ்சமே கடித்து பார்த்த மாமிசத்தின் பாக்கிக் கவளம் புத்தம் புதிதான நைவேத்தியம் போலாகிறது. அஹோ! காட்டில் வசிக்கும் வேடர் பக்த சீலராகிறார்! ஆழ்ந்த பக்தி எதைத்தான் செய்யாது?' என்று பிரமிக்கிறார்.


திருநாவுக்கரசு சுவாமிகளோ தமது தேவாரத்து திருக்குறுக்கை வீரட்டத் திருப்பதிகத்தில்,

காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ்ச் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்டனாரே

என்று கண்ணப்ப நாயனாரின் சரிதம் சொல்ல,

ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் -- சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து

என்று காரைக்கால் அம்மையாரும் அன்பென்னும் போர்வையினால் பிறவா யாக்கைப் பெரியோனைப் போர்த்தி தன் நெஞ்சத்தில் மாயத்தால் மறைத்து வைக்க,

அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

-- என்று திருமந்திரம் முடித்து வைக்கிறது.

முதல் மூன்று ஆழ்வார்கள் கதை நமக்குத் தெரியும். மூவரும் தாயின் கர்ப்பத்தினின்று பூவுலகில் பிறவி எடுத்தவர்கள் அல்லர். தமிழகத்தின் வெவ்வேறு திருத்தலங்களில் அடுத்த நாள் அதற்கடுத்த நாள் என்று அவதரித்தவர்கள். மூவருக்கும் ஐப்பசி மாசம். ஜென்ம நட்சத்திரங்கள் தாம் அடுத்தடுத்தது. பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரத்தில் திருவோண நட்சத்திரத்திலும், பூதத்தாழ்வார் மாமல்லையில் அவிட்ட நட்சத்திரத்திலும், பேயாழ்வார் திருமயிலையில் சதய நட்சத்திரத்திலும் அவதரித்தனர்.

தென்பெண்ணை ஆற்றங்கரையில் நடுநாட்டில் உள்ள திருத்தலம் திருக்கோவலூர். தீராத விளையாட்டுப் பிள்ளை இங்கு திருவிக்கிரமனாய் காட்சி தருகிறார். கண்ணனை, கார்மேக வண்ணனைத் தரிசிக்கும் ஆவலில் மூவரும் வெவ்வேறு தலங்களிலிருந்து திருக்கோவலூர் வருகின்றனர். இந்த மூவருக்கும் திருக்கோவலூரில் ஒரு சந்திப்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருக்கமாய் நெருங்க வேண்டுமென்பது பெருமானின் ஏற்பாடு.

மூவரும் இரவு தங்கலுக்கு ஒதுங்கிய இடம் ஒன்றாகிறது. அடியார் ஒருவர் இல்லத்து இடைக்கழி. அந்த சின்னஞ்சிறிய இடத்தில் ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்; மூவர் நிற்கலாம். இவர்கள் மூவராகையால் நின்று கொண்டே இரவைக் கழிக்கலாம் என்று தீர்மானிக்கையில், கண்ணுக்குப் புலப்படாத இன்னொருவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இன்னும் நெருக்குகின்ற உணர்வு. நாலாவதாய் சேர்ந்து கொண்டவர் யார் என்று இருட்டை விரட்டிப் பார்த்து அறிய ஒவ்வொருவராக ஞான விளக்கேற்றி உணர முற்படுகின்றனர்.

பொய்கை ஆழ்வாரை அடுத்து பூதத்தாழ்வார் ஏற்றிய அகல் அன்பு ஒளியேந்தி பளீரென்று பளீரிட்டுப் பிரகாசிக்கின்றது.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா -- நன்புருகி
ஞானச்சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

பூதத்தாழ்வார் ஏற்றிய அகல், அன்பு அகல். அன்பை அகலாக்கி, ஆர்வத்தை நெய்யாய் அதில் வார்த்து, இனிய மனத்தை திரியாய் அதில் இட்டு நாராயணனுக்கு ஞானச்சுடர் ஏற்றுகிறார் அவர். ஆர்வ நெய்யில், இன்ப மனத்திரி அன்பு அகலில் ஒளிவிட்டு ஜொலிக்கிறது.

கபீரும் தன் ஆழ்ந்த அன்பை விளக்க ஒரு விளக்கு ஏற்றி அதன் ஒளியில் தன் தலைவன் முகம் காண ஏங்குகிறார்.

इस तन का दीवा करू, बाती मेल्यु जीव ।
लोही सींची तेल ज्यों, कब मुख देखू पीव ॥

உடலே அகலாய் உயிர் மூச்சும் அதிலிட்டத் திரியாய்
உதிர நெய்யில் ஒளிர்கையில் பதிமுகம் காண்பதெப்போ?

அன்பிற்கினியவன் தன்னை விட்டுப் பிரிந்த நேரத்து அவன் வருகையை எதிர் நோக்கி கையில் அகலுடன் காத்திருக்கிறாளாம் இளம் பெண் ஒருத்தி. அவன் திரும்புகையில் இருட்டில் அகல் வெளிச்சம் அவன் முக தரிசனம் கிடைக்க உதவும் என்பது அவளது எதிர்பார்ப்பு.

கபீருக்குக் கிடைத்த அகல் அவரது உடலேயாம். உடல் அகலில் உயிர் மூச்சைத் திரியாக்கி உதிர நெய்யில் நனைக்கிறார் கபீர். அகல் சுடர்விடும் அந்த ஆத்ம ஜோதியில் இறைவனைக் காண அவன் தரிசனம் கிடைப்பதெப்போ எனக் காத்திருக்கிறாராம்.

காலங்கள் வேறுபடலாம்; தருணங்கள் வெவ்வேறாய் இருக்கலாம்; தேச எல்லைகள் கூட கிழக்கு மேற்கு என்று எங்கெங்கோ மாறி மாறுபடலாம். இறைவனிடத்து பேரன்பு கொண்ட அருளாளர் சிந்தையெல்லாம் சந்தித்துப் போய்த் தங்குமிடம் ஒன்றே.

அன்பே உருவாய்க் கொண்ட அன்பூரே அது!

நமது இலக்கியங்களும் சரி, வழிபடுத்தப்பட்ட வாழ்க்கை முறைகளும் சரி, இறைவனுடன் ஒன்றி வாழ வழியேற்படுத்தி இருக்கின்றன. இன்னொன்று. இறைவனிடம் மனம் ஒன்ற ஒன்றத்தான் 'தான்' என்னும் அகம்பாவம் அழிந்து உண்மையான 'தானைத்' தானே கண்டு கொள்ளும் பாக்கியம் கிட்டும்.

தன்னைத் தானே உண்மையாக அறிதல் என்பது வாழ்க்கையில் வெற்றிகளை ஈட்டக் கிடைத்த வரப்பிரசாதம். அந்த சித்தி கைவரப்பெற்றவர், தொட்ட காரியம் எல்லாம் துலங்கும். இறை பக்தியும் கூட இருந்து இரும்புக் கோட்டையென அவரைக் காக்கும்.

நிறைய எழுத மனம் அவாவுகிறது. அதை வேறோர் சமயம் செய்வதே சரி.

'நான்கு வருடம்; நூறு இடுகை. அதுவும் மகான் கபீரின் கனிமொழிகளைப் பற்றியே' என்று கபீரன்பர் செய்து வருவது சாதாரண விஷயம் இல்லை. மேற்பட்டப் படிப்பு ஆராய்ச்சிகளுக்குக் கூட இவ்வளவுசிரத்தையுடன் மெனக்கிடுவதில்லை. இறைவன் அருள் இருப்பதாலேயே இதெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது என்பது உள்ளம் உணர்ந்த உணர்த்தல்.

தமது கடுமையான உழைப்பு கொண்டு ஒரு சத்சங்கத்தை கபீரன்பன் நிறுவியிருக்கிறார் என்கிற நினைப்பே மோலோங்குகிறது.

மகான் கபீரிடத்து கொண்ட பிரேமை 'கபீரன்ப'ரானது. அன்பு அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தான் அவரது இயற்பெயரை விடுத்து 'கபீரன்ப!' என்று அவரை அழைப்பதே நெருக்கமாகப் படுகிறது!
----------------------------------------------
நன்றி நவிலல்

நாவில் உணவின் சுவை நிற்பது சில கணங்களே. செவிவழி நுகரும் இசையின் மயக்கம் நினைவில் சில மணிநேரம் நீடிக்கக்கூடும். ஆனால் நல்ல எழுத்துகளின் வாசிப்பின் சுவை மனதில் வாழ்நாள் முழுவதும் உடன் நிற்பது என்பது இப்பொழுது புரிகிறது.

