Quantcast
Channel: கபீரின் கனிமொழிகள்
Viewing all articles
Browse latest Browse all 59

சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை- 1

$
0
0
ஆசிரியர் அறிமுகம் :

இந்த இடுகையின் விருந்து ஆசிரியர் பலரும் மிக நன்கு அறிந்த ஒரு வலைப்பதிவாளர்.

அவரை நான் கபீரண்ணன்என்று அழைப்பது உண்டு. :))
அவருடைய வலைப்பூ கபீரின் கனிமொழிகள் வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர் என்பது மட்டுமல்ல, எழுதும் திறத்திலும் அவர் என்னை விட கைத்தேர்ந்தவர். எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி தீர்த்து விடுவார்.

தற்போது பழந் தமிழிலக்கியங்களில் திருமால் பற்றிக் காணப்படும் குறிப்புகளைத் தகுந்த ஆதாரங்களுடன் தனித்தனியாக பதிந்து வருகிறார்.

இவைகளினால் நம் இதிகாசகங்கள் எவ்வளவு தொன்மையானது என்பதும் இந்நாட்டு மக்களின் மனதில் எப்படி இரண்டறக் கலந்து உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. மிக நல்ல திறனாய்வு.

இயல்பான பேச்சு வழக்கைப் பயன்படுத்தி அதில் நகைச்சுவை இழையோடும் வகையில் கருத்துகளை வழங்கும் திறமைதான் அவருக்கு மிகப்பெரும் வாசகர் வட்டத்தைத் தேடித் தந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

தமிழ்மணம் நடத்திய சிறந்த ஆன்மீக இடுகைக்கான போட்டியில் பெரும்பாலோர் வாக்குகளைப் பெற்று பரிசைத் தட்டிச் செல்பவர் என்பதே அதற்கு சான்று.

அவருடைய வலைப்பூவின் பெயர் மாதவிப்பந்தல். (The cat is out of the bag !!!)இதைத் தவிர இவர் பங்கேற்கும் பிற வலைப்பூக்கள் முருகனருள், ஆச்சார்ய ஹ்ருதயம், அம்மன்பாட்டு. இவை நானறிந்தவை, அறியாதவை எவ்வளவோ ! :)

ஆம், அன்பர்களே, வெகுவான வாசகர்களின் அபிமானம் பெற்ற

கே.ஆர்.எஸ் என்னும் Kannabiran Ravishankar

இந்த சிறப்பு இடுகை வழங்குகிறார்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று உடனடியாக ஒரு இடுகையை தயாரித்து சிறப்பு ஆசிரியராக ஒரு பதிவு வழங்க கே.ஆர்.எஸ். முன்வந்திருப்பது கபீர் வலைப்பூவின் அதிருஷ்டம் . 2007 ஆம் வருடத்திலிருந்தே இவர் நடத்திவரும் புதிரா -புனிதமா கேள்வி பதில் பாணியில் இம்முறை கபீரை எடுத்துக் கொண்டிருக்கிறார். வாசகர்களுக்கு இது ஒரு வரவேற்கத் தக்க மாறுதலாக இருக்கும்.

அவருக்கு மனமார்ந்த நன்றி. இது வெறும் கேள்வி பதில் அல்ல, அவர் ஆசிரியர் மட்டும் அல்ல. இது ஒரு சின்ன போட்டி அதற்கு அவர் நடுவரும் கூட. போட்டி மற்றும் பரிசு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனி கே.ஆர். எஸ் பேசுவார்.

கபீர் என்பவர்...

கவிஞரா? ஆன்மீகவாதியா?
தத்துவச் செம்மலா? குடும்பத் தலைவரா?
இந்துவா? மூஸ்லீமா? சீக்கியரா?
சாஸ்திர விற்பன்னரா?
சுஃபியா? யோகியா? சித்தரா?
இப்படியெல்லாம் அடக்கத் தான் முடியுமா?

கபீரின் தத்துவங்களைக் கபீரன்பன் தொடர்ந்து இந்த வலைப்பூவில் சொல்லத் தான் போகிறார்!
கபீரின் தோஹா என்னும் ஈரடி இந்திக் குறள் தொடர்ந்து இந்தப் பதிவில் பரிமளிக்கத் தான் போகிறது!
ஆனால் கபீர் யார்? என்று அறிந்து வைத்துக் கொள்வதும் ஒரு சுகம்! கபீர் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதில் ஒரு சுகம்!
ஏனென்றால் கபீர் மகான் என்பதை விட மனிதர், நம்மைப் போல! அவரால் முடிந்தால், நம்மாலும் முடியாதா என்ன? வாருங்கள் எட்டித் தான் பார்ப்போம்!


Lives of great men all remind us
We can make our lives sublime
And, departing, leave behind us
Footprints on the sands of time.

புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு!

முதன் முதலாக மாதவிப் பந்தல் அல்லாத ஒரு வெளிப்பூவில்! நான் மிக விரும்பும் வலைப்பூவில்! இதோ!

புதிரா? புனிதமா?? = கபீர்!