அந்த வாசிப்பின் சுவையை பகிர்ந்து கொள்ளவும் ஒரு திறமை வேண்டும். ஜீராவில் ஊறும் குலோப்ஜாமூன் அத்தனை இனிப்பையும் தன்னுள் இழுத்துக் கொள்வது போல் பெரும் எழுத்தாளர்களின் வாசிப்பிலேயே ஊறிப்போன திரு ஜீவி அவர்களும் அப்படி ஒரு சுவை பட எழுதும் எழுத்தாளராக பரிமளிப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.


அவர் இந்த அன்பன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன். ஜீவி மற்றும் சூரி ஐயா போன்ற பெரியவர்களின் ஆசிகளே இறைவனின் ஆசீர்வாதமாக செயல்படுகிறது என்றால் மிகையில்லை
.

நமக்காக நேரம் ஒதுக்கி கருத்து செறிவுள்ள ஒரு கட்டுரையை சுவையாகப் படைத்து இந்த வலைப்பூவை கௌரவித்ததற்கு திரு ஜீவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவருடைய எழுத்துலக சேவை பல காலம் நம் யாவருக்கும் வழிகாட்டட்டும் என்று வேண்டிக் கொண்டு அவருக்கு நன்றி சொல்கிறேன்.

திரு ஜீவி அவர்களுக்கும் வாசக அன்பர்களுக்கும் வரும் ஆங்கில புத்தாண்டு 2011 ஒளிமயமாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிறேன். நன்றி.

சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு-8

$
0
0
முதலில் புத்தாண்டு வாழ்த்து, அதுவும் முக்கிய விருந்தினரிடமிருந்து :)


(click the figure for larger view)

{என்ன இது? கபீர் வலைப்பூவிலே வந்து தன்னுடைய வலைப்பூவுக்கு ஆள் சேர்க்கிறாரே என்று யாரும் அவரைத்தப்பாக நினைக்க வேண்டாம். அது அவருடைய நகைச்சுவை உணர்வை சுட்டிக் காட்ட அவருடைய 2007 வருடத்து பதிவிற்கு நான் கொடுத்த புதுப் பொலிவு..ஹி ஹி அவ்வளவுதான். }

யானைக்குட்டியை கண்டதுமே விருந்தினர் யாரென்று தெரிந்திருக்க வேண்டுமே!
ஆயிரம் இடுகைகள் தாண்டிய பதிவர் திலகம், இதிகாசச் செம்மல், தாமிரபரணி கண்டார், திருக்கையிலாயம் கொண்டார், சிதம்பரம் வென்றார், அண்ணாமலையை ஆட்கொண்டார், இராம காதையுடனும்கண்ணன் கதையுடனும்இணைய உலகின் ஈடில்லாத் தானைத் தலைவி வருகிறார்,.... வருகிறார் .....பராக்.... பராக்
என்று கட்டியம் கூறி வரவேற்கப்பட வேண்டியவர் நம் தலைவி. அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வது கை விளக்கால் சூரியனை காட்ட முயல்வது போன்ற நகைப்பிற்கான விஷயம்.

ஆனால் சூரியனுக்கு நீராஜனம் காட்டினால் அது ஆசியை வேண்டுவது போலாகி விடுமல்லவா !

அதற்கான வாய்ப்பை நல்கிய இன்றைய சிறப்பு விருந்தினரானதிருமதி கீதா சாம்பசிவம்அவர்களை உங்கள் அனைவர் சார்பாகவும் மனமார வரவேற்கிறேன்.

இவருடைய பதிவு உலகப் பயணத்தைப்பற்றி தமது ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணியில்கூறியிருக்கிறார், படியுங்கள்.

அவர் இடுகைகளை பிரசுரிக்கும் வேகம் கண்டு எப்போதும் பிரமிக்கிறேன்! தொடர்ந்து எழுதும் பழக்கம் இருக்கும் ஒரு பதிவர் வாரம் ஒரு இடுகை எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம். கொஞ்சம் சுறுசுறுப்பானவர் வாரம் இரண்டு இடுவர். வியாபார நோக்கத்தோடு எழுதும் ஒரு சிலர் தினம் ஒன்று கூட எழுதலாம்.

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாரத்திற்கு ஒன்பது இடுகைகளை இடும் தலைவியின் எனர்ஜியை என்ன சொல்வது ? வாரத்திற்கு ஒன்பது இடுகைகள் !!!!!! நான் சொல்லவில்லை. கூகிள் ரீடர் சொல்கிறது. இது எண்ணங்கள்வலைப்பூவில்மட்டும். இன்னமும் மூன்று நான்கு வலைப்பூக்கள் , நான்கோ ஐந்தோ குழுமங்கள்; போதாதற்கு பஸ் (BUZZ) ட்ரெயின்என்று எங்கெங்கே பார்த்தாலும் கீதா மேடம் தான். அவர்கள் எழுதுவதை படிக்கக்கூட நமக்கு நேரம் இல்லாமல் முழிக்கிறோமே இவர் எப்படி இப்படி எழுதித் தள்ளுகிறார்? அவர் தொடாத துறையே கிடையாது எனலாம். ஏதாவது ஆட்களை நியமித்து தட்டச்சு செய்ய ஆபீஸ் மாதிரி நடத்துறாரா என்ற சந்தேகம் கூட வருவது உண்டு !

எப்படியோ தரமான வாசிப்பிற்காக சிரிக்கச் சிரிக்கவும், சிந்திக்க வைக்கவும், நம் கலாசாரத்தை மறக்காமல் போற்ற வேண்டியவைகளை அவ்வப்போது நினைவு படுத்தியும் சுறுசுறுப்புடன் செய்து வரும் இவரது எழுத்து சேவை பதிவுலகில் அபாரமானது.

இவர் எத்தனை வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார் என்ற கணக்கு சரியாகத் தெரியாது. எனக்கு கிடைத்த வரையில் இவரது வலைப்பூக்களும் இடுகை எண்ணிக்கைகளும் வருமாறு.

எண்ணங்கள் (1125 +) கண்ணனுக்காக ( 36) சாப்பிடலாம் வாங்க (27) பேசும் பொற்சித்திரமே (38)என் பயணங்களில் (128 ) ஆன்மீகப்பயணம் (302) (பக்தி) ராம ஆஞ்சனேய பிரபாவங்கள் .....etc

நம் நாட்டின் புராண இதிகாசங்களையும் அதிகம் அறியப்படாத வரலாறுகளையும் ஆழமாகப் படித்து அவற்றை மெகா சீரியல்கள் போலவே அலுப்பில்லாமல் எழுதிக் குவிக்கிறார் கீதா சாம்பசிவம் அவர்கள். அதற்கு அவரே கொடுத்த விளக்கம் :
இந்த ஞானம், யோகம், பிரம்மம் பற்றியும் எழுதாமல் ஏன் புராணக் கதைகள், இதிஹாசக் கதைகள்னு தெரிஞ்சதைப் பத்தி எழுதறேனும் சிலர் கேட்கிறாங்க. நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் இது பற்றிய முழு அறிவு சில பெரியவங்களுக்கே இருக்கிறதில்லை. அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை. அவங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது. இப்போது இணையம் மூலமாய்ப் பலருக்கும் இது சென்றடையும். மேலும் பிரம்மம் பற்றி அறிய வேண்டுமானால் கொஞ்சமாவது இறை உணர்வு, நம்பிக்கை வேணும். முதலில் அதை வளர்த்துக்கணும் இல்லையா? நான் இப்போது தான் பக்தி என்னும் படியிலேயே நிற்கின்றேன். அந்தப் படியைக் கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை இந்தப் பிறவியில் அது நடக்குமா, நடக்காதா தெரியலை. எத்தனை பிறவி எடுக்கணுமோ தெரியாது. எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.

ஜீவி ஐயாவைப் போலவே இவரும் ஒரு தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர் என்பதை அவருடைய பல பதிவுகள் மூலம் அறியலாம். அதை, சிறு வயதில் அவர் படித்து மனதில் நின்று விட்ட உதாரணத்தின் மூலம் அறியலாம்:
....அந்தப் புத்தகம் தான் "கல்கியின் அமரதாரா". கல்கி அவர்கள் தன் வாழ்நாளின் கடைசியில் எழுத ஆரம்பித்து முடிக்காமலே போனது

‘’ மனதின் எண்ண அலைகளின் ஓட்டமும், ஒரே சமயத்தில் இருவருக்கும் சேர்ந்தாற்போல் எண்ணங்கள் பரிமாற்றம் ஆகும் விந்தையும் சிலிர்க்க வைக்கும். கதையைப் படித்த எல்லாருக்கும் இப்படி இருக்குமா? அல்லது இருந்ததா? தெரியாது! என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு அதிசயம், ஆனந்தம், அபூர்வம், அழகு, எல்லையற்றது!. அவ்வளவுதான். இம்மாதிரியான அன்பை நான் அப்போதுதான் முதன்முதலாய் உணர்ந்தேன். ’’

அந்த அன்பின் அதிசயம் அவரை மிக உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ இன்றையக் கட்டுரைக்கு அவர் இட்டிருக்கும் தலைப்பும் ‘அன்பெனும் அக்ஷயப் பாத்திரம்”. சென்ற இடுகையில் ஒளியேற்றிய அன்பு இந்த இடுகையில் அட்சயப்பாத்திரமாய் யாவர் மனதையும் நிறைக்க வருகிறது. கீதா சாம்பசிவம் அவர்களை வருக வருக வருக என்று வரவேற்கிறேன்.

இனி விருந்தினர் படைப்பு .....


அன்பெனும் அக்ஷய பாத்திரம்!

கபீரன்பரின், "ஈரக்கம்பளம் சுமையதிகம்" என்னும் பதிவின் இந்தக் குறிப்பிட்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏனெனில் என்னுடைய குணத்தைச் சுட்டுவதாலோ என்னமோ தெரியவில்லை. அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டிப் பலரும் பெரும் மதிப்பும், மரியாதையும் காட்டுவது பல சமயங்களில் கூச்சத்தையும் எல்லாவற்றையும் விட பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. பாராட்டுக்களின் சுமை என்னை அந்தக் கழுதை சுமக்கும் ஈரக்கம்பளத்தை நினைவூட்டுகிறது. அந்தப் பதிவின் குறிப்பிட்ட இந்தப் பத்திகளே என்னைக் கவர்ந்தவை:

அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான்.


இங்கே சொல்லி இருப்பதோ மெளனம், மெளனம், இது தான் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள், முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது. ஆனால் குறைகுடமாய்க் கூத்தாடும் என்னையும் மதித்து, அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டி என்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் முக்கியமாய்க் கபீரன்பருக்கும் இதை எவ்விதம் தெளிவாக்குவது??

நான் இன்னும் ஆரம்பப் பாடத்தையே ஆரம்பிக்கவில்லை. ஞான வழி என்பதை என்னால் இன்னமும் நினைக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு அடிப்படையான பள்ளிப்படிப்பு பக்தியில். அதிலேயே இன்னும் தேர்ச்சி அடையவில்லையே? பக்தி என்றால் என்ன என்பதையே இன்னும் தெரிந்து கொள்ள முயலவில்லை. சாதாரணமாக எல்லாரும் நினைப்பதைப் போலவே கண், மூக்கு, முகம், காது, கைகள், கால்கள் உள்ள ஒரு தேவதையை என் பக்திக்கு என்ற ஏற்பட்ட ஒரு மூர்த்தியை என் இஷ்ட தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் அதைத் தாண்டி அப்பால் போகவில்லை. போக இயலவில்லை என்றே சொல்லலாம்.

நம் கண்ணுக்குத் தெரியாத நிர்குணப்பரமாத்மாவிடம் அன்பு/பக்தி செலுத்துவது என்பதை இன்னமும் என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் வணங்கும் அந்த மூர்த்தியின் பெருமைகளையும், மஹிமைகளையும் எடுத்துச் சொல்லும் புராணங்களில் இருந்து சின்னச் சின்னத் துளிகளே. அதுக்கே இவ்வளவு ஆரவாரம், ஆர்ப்பாட்டத்தோடு இருக்கேன். ஆண்டவனிடம் இன்னமும் பரிபூரண சரணாகதி செய்யும் மனப்பக்குவம் வரவில்லை. பரம்பொருளிடம் அன்பு வைக்கவேண்டும். ஆசை வைக்கக் கூடாது. ஆனால் நானோ ஆசைதான் வைத்திருக்கிறேன். அன்பே சிவம் என்று சொல்லிய திருமூலரின் வார்த்தைகளை உன்னிப்பாய்க் கவனித்தால் புரியும்.

அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே


இதன் பொருள் தெளிவு. யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அத்தகையதொரு அன்பைத் திரும்ப எதையும் பிரதிபலனாய் எதிர்பாராத அன்பைக் கொடுக்கிறேனா?? என்னுள்ளே குடிகொண்டிருக்கு அந்த சிவனைக் கண்டு பிடித்து என் ஜீவனை அதனுடன் இணைத்துக்கொள்ளும் வழியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேனா? இல்லை என்பதே பதில். இன்னமும் உலகத்து ஆசைகளை விட்டொழிக்கவில்லை. மாயையாகிய அந்த ஆசைகளும், அவற்றில் ஈடுபாடும், பற்றும் அறவே ஒழியவில்லை. இறைவனிடம் அன்பு செலுத்தச் செலுத்த ஆசைகள் தோன்றுவதையும் முளையிலேயே அறுத்து எறிய வேண்டும் என்கிறார் திருமூலர்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.


இன்னும் ஆசைகள் அகலவில்லை. மாயையில் இருந்து விடுதலை பெறவும் இல்லை. அதற்குண்டான முயற்சிகளும் செய்யவில்லை. மாயை மனதை விட்டு அகல மறுக்கிறது என்றே சொல்லலாம்.

மாயை மாயை என்பர் அறிவாரில்லை மாயையை
மாயையாவது அதுவே மனம் விட்டு அகல மறுப்பதுவே


மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாது உரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்


கபீரின் ஈரடிகளிலே நம் கபீரன்பர் மேற்கண்ட வாறு மொழிமாற்றம் செய்துள்ளது என்னைப் பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருத்தமான ஒன்று. என்னிடம் இன்னமும் ஆசைதான் இருக்கிறது.

ஆசைகள் அறுந்து மனம் ஈசனை நாடவேண்டும். இங்கே ஈசன் என்று சொல்லி இருப்பது, நாம் வடிவாய் வணங்கும் விக்ரஹங்களில் அல்ல.

உள்ளே உள்ள அன்பு ஊற்றுச் சுரந்து அதில் தெரியும் ஜோதி மயமான ப்ரபிரும்மத்தை. அன்பு ஊற்றுப் பெருகவேண்டும்.

அன்பானது கொடுக்கும் பொருள்.

அக்ஷய பாத்திரத்தில் எவ்வாறு எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கோ அது போல் கொடுக்கக் கொடுக்க ஊற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் போல் கொடுக்கக் கொடுக்க மீண்டும் மீண்டும் அன்பு சுரக்கும்.

ஊற்றுக் கண்ணிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க மீண்டும் மீண்டும் சுரப்பது போல. குழந்தை எத்தனைக் குடித்தாலும் தாய்க்கு மீண்டும் மீண்டும் பால் சுரப்பது போல கொடுக்கக் கொடுக்கக் குறையாத அன்பு ஊற்றுச் சுரக்கவேண்டும்.

அன்பு என்பது பிரதிபலன் எதிர்பாராமல் கொடுத்துக் கொண்டே இருப்பது. கொடுக்கக் கொடுக்க நம் மனம் நிறைகிறதே அதில் தான் பரிபூரண ஆனந்தம் தோன்றும். ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை விடவும் மனிதனுக்கு மனதும், புத்தியும் பண்பட்டே தான் இருக்கிறது. ஆனாலும் நாம் சரிவர அதைப் பயன்படுத்துவதில்லை.

ஆசையை அன்பு எனத் தவறான புரிதலில் இருக்கிறோம்.

நம் மனதும், புத்தியும் உள்ளிழுக்கப்பட்டு, நான் என்ற அஹங்காரம் ஒழிந்து ஈசனிடம் ஒருமைப்பட்ட நிலையில் செலுத்தும் அன்பையே பக்தி என்றும் சொல்லலாம். அத்தகையதொரு அன்பு எத்தனை பிறவி எடுத்தாலும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஆசையை ஒழிக்க வேண்டும். இந்த அவா என்னும் ஆசையை ஒழிப்பது குறித்து வள்ளுவப் பெருமானும் ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பினும் வித்து.


எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தின் வித்தே இந்த அவா என்னும் ஆசைதான் என்று பரிமேலழகர் உரை கூறுகிறது. அந்த அவாவை ஒழிக்கவேண்டும். இதற்குத் தேவை ஒருமையுடனேயே ஈசன் திருவடி நினைந்து நினைந்து உருக வேண்டும். நாமே அதுவாகி ஒன்றோடு ஒன்று கலக்கவேண்டும். நாவுக்கரசப் பெருமான் சொன்ன மாதிரி,

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"


என்னும்படிக்கு மெய்ம்மறந்த நிலையில் ஆன்மா அந்தப் பரம்பொருளோடு ஒன்ற வேண்டும்.

இங்கே அன்பின் தத்துவம் பற்றி, அன்பே கடவுள் என்பதைப் பற்றி என் ஆதர்ச புருஷர்களின் ஒருவரான விவேகாநந்தர் கூறி இருப்பதைப் பார்ப்போமா?? இது 1896-ம் ஆண்டு சுவாமி அவர்கள் மாக்ஸ்முல்லருடன் ஆன தமது தரிசனத்திற்குப் பின்னர் கூறியவை. தன் சீடர் ஆன லெக்கெட் என்பவருக்குப் பிரேமையின் மாபெருங்கடல் ஆன சுவாமி எழுதியது பின்வருமாறு:

"சாத்தான் என்று ஒருவன் இருந்தால் அவனைக் கூட நேசிக்கும் நிலைக்கு நான் மெல்லச் சென்று கொண்டிருக்கிறேன். தாசிகள் வசிக்கும் ஒரு விடுதியில் அவர்களைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தை நினையாமல் உடன் வாழக் கூடியவனாக இருக்கிறேன். சுற்றியுள்ள தீமையைத் தீமையாகக் காணாவிட்டால் உலகுக்கு நல்லது செய்யமுடியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக வேலை செய்யும் ஆற்றல் என்னிடம் அபரிமிதமாய்ப் பெருகியுள்ளது.