1

கபீரைப் போலவே இவரும் ஒரு நெசவாளி ?யார் இவர்?

அ) திருநீலகண்டர்

ஆ) நேச நாயனார்

இ) அமர்நீதி நாயனார்

ஈ) தண்டி அடிகள்

2

கபீரின் அருள் கவிதைகள், ஒரு மத நூலில் கூட ஏறி விட்டன! சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில்! இதைத் தொகுத்தது யார்?

அ) குரு ராம் தேவ்

ஆ) குரு கோவிந்த் சிங்

இ) குரு நானக்

ஈ) குரு அர்ஜூன் தேவ்

3

கபீரின் குருவாகக் கருதப்படுபவர், இராமானுச வழியில் வந்த ஒரு மகான்! சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்?

அ) துளசி தாசர்

ஆ) ஜெய தேவர்

இ) இராமனந்த தீர்த்தர்

ஈ) துக்கா ராம்

4

ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்

என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி
"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;"
என்று துவங்கும் ஒரு தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி அமைந்திருக்கிறது. எழுதியது யார் ?

அ) சேக்கிழார்


ஆ) நம்மாழ்வார்


இ) பாரதியார்


ஈ) கம்பர்


5

கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள்! தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள்! அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

அ) சிறப்பானவரின் பக்தர்

ஆ)கடவுளின் அடிமை

இ) சிறப்பானவரின் அடிமை

ஈ) கடவுளின் காதலர்

6

கபீரின் சொந்த ஊர் எது?

அ) காசி

ஆ) கயா

இ) கோரக்பூர்

ஈ) கோலாப்பூர்

7

கபீரின் சமாதி எங்கு உள்ளது?

இவ்வளவு பெரிய மகானின் உடல் மீது இந்து முஸ்லீம் பிரச்சனை எழ, துணியை விலக்கிய போது, ரோஜாக்கள் மட்டுமே இருந்தன என்பது வழக்கு! ஒரு பகுதி ரோஜாக்களை எரித்தார்கள்! இன்னொரு பகுதி ரோஜாக்களைப் புதைத்தார்கள்! இன்றும் சமாதியில், அடக்கமான இடம்/சாம்பலான இடம் என்று இரண்டுமே உள்ளது!

அ) மகர், கோரக்பூர்

ஆ) காசி (வாரணாசி)

இ) பத்ராச்சலம்

ஈ) பண்டரிபுரம்


8

கபீர், வெறுமனே சாத்திர விதிகளை மட்டும் பிடித்துக் கொண்டவர் இல்லை! இதனால் இந்து உயர் வகுப்பினருக்குப் பிடிக்காமல் போனது! வெறுமனே காபா திசைத் தொழுகைகள் பற்றிக் கருத்துச் சொன்னதால், முஸ்லீம்கள் சிலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனது!

இரு வகுப்பாரும் எந்த மன்னரிடம் கபீரைப் போட்டுக கொடுத்தனர்?

அ) காசி மகாராஜா

ஆ) குவாலியர் மகாராஜா மான்சிங்

இ) சிக்கந்தர் லோதி

ஈ) அவுரங்கசீப்

9


கபீர், உணவு முறைகளில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சொன்னாரா?அதாவது அசைவ உணவு உண்ணலாம் என்பது கபீரின் கொள்கையா?


அ) ஆம்


ஆ) இல்லை

10

இறைவனுடைய அடியவர்க்கு தோல்வியே நன்று என்பது கபீரின் கருத்து. இதே போல் இன்னொரு மகானும் சொல்லியுள்ளார். "What shall it profit a man if he gains the whole world and loses his own soul?"சொன்னது யார் ?

அ) ஏசுபிரான்
ஆ) முகம்மது நபிகள்
இ) புனித தாமஸ்
ஈ) இக்னேஷியல் லயோலா


எல்லாக் கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்கும் முதல் இரண்டு வாசகர்களுக்கு பரிசு உண்டு.

ராமகிருஷ்ண ஆசிரமத்தின் வெளியீடுகளில் (online e-store )ரூ 250 மதிப்பிற்கு புத்தகங்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவிற்குள்- ரா.கி.மி கட்டுதிட்டங்களுக்குட்பட்ட விலாசத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.

உங்கள் விடைகள் -இந்திய நேரப்படி 24 ஆம்தேதி மாலை 6 மணிக்குள் -பின்னூட்டப்பெட்டி மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

எவையேனும் தவறு என்று கருதி மாற்று விடைகளை அளித்தால் பின்னர் இடும் பின்னூட்ட சமயமே கணக்குக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தகுதியான காரணங்கள் இருந்தால் பரிசுத் தொகை இருவருக்கும் மேற்பட்ட பேர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படலாம். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

பங்கேற்கும் அனைவருக்கும் கூட ஒரு பரிசு உண்டு. அது பின்னர் தெரிவிக்கப்படும்.
---------------------------------------------------------------------

இப்போது பரிசுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி : ரவிஷங்கர் அவர்களை “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு அது என்ன ?

Viewing all articles
Browse latest Browse all 59