எல்லாரையுமெல்லலவற்றையும் அநுகிரஹிக்கவேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன். நான் ஒருவிதப் பரவச நிலையை அடைந்து விடுகிறேன்.

நான் பிறந்த தினத்தை வாழ்த்துகிறேன். இங்கு-இந்த மண்ணுலகில்- நாம் எத்தனையோ அன்பையும் தயையும் பெற்றுவிட்டேன். பூரணப் பிரேமையாகிய எது என்னைப் படைத்ததோ, அது என்னுடைய நற்செயல்கள், கெட்ட செயல்கள் சகலத்தையும் காத்திருக்கிறது. நான் யார்?? எப்போதுமே அவன் கையிலுள்ள ஒரு கருவி என்பதைத் தவிர நான் யார்?? அவனுடைய பணிக்காகத் தானே நான் எனது சகலத்தையும்- என் அன்பு மனிதர்களை, என் இன்பத்தை, என் வாழ்வை -நீத்துவிட்டேன்!நான் பிறந்திருக்கிறேன்! அவன் என்னோடு விளையாடுகிற அன்பன். நான் அவனுடைய விளையாட்டுத் தோழன். இந்தச் சராசரத்தில் அர்த்தமோ அறிவோ எதுவும் கிடையாது. எந்த அறிவால் அவனைக் கட்ட முடியும்! லீலை செய்கிற அவன் ஒருவனே இத்தனை கண்ணீராகவும் சிரிப்புக்களாகவும் விளையாடுகிறான்.

இது ரொம்ப வேடிக்கையான உலகம். இதில் ரொம்ப ரொம்ப வேடிக்கையானவன் அவனே. ஆதி அந்தமற்ற அன்பனாகிய அவனை விட வேடிக்கையை நீங்கள் காண முடியாது. ஜன சமுதாயம் எல்லாம் இந்தப் பரந்த மைதானமாகிய உலகத்தில் சகோதரர்களாக, தோழர்களாக விளையாடுவதற்காக விடப்பட்ட கும்மாளிக் குழந்தைகளின் சங்கமே அல்லவா? இதில் யாரைப் புகழ்வது? யாரைப் பழிப்பது? எல்லாமே அவனது லீலை அல்லவா? விளக்கம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவனை எப்படி விளக்க இயலும்?? அவனுக்கு புத்தி கிடையாது; அறிவுமுறைகளும் கிடையாது. நமக்குச் சின்னஞ்சிறிய புத்தியையும் அறிவுமுறைகளையும் தந்து அவன் நம்மை முட்டாள் ஆக்குகிறான். ஆனால் இப்போது நான் முட்டாளாக மாட்டேன். இனி அவன் என்னைத் தூங்கு மூஞ்சியாகக் காண மாட்டான். ஏதோ ஓரிரு விஷயங்கள் கற்றிருக்கிறேன்.

அறிவுக்கும் படிப்புக்கும் பேச்சுக்கும் அப்பால்-அப்பாலுக்கும் அப்பால்--அன்பு என்ற உணர்ச்சியும், "அன்பன்" என்ற உணர்ச்சியும் இருக்கின்றன. தோழா, வா! கிண்ணத்தை நிரப்பு; இந்த அன்பால் நாம் போதை கொள்வோம்.''


[நன்றி : ’அறிவுக்கனலே அருட்புனலே’ ரா. கணபதி, இராமகிருஷ்ணாமடம், சென்னை; பக்கங்கள் 698-700]


அன்புக் கிண்ணத்தை வழிய வழிய நிரப்பி உட்கொண்டு தெய்வ போதை பெற்ற விவேகாநந்தரே தம்மை ஓரிரு விஷயங்கள் மட்டுமே கற்றிருப்பதாய்ச் சொல்லும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்??


இன்றைய கடினமான வாழ்க்கையில் சாதாரணமாய் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் செலுத்தும் அன்பே மறைந்து கொண்டு வருகிறது. அந்த அன்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தால் அதிலிருந்து மனம் மெல்ல மெல்ல ஆசைகள் ஒழிந்து எண்ணங்கள் ஒழிந்து உணர்வுகள் மறைந்து அன்பு பெருக ஆரம்பிக்கும். அத்தகையதொரு அன்பு என்னிடம் மட்டுமில்லாமல் இந்தப் பரந்த உலகின் மாந்தர் அனைவரிடமும் துளிர்க்கப் பிரார்த்திக்கிறேன்.

அதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். முதலில் நம் குடும்பம் என்று ஆரம்பிக்கும் இந்த அன்பு நாளாவட்டத்தில் விரிவடைந்து மற்ற உயிர்களையும் தன்னை உயிராகத் தெரிவித்துக்கொண்டு கொண்டாடிக் குதூகலிக்க வைக்கும்.


பின்னர் இதுவே மேலும் விரிந்து குரு பக்தி/அன்பு, ஈசனிடம் பக்தி/அன்பு என்று போய் இன்னும் மேலே இன்னும் மேலே என்று போய்க் கடைசியில் இரண்டும் ஒன்றாய்க் கலந்து தன்னையும் மறந்துவிடும்.

அத்தகையதொரு அன்புப் பிரவாகம் அனைவரிடத்திலும் சுரக்கப் பிரார்த்தித்துக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

------------------------------------------------------------------------
நன்றி நவிலல்

கீதா மேடம், இறைவன் என்றென்றும் எழுதுவதில் உங்களுக்குள்ள ஆர்வத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ளட்டும். தங்களுடைய "எண்ணங்கள்" இன்று போல் என்றும் அட்சயப் பாத்திரமாய் நல்ல விஷயங்களை உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கட்டும். சூரியனின் பல்வேறு நிலைகளில் வானம் பல வேறு வர்ணங்களை அள்ளித் தெளித்து நம் மனங்களை கொள்ளை கொள்வது போல் உங்களது எண்ணங்களும் பல ரசங்களையும் அள்ளித் தெளிக்கட்டும்.

Madam, what is the secret of your energy ? :))

என்னைப் போன்றவர்களுக்கு -இன்று இல்லை நாளை-ஏதாவது சந்தேகம் என்றால் ‘கீதா மேடம் கண்டிப்பாக இதை பற்றி எழுதியிருப்பார்கள், பார்ப்போம்’ என்ற எண்ணத்தோடு நீங்கள் பதிந்து வைத்திருக்கும் ”எண்ணங்களை” தேடி வருவோம். உங்கள் சேவை வாசகர்க்கு தேவை ! [நானும் தொண்டன் தானே :))]

”இப்போ யாரை எடுத்தாலும் அவங்க சொல்றது ரொம்ப பிசி , நேரமேகிடைக்கலைன்னுதான். அதுவும் இப்போ உள்ள தலைமுறைக்கு எல்லாமே பிசிதான். அவங்களுக்கு தொலைபேசியில் பேசி சொந்தங்களுடனோ, வீட்டுப் பெரியவங்களுடனோ நலம் விசாரிக்கக் கூட முடியாமல் பிசி....

என்றெல்லாம் 'பிசி' என்பவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை படித்திருக்கிறோம். சொல்லிக் கொள்ளாமலே பிசியாக எப்போதும் இருக்கும் நீங்கள் பல குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே செய்து வரும் எழுத்துலக சேவைக்கு வாசகர்கள் கடமைப் பட்டவர்கள். இதனிடையே கபீர் வலைப்பூவிற்கும் எழுத நேரம் ஒதுக்கி இதனை சிறப்பித்திருக்கிறீர்கள். பணிவான வணக்கங்களுடன்,மிக்க நன்றி

தங்கள் குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

அவரவருக்கு உள்ளபடி ஈசனருள்

$
0
0
யாரை எங்கே
வைப்பது என்று
யாருக்கும் தெரியலே
அண்டங் காக்கைக்கும்
குயில்களுக்கும்
பேதம் புரியலே!
பேதம் புரியலே !!

பழைய திரைப்பாடலின் ஆரம்ப வரிகள் இது. ஆள் மாறாட்டத்தால் சிறையில் சிக்கி கதாநாயகன் பாடுவது போல் கதையில் சொல்லப்பட்டாலும் இந்த முரண்பாட்டை வாழ்க்கையிலும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.

அருமையான திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதில்லை. குடத்திலிட்ட விளக்கு போல அவர்கள் யாராலும் அறியப்படாமல் மறைந்து போகிறார்கள். மிக சாதாரணமானவர்கள் மேடைகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். மேலே முன்னேற போட்டிகள் அதிகம். திறமையை விட சாமர்த்தியம் தேவை. அதுவாவது பரவாயில்லை. ஏதோ அதிர்ஷ்டம் இல்லை, அவர்கள் கேட்டுக் கொண்டு வந்தது அவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம். அதைவிட வருத்தமளிக்கும் காட்சிகளும் அவனுடைய நாடகத்தில் உண்டு.

ஒருவருடைய தகுதிக்கு மதிப்பளிக்காது தகுதி இல்லாதவர்கள் அவர்கள் மேலமர்ந்து ஆட்டிப் படைப்பதும் இன்று சர்வ சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. பலமாதங்கள்- ஏன் வருடங்கள்- கடினமான தேர்வுகள் எழுதி நாட்டு நிர்வாகத்தில் பயிற்சி பெற்று வரும் நேர்மையான உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளூர் எம். எல். ஏக்களின் அல்லது அரசியல் புள்ளிகளின் ஏளனப் பேச்சுகளையும் மிரட்டல்களையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பலருக்கு மன அழுத்தம் அதிகமாகி பல்விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். அம்மாதிரி சமயங்களில் அவர்களுக்கு தாம் மேற்கொண்ட பணியின் மீதே ஒரு வெறுப்பு ஏற்படும். பலர் தம் பொறுப்பைத் துறந்தும் சென்று விடுவதாகக் கேள்விப்படுகிறோம்.

சரி, அரசாங்கம்தான் அப்படி, தனியார் நிறுவனங்களில் எப்படி? அங்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. நிறுவனத்தை கட்டி வளர்த்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறும்போது புதுமைகளை புகுத்துவோம் என்ற பெயரில் திறமையான விசுவாசம் மிக்க நிர்வாகிகளெல்லாம் புறக்கணிப்படுகின்றனர். அவர்களது அனுபவத்தை அணுகுமுறையை ''Old fashioned" என்று கேலி பேசி புதிதாக வெளிநாட்டு பட்டங்களுடன் வந்திறங்கும் இளைஞர்களுக்கு அதுவரை கேட்டிராத சம்பளங்களை கொடுத்து சாதனைகளை படைக்க முற்படுகின்றனர். அந்த ’பழமை’வாதிகளின் நிலையும் மேலே குறிப்பிட்ட திரைப்படப் பாடலை நினைவுபடுத்துகிறது

போகட்டும், கலையுலகம், எழுத்துலகம் போன்றவற்றையாவது இந்த முரண்பாடு விட்டு வைத்திருக்கிறதா ? இல்லை என்பதுதான் விடையாக இருக்கும். எல்லாத் துறையிலும் உதாரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இறைவனுக்கே குயிலுக்கும் காக்கைக்கும் பேதம் புரியவில்லையா !!

சிவபோகசாரமோ அப்படி ஒரு கூற்றை ஒப்புக் கொள்வதில்லை

இன்ன வினை இன்ன தலத்தில் இன்ன பொழுது இன்னபடி
இன்னதனால் எய்தும் என அறிந்தே – அன்னவினை
அன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால்
பின்ன(ம்) அறக் கூட்டும் பிரான்
.

ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக சுவாமிகளின் கருத்துபடி எல்லாமே முன் கூட்டியே திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. . அப்படியானால் மனிதர்களுடைய ’நேர்மை வெல்லும்’ ’உழைப்பு உயர்வு தரும்’ என்ற கூற்றுகளெல்லாம் பொய்யாக்குவது போல் தெய்வம் ஏன் நடந்து கொள்கிறது ?

தெய்வமா நடந்து கொள்கிறது, இது நமக்கு நாமே முடிந்து கொண்ட சிக்கல் என்று கபீர்தாஸர் சொல்கிறார்

अपने उरझै उरुझिया, दीखै सब संसार ।
अपने सुरझै सुरझिया, यह गुरु ज्ञान विचार ॥


தானே போட்ட முடிச்சு, தன்னைப் பிணைக்குது பூமியிலே
தானே பிரிக்கவும் முடியும்,குருமொழி ஞானம் பற்றிடினே


மாற்று:
சிக்கலை முடிந்தவ ரவரே,சம்சார சிக்கலில் தவிப்பவரே
சிக்கலை அவிழ்பவ ரவரே,ஐயனுரை கேட்டு உய்பவரே


ஐயன் உரை அல்லது குருமொழி என்பது என்ன என்பதை புரிந்து கொண்டு மனம் அவ்வழியில் நின்றால் வாழ்க்கையின் சிக்கல்கள் தாமே தீர்ந்து விடும் என்று கபீர்தாஸரின் தீர்ப்பு. இதுவும் மிகப் பொதுப்படையாக அல்லவோ இருக்கிறது! சம்சார சிக்கல்கள் யாவற்றிற்கும் நாமே காரணம் என்னும் வகையில் தானே இவரும் சொல்கிறார். குருமொழி என்று எதைக் கொள்வது?

எல்லா ஞானிகளும் ஏற்றுக் கொண்ட ஆன்மீக வழி சொல்வது :
‘வெளிப்பக்கமாக ஓடும் சித்தத்தை உள்முகமாகத் திருப்பு. நடப்பதெல்லாம் அவன் சித்தமே’. ’நீ வெறும் சாட்சியாக இரு’ ‘கடவுளை நோக்கி நீ ஓரடி வைத்தால் அவன் உன்னை நோக்கி பத்தடி வருகிறான்’ என்பன சில.

ஆனால் நாம் மேலே காணும் முரண்பாடு பல நல்லவர்களின் மனதை வாட்டுவதாகவே இருக்கிறதே. கடவுளை நம்பினாலும் ஏதும் தீர்வு தெரிவது இல்லையே. இதுதான் சிக்கல். இதை பிரிப்பது எப்படி ? நான் கண்ட இரண்டு அனுபவங்களால் விடை கிடைக்கிறதா பார்ப்போம்.

ஒரு புதிய இடத்தில் தொழிற்சாலை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒவ்வொரு துறைக்கும் அதற்கான பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் கட்டுமானப் பணி மேற்பார்வை பார்த்தவர் ஒரு பன்முக வித்தகர். தேவையென்றால் எந்திர பராமரிப்பு, கணக்கெழுதுவது, எங்கே எது கிடைக்கும் என்று தெரிந்து தேவைப்பட்டவற்றை உடனுக்குடன் வரவழைப்பது கொடுப்பது என எதைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்பவர். அதிகம் படித்திருக்காவிட்டாலும் ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.

இந்நிலையில் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர் திடீரென்று வேறு வேலை கிடைத்து சென்று விட்டார். சற்றே தனது சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்தால் தன்னுடைய பிற பொறுப்புகளுக்கு பங்கம் இல்லாதவாறு தானே அதனையும் கவனித்துக் கொள்வதாக பலமுறை அவ்வித்தகர் கூறி வந்தார். எனக்கும், இவருக்கு இருநூற்று ஐம்பது ரூபாய்கள் அதிகம் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கணக்கரின் சம்பளத்தில் ரூ 750 மிச்சம் ஆகுமே என்று தோன்றியது. எங்கள் இயக்குனரின் அனுமதி பெற மூன்று முறை முயற்சித்தும் அவர் அதை ஆதரிக்கவில்லை.’செலவு பற்றி கவலை வேண்டாம் வேறு ஒருவரை அமர்த்திக் கொள்ளுங்கள்’ என்றே பதில் வந்தது. இதனால் நம் வித்தகருக்கு பெரும் மனவருத்தம், கோபம் எல்லாம் வந்தது. நிர்வாகம் சரியான முறையில் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றும் தன் திறமைக்கேற்ற ஊதியம் இல்லை என்றும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். பல நாட்களுக்குப் பிறகு தனிமையில் இயக்குனரிடம் அதற்கானக் காரணத்தைக் கேட்டேன். அவர் சொன்னது "We should not lead a good person in to his area of weakness "

ஆம். வித்தகர் பண விஷயத்தில் சற்று பலவீனமானவர்தாம். அவ்வப்போது நிர்வாகப் பணத்தை பல தனிப்பட்ட விஷயங்களுக்காக நிர்வாகக் காரணம் காட்டி எடுத்து பயன்படுத்துவது, வாய்ப்பு இருந்தால் பேருந்தில் சென்று ஆட்டோவில் சென்றதாக கணக்கெழுதுவது இத்யாதி பரவலாக அறியப்பட்ட விஷயம்தான். ஆனால் என் எண்ணப்படி நல்லக் கண்காணிப்பில் அவரைக் கட்டுக்குள் வைக்க இயலும் என்று நம்பினேன். மாறாக இயக்குனரோ அவர் மேல் இருந்த அன்பினால் அவர் தவறிழைப்பதற்கான வழியில் கூட அவரை ஈடுபடுத்த விரும்பவில்லை. அதன் மூலம் எனக்கும் வித்தகருக்கும் இடையே பின்னால் எழுந்திருக்ககூடிய பலப் பிரச்சனைகளையும் தடுத்துவிட்டார். அதன் காரணமாக சம்பந்தப்பட்டவர் அதிருப்தி அடைந்திருப்பினும் இயக்குனர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. குழந்தை அழுது அடம் பிடித்தாலும் அதன் அன்னை ஒவ்வாதவற்றை கொடுக்க மறுப்பது குழந்தை மேல் உள்ள அன்பினால்தானே.

பல வருடங்கள் கழிந்தன. இப்போது வேறொரு நிறுவனம், வேறொரு தலைமை. நானும் எங்கள் நிதித்துறை செயலரும் சேர்மனோடு பல திட்டங்கள் பற்றி பேசி முடித்த பின், விற்பனைத்துறைப் பற்றிய சில புள்ளி விவரங்களை செயலர் அவரிடம் சமர்ப்பித்தார். பேச்சு வாக்கில் அவர்களின் செயல்முறை பற்றி நிதித்துறையின் அதிருப்தியை தெரிவித்தார். பல கோடிகள் புழங்கும் துறையில் இன்னும் சிறப்பான தணிக்கை முறையின் அவசியம் பற்றியும் கட்டுபாடுகள் அனுசரிக்க வேண்டிய அவசியத்தையும் அவரிடம் பரிந்துரைத்தார்.

புகைபிடித்தபடி யே எவ்வித சலனமும் இன்றி கேட்டுக் கொண்டிருந்த சேர்மன் ஓரிரு நிமிடங்கள் மவுனம் காத்தார். பின்னர் சிகரெட்டின் சாம்பலை ஆஷ்ட்ரேயுள் விரலால் தட்டியபடியே அமைதியாக சொன்னதன் சாராம்சம். “ They have submitted a budget and promised certain results within a time frame..... I don't like to restrain anyone nor police around.... May be they are experimenting with certain issues.... If we frequently question their decisions they may lose interest and later either blame you or me for not delivering the results. Any developmental activity needs certain degree of freedom.... It has some cost, I fully understand"

பேச்சினிடையே அவரது அணுகுமுறையை இன்னொரு சொற்றொடரால் குறிப்பிட்டார். 'Give them a long rope, they will hang themselves"

அவர் முறைகேடுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டவருக்கு தேவைப்படும் அதிகாரங்களும் முடிவெடுக்கும் உரிமையும் அவர்களிடமே இருக்கவேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். முறைகேடுகளால் ஒருவேளை நஷ்டங்கள் வரினும் அதனால் நிர்வாகத்திற்கோ பிற பணியாளர்களுக்கோ பாதிப்பு இருக்காது என்பதையும் சொல்லாமல் சொல்லினார்.

கடவுளின் அணுகு முறையும் இதுதானோ ?

இரு நிர்வாகத் தலைமையிடமும் கடவுளின் இருவேறு நிலைபாடுகளை புரிந்து கொள்ள முடிந்தது. முதலாவது தனக்கு வேண்டியவர்கள்வழி தவறுவதை அவன் விரும்புவதில்லை. அதனாலேயே நம் விருப்பங்களுக்கு செவிசாய்க்காமல்அவன் நமக்கு எது ஆன்மீக ரீதியாக நன்மை பயக்குமோ நம்மை அந்த சூழ்நிலையில் வைக்கிறான். பணமும் புகழும் நம் (ஆன்மீக) முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பது அவன் சித்தமானால் அதற்காக ஏங்குவதும் பொருமுவதும் அர்த்தமற்ற செயலாகிவிடும். ’பன்முக வித்தகர்’ போல நாம்தான் சிக்கலை முடிந்து கொள்கிறோம். அதே சமயம் அவனது முடிவை எவ்வளவு விரைவாக நாம் ஏற்றுக் கொள்வோமோ அவ்வளவு விரைவாக மனம் அமைதியடைகிறது. மன அமைதியுடன் நாம் ஆற்றும் கடமைகள் சிறப்பாக முடிகின்றன.

இரண்டாவது, சிலரை தகுதியற்றவர்கள் நாம் கருதினாலும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தில் தான் குறுக்கிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை மேற்கொள்கிறான். அவர்களின் வழிமுறைகளின் நன்மை தீமைகளை அவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் அவன் பாதிக்கப்படப் போவதில்லை. Give a long rope என்பது போல விட்டுப் பிடிக்கிறான். அதிகாரம் வந்ததும் தலைகால் புரியாது ஆட்டம் போடும் அறிவிலிகளை யாவரும் வேடிக்கை பார்ப்பது போல் அவனும் வேடிக்கையை ரசிக்கிறான். அவனுக்குத் தெரியும் கடைசியில் இவர்களும் தன்னிடமே ஏதோ ஒரு பிறவியில் சரணடைய வேண்டியவர்கள் என்று.

ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. இப்போது நமக்களிக்கப்பட்ட திறமைகளுக்கு வடிகால் எது? இவை விழலுக்கு நீர் இறைப்பது போலவா? என் திறமைகளால் எனக்கே நன்மை இல்லாவிட்டால் அவை ஏன் எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்?

சித்த புருஷர்களின் திறமை, அஷ்டமா சித்திகளை தம் வசப்படுத்தி இருப்பது. அதை மாயையின் சக்தி, அவற்றை உலக நன்மைக்கல்லாமல் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தலாகாது என்ற கட்டுபாடுடன் ஞானிகள் வாழ்ந்து காட்டியுள்ளனர். அது போலவே நம் ’திறமை’களையும் முறையான காரணமின்றி நாம் வெளிப்படுத்த வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே இறைவன் நம்மை பயன் படுத்திக் கொள்கிறான்.

திறமை என்பது ஒருவகையில் நம்முடைய மனதினுடைய ஆற்றல்தான். ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது ” நரேன் எந்தத் துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அநதத் துறையின் மிக உன்னதமான உயரத்திற்கு உயர்ந்திருப்பான். அவன் ஆன்மீகத்திற்கு கிடைத்தது நம் அதிர்ஷ்டம்” என்று சொன்னார்.

மன ஆற்றல் பற்றி ரமணரின் கண்ணோட்டத்தை ரமணாசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்வோம்.
கோசாலைக்கு போகும் வழியில் கெஸ்ட் ரூம் வாசலில் மிக அழகாக மயில் கோலம் ஒன்று போடப்பட்டிருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு அவ்வழியாக பகவான் போகும் போது ஒரு மயில் அந்த கோலத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதனெதிரே பொரி கடலை டப்பாவை வைத்தாலும் அதை சாப்பிடாமல் கோலத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. சலனமற்ற அதன் பார்வையை கண்ட பகவான்” என்னடா! நமக்கு போட்டியா இன்னொருத்தன் வந்து விட்டானா என்று பார்க்கிறாயா?” என்று கேட்டார். இப்படிக் கேட்டவுடனே டொக் டொக்கென்று டப்பாவிலுள்ள கடலையைக் கொத்தியது.

அந்த கோலத்தைப் பார்த்த பகவான் “இவர்களுக்கெல்லாம் ஆத்ம வித்தை மிகச்சுலபம். ஏனென்றால் இவர்களின் புத்தி நுட்பம் அவ்வளவு சூட்சுமமாயிருக்கிறது. ஆனால் அதற்கு போக மாட்டாளே” என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

”இன்று இந்த மயில் பிரமித்து நிற்குமளவிற்கு போட்ட கோலத்தை, நாளைக்கு இன்னொரு மயில் அதைப் பார்த்து ஆடுமளவிற்குப் போட வேண்டுமென்ற புத்தி அதிலேயே ஈடுப்படுமேயன்றி உள்முகமாகாது

எவ்வளவு நிஜம். பெரும்பாலும் நமக்குள்ள திறமைகளைப் பற்றி நாமே பெரிதாக நினைத்துக் கொள்வதால் ரமணர் சொன்னது போல் அதிலேயே மேன்மேலும் புத்தி போகும். அது வெளிமுகமான போக்கு. இதுவே நாம் இவ்வுலகில் பின்னிக் கொள்ளும் சிக்கல். லௌகீக லாபங்களைப் பற்றியது. நம் கணிப்புகள் எவ்வளவு சரியாக இருப்பினும், நம் பார்வையில் நியாயமாக இருப்பினும் இறைவனுக்கு அதன் எல்லை தெரியும். அது எப்போதும் நம் நலன் கருதியே இருக்கும். பகவான் ரமணர் சொன்னது போல் மனதை உள்முகமாக்கினால் அந்த உண்மை புரியும். இதையும் ஸ்ரீலஸ்ரீ குரு ஞானசம்பந்த தேசிகர் விளக்குகிறார்

அவரவருக்(கு) உள்ளபடி ஈசன் அருளாலே
அவரவரைக் கொண்டு இயற்று மானால் – அவரவரை
நல்லார் பொல்லார் என்று நாடுவது என் நெஞ்சமே
எல்லாம் சிவன் செயல் என்று எண்.

(நாடுவது என் நெஞ்சமே = நினைப்பதும் ஏன் நெஞ்சமே)

நமக்கென்று உலகத்தில் சாதிக்க வேண்டியது ஒன்று இல்லாத பொழுது யார் நல்லவர், யார் பொல்லாதவர்? அவன்தானே யாவற்றையும் முன்னின்று நடத்துகிறான் என்றிருப்பது உள்முகம் ஆகும்.

நமது சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் கடவுளின் திசையில் செலுத்தினால் அதுவே அவன் நம்மிடம் எதிர்பார்க்கும் உழைப்பு. நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் பொழுது மறைமுகமாக இறைவன் நம்மை ”என் பக்கம் வா, என் பக்கம் வா” என்று அழைக்கிறான்.
அரவிந்தருக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

அவன்திருவுள்ளத்தை புரிந்து கொள்ளும் நிலை எனக்கு இருக்கவில்லை. "எனக்கு ஏன் இப்படி நேர வேண்டும்” என்று என் இதயம் ஓலமிட்டது. இந்நாட்டிற்க்காகவும் இம்மக்களுக்காகவும் நான் மேற்கொண்டிருக்கும் இக்கடமை முடியும் வரை எனக்கு உன்பாதுகாப்பு உண்டென்று நினைத்தேனே.அப்படியிருக்க இப்பொழுது ஒரு குற்றசாட்டுடன் எதற்காக அடைக்கப்பட்டு இருக்கிறேன்” என்று என் உள்ளம் புலம்பியது......
.....நீ அதிலே தொடர்வது என்சங்கல்பத்தில் இல்லை. உனக்கு வேறுவிதமான கடமைகள் உள்ளன. அதற்காக உன்னை தயார் செய்யவே இங்கே வரவழைத்துள்ளேன்' என்று சொல்வதாக உணர்ந்தேன்

அதை அரவிந்தர் புரிந்து கொண்டதால் சிக்கலில் இருந்து வெளிவந்தார். ஆனால் நமக்கு அந்த பக்குவம் இல்லாத போது சுய பச்சாதாபம், கோபம், பொறாமை போன்றவற்றால் சிக்கலை மேன்மேலும் சிக்காகிக் கொள்கிறோம். தீர்வு கிடைப்பதில்லை. இதுவே கரண மயக்கம்.

எல்லாம் உனது செயலென்று அறிந்தும் என(து) உளத்தில்
பொல்லாத சங்கற்பம் ஏன் வருமோ புர(ம்) மூன்றெரிக்க
வல்லாய் கமலையின் ஞானப்ரகாச வரத இது
சொல்லாய் கரண மயக்கமன்றோ என் தொழில் அல்லவே.


கரண மயக்கத்தால் ஏற்படும் பொல்லாத சங்கற்பங்கள் எதுவும் நமக்கான வழியல்ல. இதுவே குருமொழி, செம்மொழி, சிக்கல் களைந்திடும் நல்வழி. கபீர்தாஸ் சொல்வது போல் சிக்கலை பிரிக்க வேண்டுமானால் குருவின் வழி புரிந்து கொள்ள வேண்டும். அது நம் கையிலேதான் இருக்கிறது.

--------------------------------

அறிவிப்பு :சிறப்பு இடுககைகளை பல விருந்தினர்கள் நேரமின்மை காரணமாக அனுப்ப இயலாமல் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவைகளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

அவர்கள் மட்டுமல்லாது இதர பதிவர்களும் வாசகர்களும் எப்போது வேண்டுமானாலும் கபீரின் கருத்துகளை மையமாக வைத்து கட்டுரைகளை அனுப்பி யாவருடனும் பகிர்ந்து மகிழலாம். This is an open invitation.

வலைப்பூ ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

சித்தமிசை இல்லை வேறு தெய்வம்

$
0
0
செங்கோட்டை சீமையிலே குடும்பப் பெண்கள் மத்தியிலே கலந்து விட்டிருந்த கும்மிப்பாட்டு கோலாட்டப் பாட்டு, பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போமா?

கோலாட்டப்பாட்டு :

ஆதியிலே ஒன்றானாய் கோலே அப்புறம் இரண்டானாய் கோலே
வேதமும் அறியாக் கோலே, வேதாந்தக் கோலே
...........
நத்தையாய் புழுவாய் நண்டாய் நரியாய் பரியாய் வண்டாய்
எத்தனை ஜென்மமோ கொண்டாய் என்னத்தைக் கண்டாய்

காசி ராமேசுவரம் சென்றாய் காகம் போல் முழுகியே நின்றாய்
உன்னாசை போச்சுதோ மூடா என்றால் ஆச்சுதோ நன்றாய்

போற்றியார் அடிபணிந்து பந்துக்களும் வீடும் விட்டு
கூற்றுவன் அழைக்கும் போது கூட வராது

புருஷன் பெண்டாட்டி பொய்யே புத்திரன் பிதாவும் பொய்யே
பெருமை சிறுமை பொய்யே பிரம்மமே மெய்யே

ஆகாவழிக்கு அதிதூரம் ஆத்ம அனாத்ம விசாரம்
தொகுத்துப் பார்க்க இது நேரம் தோன்றுமே சாரம்


----------------------------------------------
கும்மிப்பாட்டு
கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர ஸம்ஸார சாகரத்தில்
ஜென்மக் கடலை கடத்தினவர் பாதம்
சிந்தித்து கும்மியடியுங்கடி தினம்
வந்தித்து கும்மியடியுங்கடி


ஐந்து தத்வமும் ஒன்றாய் கூடி
ஒரு ஆள்ரூபம் அறிவுமில்லை
ஐந்து பூத விகாரத்தினுள்
ஸ்வபிரகாசத்தை
மேவியே கும்மிடியுங்கடி
மனம் தாவியே கும்மியடியுங்கடி

பாவ அபாவத்தை விட்டு அகன்று
பரிபூரணப் பால்குடித்து ஆனந்தமாய்
தேவாதிகளுக்கும் தெரியாத துரீயத்தை
தெரிந்து கும்மியடியுங்கடி
மனம் பூரித்து கும்மியடியுங்கடி

அறிவிலே அறிவால் அறிவாய்
அறிந்து அதை அறிவாய்
அறிவு மாத்திரம் ஆக இருந்ததை
அறிந்து கும்மியடியுங்கடி
தன்னை அறிந்து கும்மியடியுங்கடி

---------------------------------

எப்படி இருக்கிறது இந்த அத்வைத ரஸம் ? அது ஆவுடையக்காள் வடித்து வைத்திருக்கும் ஞானரஸம்.

மகாராஷ்ட்ரத்தில் ஜனாபாய் பக்தி ரஸத்தைநெல் இடிக்கும் போதும், மாவரைக்கும் போதும் களைப்பைக் களைய பெண்களுக்கு மத்தியில் எளிமையானப் பாடல்களாய் சொல்லிக் கொடுத்தார்.

ஆவுடையக்காளோ ஓய்வு நேர விளையாட்டாய் கும்மிப்பாட்டிலும் கோலாட்டப் பாட்டிலும் ஞானக் குறவஞ்சியாயும் பெண்கள் மூலமாய் வீட்டில் அனைவருக்கும் மிக உயர்ந்த அத்வைத கருத்துகளை எளிய உதாரணங்களால் புரிய வைத்த பெண் ஞானி. அவரை இன்னொரு ஔவையார் என்றும் குறிப்பிடுவதுண்டு.

அறியா பருவத்திலே திருமணம் நடந்து கணவனையும் இழந்த அபாக்கியவதி. அன்றைய நடைமுறைப்படி கைம்பெண்ணாக்கப்பட்டு பலத்தக் கட்டுபாடுகளுடன் வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கப்பட்டிருந்த அவலநிலை. அதிகாலை ஊர் விழிக்கும் முன்னே எழுந்து ஆற்றங்கரைக்கரைக்கு சென்று நித்திய கடன்களை கழித்து பொழுது புலரும் முன்னே வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அவளுக்கு அனுமதிக்கப்பட்ட வெளி உலகத் தொடர்பு அவ்வளவு தான். பல பூர்வ ஜென்ம தவங்களால் அவள் மனது இறைவனுடைய அருளுக்காக ஏங்கியிருந்தது. தனக்கு வழிகாட்ட யாராவது குரு ஒருவர் கிடைக்கமாட்டாரா என்று தவித்திருந்தது.

ஒரு நாள் வழக்கம் போல் அதிகாலை இருட்டு நேரத்தில் ஆற்றின் படித்துறை அருகே கிடந்த ஒரு மாவிலைக் காம்பை எடுத்து பல் தேய்ப்பதற்காக வாயில் வைத்ததுமே ஒரு வினோதமான உணர்ச்சி தேகம் முழுவதும் வியாபித்தது. தேங்காய்க்குள் கழன்று கொண்ட கொப்பரை போலே தேகம் வேறு தான் வேறு என்ற எண்ணம் பலமாய் ஆட்கொண்டது. சற்று தூரத்தில் மரத்தடியே தியானத்தில் அமர்ந்திருந்த மகான் ஒருவரை கண்ணுற்று அவரது பாதத்தை அடைந்து சேவித்தார். அவரும் கருணை பொங்க அவளது தலை மேல் கைவைத்து “பிரம்மம் சத்யம்” என்ற சத்ய மொழியை சொல்லி அருள் பொழிந்தார். அக்கணமே ஆவுடையக்காளுக்கு சமாதி நிலை கூடியது.

ஸ்ரீதர அய்யாவாள் என அறியப்படும் அந்த மகான் பயன்படுத்திய மாவிலைக் காம்பின் மகிமையே ஆவுடையக்காளின் ஆன்மீகப் பயணத்தின் துவக்கமானது என்பர். வெங்கடேச குரு என்றும் சாந்த நரசிம்மர் என்றும் தவறாமல் ஒவ்வொரு பாடலிலும் குருவைப் பணிந்து போற்றும் அவருக்கு குரு அருளாலே வாணியின் அருளும் வந்தது.

படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஜனாபாயைப் போலவே அவ்வட்டார பேச்சு வழக்கிலே அத்வைத சித்தாந்தம் குற்றால அருவி போல் பாய்ந்து பெருகியது. ஞானிகளுக்கே உரிய கம்பீரத்துடன் அவர் வெளிப்படுத்திய கருத்துகள் அன்றைய சமுதாயத்தில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது.

ஆலையந்தோறும் அலைந்து திரிந்தது போரும் போரும்
மனதாலயம் தன்னில் அரனாரிருப்பதைப் பாரும் பாரும்
உன் தெய்வம் என்தெய்வம் என்று உழன்றதும் போரும் போரும்
தன்னுள் தெய்வம் என்றெண்ணி இருப்பதைப் பாரும் பாரும்
ஓதிப் படித்ததோர் மந்திர கர்மங்கங்களும் போரும் போரும்
புத்தி யுக்தி அனுபவத்தால் முக்தி கிடைத்ததைப் பாரும் பாரும்

இன்னொரு பாடலில்

அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே
தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே
தாமிரத்தே தெய்வமென்று ஸாதிப்பார் தரணியிலே
மிருத்யுவே தெய்வமென்று விழுவார் உலகினிலே
அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி
அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்


என்பதாக புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் பலப்பல வழிபாடுமுறைகளின் தன்மையை வரிசைப் படுத்துகிறார்.

தன்னை உணர்ந்தவனுக்கு தெய்வங்கள் தேவையில்லை என்பதில் கபீரும் உடன் படுகிறார். அவையெல்லாம் குரு அருள் சித்திக்கும் வரையில்தான் என்பதை அடிக்கடி சொல்வார். அப்படிச் சொல்லும் ஒரு ஈரடி

और देव नहीं चित्त बसै, मन गुरु चरण बसाय ।
स्वल्पाहार भोजन करु, तृष्णा दूर पराय ॥


சித்தமிசை இல்லை வேறு தெய்வம், சித்தம் நாடுவதோ குருசரணம்
சொற்பமாய் போனதே போசனம், பற்பல இச்சையும் போயின தூரம்


மனமோ குருவின் வசமாகிவிட்டது, சித்தத்தில் வேறு தெய்வங்கள் கிடையாது. உணவின் தேவையோ மிகசொற்பம், உலக விஷயங்களில் ஆர்வமும் குன்றி போனது என்று உரைக்கிறார் கபீர். குருவின் திருவடியில் மனம் ஈடுபாடு கொண்டதால் தனக்குக் கிடைத்த அனுபவத்தை சொல்லும் போது ஆவுடையக்காளும் கபீரின் மொழியை உறுதி செய்கிறார். அத்வைத மெய்ஞான ஆண்டி என்கிற பாடலிலிருந்து சில வரிகள் :

என் சொல்வேன் என் சொல்வேன் இவன் எங்கிருந்து வந்தாண்டி
இன்னம் இன்னம் ஜன்மம் எடுக்கவே என்றிருந்தேண்டி

ஆறு வைரியை அவன் அண்டவிடாமல் அடித்தாண்டி
தாறுமாறக்காரன் அவன் துரீய நிலையைத் தந்தாண்டி

காமக்ரோதாதிகளை காறுவாறு தொடுத்தாண்டி
தொண்ணூறாரு பேரை துண்டித்து போட்டு விட்டாண்டி

வெகுவான போகத்தை புசிக்கவே என்றிருந்தேண்டி
பார்வை ஒன்றினாலே போகத்தை மாற்றியே வைத்தாண்டி

பார்த்த இடமெல்லாம் பரிபூர்ணமாய் தோற்றி வைத்தாண்டி
வார்த்தைகளெதுவும் காணேன் மௌனமதாக்கி விட்டாண்டி


[காறுவாறு =காறுபாறு= கவனிப்பாயிருத்தல், மேற்பார்வை செய்தல்]

தொண்ணூறாரு பேரை துண்டித்து போட்டு விட்டாண்டி
36 பரதத்துவங்கள் (அகநிலை):ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):மண், தீ, நீர், காற்று, வெளி.
ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

(நன்றி : கௌமாரம்.காம்) ]


மெய்ஞானம் வாய்க்கப் பெற்றவருக்கு அதன் பின்னர் எதிலும் பிடிப்பு இருப்பதில்லையாம். கனவு கலைந்து எழுபவனுக்கு மீண்டும் கனவு பற்றிய கவலை உண்டோ ? திருப்புகழில் அருணகிரியாரும் இந்த உலக இச்சைகளை சூடான பொருட்களை கை உதறுவது போல் உதற விழைவதாக உரைக்கிறார். முப்பதும் (+)ஆறாறும் (6x6=36) (+)முப்பதும் வேறானஎன்னும் போது 96 தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட மோனநிலை அடைவது எப்போது என்று அவரும் குறிப்பிட்டிருக்கிறார்.

சுட்டது போல் ஆசை விட்டு உலக ஆசார
துக்கமிலா ஞான சுகம் மேவிச்
சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு
சுத்த நிராதார வெளி காண
மொட்டு அலர் வாரீச சக்ர சட் ஆதார
முட்டவு மீதேறி மதி மீதாய்
முப்பதும் ஆறாறு முப்பதும் வேறான
முத்திரையா மோன மடைவேனோ

............
அப்படி ஒரு மோன நிலையை தனக்குக் கொடுத்த குருவை எங்கிருந்து இவன் வந்தாண்டிஎன்று ஆச்சரியத்துடன் ஆவுடையக்காள் போற்றுகிறார். பார்வை ஒன்றினாலேயே போகத்திற்கான இச்சைகளை மாற்றி வைக்க வல்லவர் குரு என்பதையும் அவருடைய மெய்ஞான அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறோம்.

கபீர் குறிப்பிடும் உலக ஆசைகள் குறைவதையும் உணவின் மேல் பிடிப்பு இல்லாமல் போவதற்கும் இது தான் காரணம். ஆவுடையக்காளுக்கும் தேகப்பற்று நீங்கி விட்டது. ஆனால் இன்னமும் உயிர் அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்ற ஆச்சரியம். அந்த வினாவை தம் குருவிடமே வைக்கிறார்.

ஐயா ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழ வேண்டாமோ ?
தேகமிருந்த உளவு சொல்லும், நீர் தேசிகரே !

அம்மா ! ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழுமானால்
அஞ்ஞான ஜனங்களுக்கு யாராலே விமோசனமாம்?
சரீரமிருக்கிறது பலருக்கு உபகாரமன்றோ? என்று
காரணமூர்த்தி யுரைத்தார் கருணையுடன்;


பல்லாயிரக்கணக்கான ஜீவன்களுக்கு பல நூறு ஆண்டுகள் வழிகாட்ட வேண்டியவர் அல்லவா அவர் ! சுமார் முன்னூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றி பெண்களுக்கும் அத்வைதம் சித்திக்கும் என்பதை வாழ்ந்து காட்டியவர். ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாமரனுக்கும் புரியும் வகையில் வேதாந்த கருத்துகளை பாடி வைத்திருக்கிறார். மிக சரளமாக, பல விதமான எடுத்துக்காட்டுகளுடன் நகைச்சுவையாகவும் கருத்துகளை சொல்வதில் அவர் சமர்த்தராக இருந்தார்.

சிலவற்றை அடுத்த இடுகையில் காண்போம்.

அவரைப் பற்றிய மேலும் பல விவரங்களையும் பாரதியாரின் பாடல்களில் ஆவுடையக்காளின் தாக்கம் பற்றியும் நாஞ்சில் நாடன் அவர்களின் வலைப்பூவில்படிக்கலாம்.
Viewing all 59 articles
Browse latest View live